3 நவம்பர், 2009

புளொட் தலைவர் சித்தார்த்தன் மற்றும் முக்கியஸ்தர்கள் மீள்குடியமர்த்தப்பட்ட மாந்தை மக்களுடன் சந்திப்பு-

plote-vavuniya
மன்னார் மாவட்டத்தின் மாந்தைப் பிரதேசத்திற்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்டிருந்த புளொட் அமைப்பின் தலைவர் திரு.த.சித்தார்த்தன் மற்றும் புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் க.சிவநேசன் (பவன்), மன்னார் மாவட்டதிற்கான புளொட்டின் அரசியல் பொறுப்பாளர் சிவசம்பு ஆகியோர், செட்டிகுளம் இடம்பெயர்ந்தோர் நலன்புரி நிலையங்களிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களைச் சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்துள்ளனர். இந்தவகையில் காத்தான்குளம், வட்டக்கண்டல், பாளையடி புதுக்குளம், பாளையடிமேடு, ஆண்டாங்குளம், ஆட்காட்டிவெளி, நெடுங்கண்டல், பாப்பாமோட்டை, அடம்பன் ஆகிய பிரதேசங்களுக்கு புளொட் பிரதிநிதிகள் சென்றுள்ளனர். அப்பகுதிகளுக்கு மீள்குடியேற்றத்திற்கென அழைத்துச் செல்லப்பட்ட மக்களில் ஒருபகுதியினர் தங்களுடைய சொந்த வீடுகளுக்கு சென்றிருக்கின்ற போதிலும், மற்றும் ஒருதொகுதி மக்கள் இடைத்தங்கல் முகாம்களிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய வீடுகள் இன்னமும் பூரணப்படுத்தப்படாதநிலை, மற்றும் நிலக்கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்படாதநிலை போன்ற காரணங்களால் இவர்களை சொந்த இடங்களுக்கு கொண்டு சென்று மீள்குடியமர்த்துவதில் தாமதம் நிலவுகின்றது. எனினும் இந்த மக்கள் சுதந்திரமாக அந்தந்த பகுதிகளில் நடமாடுவதற்கு முழுமையாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இவர்களுக்கு உலருணவுப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த மக்கள் தமக்குப் பல குறைகள் இருந்தாலும், மன நிம்மதியுடனும், மகிழ்ச்சியுடனும் இருப்பதாக புளொட் முக்கியஸ்தர்களிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறிய குறைகளில் முக்கியமானதும் முதன்மையானதுமானது வீட்டு வசதியாகும். மற்றையது தங்களவு விவசாயத் தொழில்களை ஆரம்பிப்பதற்கு தங்களிடம் எதுவுமே இல்லையென்பதால், இதற்கான முழமையான உதவிகளை அரசாங்கத்திடமிருந்து பெற்றுத்தர வேண்டுமென்பதாகும். அத்துடன், தாம் கிராமங்களுக்கிடையில் செல்வதென்றால் 5, 6 மைல்கள் நடந்துசெல்ல வேண்டியிருப்பதால் தங்களுக்கு தேவையான பிரயாண வசதிகளை, ஆகக் குறைந்தது குடும்பமொன்றுக்கு தலா ஒரு சைக்கிளாவது பெற்றுத் தரவேண்டுமென்று இம்மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இவர்களில் பலர் தாம் அங்கிருந்து இடம்பெயர்ந்தபோது தங்களுடைய உழவு, இயந்திரங்கள், லேண்ட் மாஸ்டர் உள்ளிட்ட விவசாய உபகரணங்கள் மற்றும் தமது வாகனங்கள் என அனைத்தையுமே முல்லைத்தீவை நோக்கிக் கொண்டு சென்றதாகவும், அவை தற்போது அப்பகுதியில் இருப்பதால், அவற்றைத் தங்களுக்கு மீளப் பெற்றுத்தருவதற்கு உதவ வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். இதன்போது கருத்துரைத் புளொட் தலைவர் சித்தார்த்தன் மற்றும் புளொட் முக்கியஸ்தர் பவன், புளொட்டின் மன்னார் மாவட்ட அரசியல் பொறுப்பாளர் சிவசம்பு ஆகியோர் இம்மக்களின் தேவைகளையும், கோரிக்கைகளையும் தீர்ப்பதற்காக குறித்த விடயங்களை வடக்கு மீள்குடியேற்ற செயலணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.பசில் ராஜபக்ச அவர்களிடம் எடுத்துக்கூறி, இம்மக்களின் விடயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும்படி வலியுறுத்தி, விரைவில் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு முயற்சிகளை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளனர்
மேலும் இங்கே தொடர்க...
அடுத்த பிரதமராகும் தகுதி எனக்கே உண்டு : அமைச்சர் தி.மு.ஜயரத்ன



ஆதரவாளர்கள் எனக்காகத் தைத்துத் தந்த பிரதமர் உடுப்பு இன்னமும் என் பெட்டகத்தில் இருக்கிறது. அடுத்த பிரதமருக்குத் தகுதியானவன் நான் தான்" என்றார் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் தி.மு.ஜயரத்ன.

கம்பளையில் நேற்று (02.11.2009) இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்ததர். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

"இவ்வருடம் இடம் பெற்ற மாகாணசபைத் தேர்தல்களின் அடிப்படையில் பார்க்கும் போது மொத்தம் 81 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் அரசுகு ஆதரவாக 51 லட்சம் வாக்குகளும் எதிரணிகளுக்கு 31 லட்சம் வாக்குகளும் கிடைத்துள்ளன. எனவே எதிரணிகளால் எதிர்காலத்தில் 20 லட்சம் வாக்குகளை உடனடியாகத் தம் பக்கம் இழுக்க முடியாத நிலைமை காணப்படுகிறது.

30 வருடகால பிரிவினையைத் தீர்த்து வைத்தவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ என்பது உண்மை. அந்த அடிப்படையில் மகிந்த ராஜபக்ஷ பற்றிய நம்பிக்கையையும் கௌரவத்தையும் எவராலும் குறைவாக மதிப்பிட முடியாது. எனவே இன்னும் எத்தனை வருடங்கள் சென்றாலும் மகிந்த ராஜபக்ஷ பற்றிய நல்லபிப்பிராயத்தைக் குறைக்க எவராலும் முடியாது.

இன்று பிரதான அரசியற் கட்சிகளாக ஸ்ரீ.ல.சு.கவும் ஐ.தே.கவுமே உள்ளன. இவற்றில் கடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் ஸ்ரீ.ல.சு.கவுடன் இணைந்து போட்டியிட்ட ஜே.வி.பியினர் 39 ஆசனங்களைப் பெற்றனர். ஆனால் அவர்கள் தனித்து நின்று மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிட்ட போது என்ன நடந்தது?

இன்று ஊடக சுதந்திரம் மறுக்கப்பபடுவதாகவும் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்கின்றன. இதில் எதுவித உண்மையுமில்லை. காரணம் நாட்டில் பயங்கரவாதம் தாண்டவமாடிய போது எத்தனையோ பேர் கொலை செய்யப்பட்டடனர்; கடத்தப்பட்டார்கள். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் மூலம் அவை இன்று ஒழிந்துவிட்டன. எனவே இன்று மனித உரிமை மீறல்கள் உள்ளன என்பது பொய்.

பிரதமர் பதவிக்கு மிகவும் தகுதியானவன் தான் நான். காரணம் ஸ்ரீ.ல.சு.க. ஆரம்பிக்கப்பட்ட போது மூன்று செயலாளர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவராக அல்உறாஜ் பதியுதீன் மஉற்மூத் இருந்தார். அவரது அங்கத்துவ இலக்கம் 12. அவருக்கு அடுத்த படியாக 13ஆம் இலக்க அங்கத்தவன் நானே. 58 வருட காலமாக ஒரே கட்சியில் அங்கம் வகிக்கின்றேன்.

தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஒருமுறை பிரதமர் பதவி தருவதாகக் கூறினார். எனினும் எனக்குக் கை கூடவில்லை.எனது ஆதரவாளர்கள் ஒரு சமயம், அடுத்த பிரதமர் நான்தான் எனக்கூறி எனக்கு வாழ்த்துத் தெரிவிக்க வந்த சமயம், பிரதமர் உடை எனக்கூறி சம்பிரதாய தேசிய உடையை எனக்குத் தந்திருந்தனர்.

அது இன்றும் எனது பெட்டகத்தில் பாதுகாப்பாக இருக்கின்றது. இருப்பினும் நாட்டின் மூன்றாவது உயர் பிரஜையாக என்னைப் பதவி உயர்த்தி எனக்கு சபாநாயகர் பதவி தருவதாகக் கூறினர். நான் அதை மறுத்து விட்டேன்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...
சட்டவிரோத குடியேற்றவாசிகளை தாய்நாட்டுக்கு அனுப்புமாறு வெளிவிவகார அமைச்சு கோரிக்கை


வெளிநாடுகளில் வழி மறிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சட்ட விரோத குடியேற்றவாசிகளைத் தாய் நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு சம்பந்தப்பட்ட நாடுகளிடம் வெளிவிவகார அமைச்சு கேட்டுள்ளது.

அவுஸ்திரேலியா, இந்தோனேஷியா, கனடா ஆகிய நாடுகளின் குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளினால் சட்டவிரோத குடியேற்றவாசிகள் பலர் வழி மறிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லகம தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களுள் இலங்கையைச் சேர்ந்தவர்களும் இருப்பதாக அமைச்சர் கூறினார். இவர்களில் இலங்கையர் பற்றி அறிந்து கொள்ள அந்தந்த நாட்டு இலங்கைக்கான தூதரக அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...
ஐக்கிய தேசிய முன்னணி இன்று கைச்சாத்து



கட்சியின் தலைமையில் பொதுக் கூட்டமைப்பான ஐக்கிய தேசிய முன்னணி இன்று செவ்வாய்க்கிழமை காலை உத்தியோகபூர்வமாக கைச்சாத்திடப்பட்டுள்ளது. நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் வைத்து முற்பகல் 11.30 மணி வரையிலான சுபநேரத்தில் இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டமைப்பில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு, புதிய சிஹல உறுமய உள்ளிட்ட 20 கட்சிகளும், அமைப்புக்களும் கைச்சாத்திட்டுள்ளன.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது உட்பட 10 அம்ச இணக்கப்பாடுகளை கருத்தில் கொண்டே எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டமைப்பான ஐக்கிய தேசிய முன்னணி உருவாக்கப்படுள்ளது.

இதற்கமைய, ஐக்கிய தேசிய முன்னணி என்ற இந்த புதிய அரசியல் முன்னணி ஆட்சியமைத்ததன் பின்னர் 180 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக ரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 13ஆம் திகதி விசேட வாகன பவனி மூலமாக கண்டிக்குச் சென்று, தலதா மாளிகையில் விசேட பூஜை வழிபாடுகளிலும் ஈடுபடவுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...
தகவல்களை பொன்சேகா வழங்குவதற்கோ அமெரிக்க கோருவதற்கோ உரிமையில்லை: அரசாங்கம்


அனுமதியின்றி மூன்றாம் தரப்புக்கு தகவல்களை வழங்குவதற்கு கூட்டுப்படைகளின் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு சட்ட ரீதியாக எவ்விதமான அனுமதியும் இல்லை என்பதுடன், தகவல்களை கோருவதற்கு அமெரிக்காவுக்கு எவ்விதமான உரிமையும் கிடையாது என அரசாங்கம் நேற்று திங்கட்கிழமை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவினால் தவறான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதனால் அவ்வழைப்பை வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறு அமெரிக்க அரசாங்கத்திற்கு உடனடியாக அறிவிக்குமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதுவரூடாக அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சரத்பொன்சேகா தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ளும் தகவல் மூலமாக அமெரிக்க ஜெனரல் சரத்பொன்சேகாவை பயன்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக வெளியான செய்திகளையடுத்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவரை வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்து மேற்படி விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியதன் பின்னர் விசேட ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தியது.

வெளிவிவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்ற இந்த விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

"அமெரிக்காவுக்குத் தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ள கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகாவை தகவல்களை தெரிந்கொள்ளும் பொருட்டே அமெரிக்கா பயன்படுத்துவதற்கு முயற்சிக்கின்றது. பாதுகாப்பு அமைச்சின் செயலளார் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக் கொள்வதற்கே முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிரேஷ்ட இராணுவ அதிகாரியான ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு மூன்றாந்தரப்புக்குத் தகவல்களை வழங்குவதற்கு சட்டரீதியில் எவ்விதமான உரிமையும் இல்லை என்பதுடன் அமெரிக்காவினால் தகவல்களை கோரவும் முடியாது. ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் கடந்த 28 ஆம் திகதி தொøலபேசி கலந்துரையாடலை மேற்கொண்ட உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சு நாளை (4 ஆம் திகதி) நேர்காணல் ஒன்றுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. அவ்வழைப்பு தவறாது என்றும் அதனை உடனடியாக நிறுத்துமாறும் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை உடனடியாக அமெரிக்க அரசாங்கத்திற்கு அறிவிக்குமாறும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவரிடம் கேட்டுக்கொண்டுள்ளேன்.

கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி சரத் பொன்சேகா இலங்கை படைகளின் உயர்நிலை அதிகாரியாவார். அவரை தகவல் பெற பயன்படுத்துவதற்கு முயற்சிப்பது இலங்கையின் இறைமைக்கு எதிரான செயற்பாடாகும்" என்றார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளிக்கையில்,

கேள்வி; அமெரிக்க தூதுவரின் பதில் எவ்வாறு இருந்தது?

பதில்: கவனம் செலுத்தி ஒத்துழைப்பு நல்கினார்

கேள்வி: அமெரிக்க சட்டத்திட்டத்தின் பிரகாரம் ஜெனரல் சரத்பொன்சேகா தகவல்களை வழங்கமுடியுமா?

பதில்: நான் அமைச்சர். அரசாங்கத்திற்கும் அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பிற்கும் கட்டுப்பட்டவன். அதேபோல் படையின் சிரேஷ்ட அதிகாரி முப்படைகளின் தளபதியான ஜனாதிபதிக்கு மட்டுமே தகவல்களை வழங்கமுடியும்.

கேள்வி: ஜெனரல் சரத் பொன்சேகா கிறீன் காட் ஹோல்டர் என்பதனால் அமெரிக்காவினால் விசாரிக்க முடியும் தானே?

பதில்: கிறீன் காட் ஹோல்டர் என்றாலும் அவர் இலங்கை பிரஜையாவார். எனது பைக்குள் கிறீன் காட் இருப்பதற்காக நான் அரசாங்கத்திகோ அமைச்சு பதவிக்கோ எதிராக செயற்படமுடியாது.

கேள்வி:/b> ஜெனரல் சரத் பொன்சேகா நேர்காணலில் பங்குபற்றுவரா?

பதில்:அதனை அவரிடமே கேட்க வேண்டும் அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதுவருக்கு இது தொடர்பில் தெளிவுப்படுத்தியுள்ளோம்
மேலும் இங்கே தொடர்க...
16,881 குடும்பங்களைச் சேர்ந்த 51,982 பேர் வவுனியா நலன்புரி நிலையங்களிலிருந்து யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றம்-

இதுவரையில் 16ஆயிரத்து 881குடும்பங்களைச் சேர்ந்த 51ஆயிரத்து 982பேர் வவுனியா நலன்புரி நிலையங்களிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மீள்குடியேற்றப்பட்டிருப்பதாக யாழ். அரசஅதிபர் கே.கணேஸ் தெரிவித்துள்ளார். இவர்களில் அல்லைப்பிட்டி, மண்கும்பான் பிரதேசத்தில் 433குடும்பங்களைச் சேர்ந்த 1,450பேரும், யாழ்ப்பாணம் நலன்புரி முகாம்களின் 2,497குடும்பங்களைச் சேர்ந்த 7,052பேரும், வவுனியா மன்னார் நலன்புரி முகாம்களின் 13ஆயிரத்து 951குடும்பங்களைச் சேர்ந்த 43ஆயிரத்து 350பேரும் உள்ளடங்குகின்றனர். இவர்கள் சொந்த இடங்களிலும், உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன். அவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு தேவையான உலருணவுப் பொருட்களும் 5ஆயிரம்ரூபா அரசாங்க நிதியுதவி உடனடியாகவும் (யூ.என்.எச்.சீ.ஆர்) ஐ.நா அகதிகளுக்கான பேரவையின் 20ஆயிரம் ரூபா வங்கி வைப்பும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனைவிட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதியொன்றும் ஐ.நா.அகதிகளுக்கான பேரவையினால் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
மூன்றாம் தரப்பிடம் தகவல்களை வெளியிட ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு அதிகாரம் கிடையாதென வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு-

இலங்கை அரசாங்கத்தின் முன் அனுமதியின்றி தம் வசமுள்ள தகவல்களை மூன்றாம் தரப்பினரிடம் வெளியிடுவதற்கான எவ்வித அதிகாரம் முப்படைகளின் பிரதானியான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு கிடையாதென வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் இன்றுபிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கான விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அந்நாட்டு உள்ளகப் பாதுகாப்பு திணைக்களம் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான தகவல்களைத் தருமாறு நவம்பர் மாதம் 04ம் திகதி பிற்பகல் 3மணிக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீஷியா புட்னரிடம் இன்று வெளிவிவகார அமைச்சினால் விளக்கம் கோரப்பட்டதைத் தொடர்ந்தே இந்த ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்றுள்ளது, ஜெனரல் சரத்பொன்சேகாவை நேர்காணலுக்கு வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பினை இரத்துச் செய்யுமாறு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரிடம் கேட்டுக் கொண்டதாகவும் வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார். அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புக்களில் உள்ளவர்கள் வசமுள்ள சிறப்புத் தகவல்கள் விடயத்தில் முழுமையான அதிகாரம் நாட்டின் தலைவரான ஜனாதிபதிக்கு மாத்திரமே இருப்பதாகவும், இதுபோன்ற தகவல்களை மூன்றாம் தரப்பினரிடம் வெளியிடுவதற்கான உரிமை ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு கிடையாதென்பதே அரசின் நிலைப்பாடென்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இங்கே தொடர்க...