12 ஜனவரி, 2010

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்கள் தொடர்பகங்களை அமைக்குமாறு மீள்குடியேறியுள்ள மக்கள் புளொட் இயக்கத்திடம் வேண்டுகோள்

வவுனியாவை தளமாக கொண்டு இயங்கிவரும் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் மக்கள் பணிகளை முல்லைத்தீவு, கிளிநொச்சி மவாட்டங்களுக்கு விஸ்தரிக்குமாறு அவ் பகுதி மக்கள் தலைவர் சித்தார்த்தனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்மையில் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு அவ்மக்களின் நிவர்த்தி செய்யப்படாமல் இன்னும் தேவையாகவுள்ள அடிப்படை வசதிகளை பார்வையிட்டும் குறைநிறைகளை கேட்டறிந்துவரும் புளொட் அமைப்பின் தலைமையிடம் இந்த வேண்டுகோளை அப்பகுதி மக்கள் நேரடியாகவே விடுத்துள்ளனர்.
அவ் மக்களின் வேண்டுதலிற்கு அமைய, அவர்களுடன் பக்கதுணையாக அருந்கே இருந்து மக்கள் பணிகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என்று புளொட் தலைமைப்பீடம் வேண்டுகோள் விடுத்துள்ள மக்களிற்கு தெரிவித்துள்ளதுடன், அதற்கான நடவடிக்கைகள் குறித்து உயர்பீடம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

கருத்துக் கணிப்பீடு:மஹிந்த ராஜபக்ஷவூக்கு 62 வீதம் சரத் பொன்சேகாவூக்ககு 28 வீதம்

அரசுக்கு எதிரான ஊடகங்கள் என்னதான் மக்களின் மனதை மாற்ற முனைந்தாலும், பெரும்பான்மையான மக்கள் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கே தமது ஆதரவை வழங்குவார்கள் என்பதை, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு முக்கியமான கருத்துக் கணிப்புகள் எடுத்துக் காட்டி நிற்கின்றன.

கடந்த வாரம், களனி பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீடம் நடாத்திய ஒரு கருத்துக் கணிப்பில், மகிந்த ராஜபக்சவுக்கு 62 வீதமான மக்களின் ஆதரவும், சரத் பொன்சேகாவுக்கு 28 வீதமான மக்களின் ஆதரவும் இருப்பது தெரியவந்துள்ளது.
இதை முன்னின்று நடாத்திய பேராசிரியர் கருணரத்ன கருத்துத் தெரிவிக்கையில், சரத் பொன்சேகாவுக்கு நகரப்புறங்களில் தான் ஓரளவு ஆதரவு இருப்பதாகவும்., கிராமப்புறங்களில் மகிந்த ராஜபக்சவுக்கு அமோக ஆதரவு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த வாரம் இன்னொரு சுயாதீனமான அமைப்பான ~நெக்ஸஸ் ரிசேர்ச் குறூப் என்ற நிறுவனம் நடாத்திய கருத்துக் கணிப்பின்படி, மகிந்த ராஜபக்சவுக்கு 61.18 வீதமான ஆதரவும், சரத் பொன்சேகாவுக்கு 33.40 வீதமான ஆதரவும் மட்டுமே இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. 5.42 வீதமான மக்கள் தமது ஆதரவு யாருக்கு என்பதை இன்னமும் தீர்மானிக்கவில்லை.

இந்த இரு கருத்துக் கணிப்புகளும் எந்தவித உள்நோக்கங்களும் இன்றி, சுயாதீனமாக நடாத்தப்பட்டவை என்றபடியால், மகிந்த ராஜபக்ச மீண்டும் எவ்வித சிரமமும் இன்றி ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது நிட்சயமாக தெரிய வருகிறது.

அதேவேளையில், பொதுமக்கள் மத்தியில் இருந்தும், அவதானிப்பின் அடிப்படையில் ஒரு கருத்துக் கணிப்பும் முன்வைக்கப்படுகின்றது. அதாவது இலங்கையின் சனத்தொகையில் 72 வீதமானவர்கள் சிங்கள மக்கள். மிகுதி 28 வீதத்தினரில் 12 வீதமானவர்கள் வடக்கு கிழக்கு தமிழர்கள். மிகுதி 16 வீதம் முஸ்லீம் மக்களும், மலையக தமிழ் மக்களும் ஆவர்.

இதில் 72 வீதமான சிங்கள மக்களில் 50 வீதத்தினர் மகிந்தவுக்கும், 22 வீதத்தினர் சரத் பொன்சேகாவுக்கும் வாக்களிக்கக் கூடும். 16 வீதமான முஸ்லீம் - மலையக மக்கள், மகிந்த ராஜபக்சவுக்கு 8 வீதமாகவும் சரத் பொன்சேகாவுக்கு 8 வீதமாகவும் வாக்களிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். 12 வீதமான வடக்கு – கிழக்கு தமிழ் மக்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேண்டுகோளின்படி, சரத் பொன்சேகாவுக்கு 8 வீதமானோர் வாக்களித்தாலும், குறைந்தது 4 வீதமான தமிழ் மக்களாவது மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களிப்பார்களென எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்படிப்பார்த்தால் மகிந்த ராஜபக்சவுக்கு 62 வீதமும், சரத் பொன்சேகாவுக்கு 38 வீதமும் வாக்குகள் கிடைக்கக் கூடிய சூழலே காணப்படுகிறது. பொதுமக்களின் இந்தக் கணிப்பீடும், களனி பல்கலைக்கழகத்தினதும், "நெக்ஸஸ் ரிசேர்ச் குறூப்" இனதும் கணிப்பீட்டு முடிவுகளை அடியொற்றியே காணப்படுவதை அவதானிக்கலாம்.

பொதுவாக, பொதுமக்கள் மத்தியில் உள்ள நிமையை அவதானிக்கையிலும், ஆரம்பத்தில் சரத் பொன்சேகாவுக்கு இருந்த ஆதரவு வீழ்ச்சியடைந்து செல்வதை அவதானிக்க முடிகிறது. அதற்குக் காரணங்கள், சரத் பொன்சேகாவுக்கு என கட்சி ஒன்று இல்லாமல் இருப்பதாலும், அவரை ஆதரிக்கும் இரண்டு முக்கிய கட்சிகளான ஐக்கிய தேசியகட்சியும், ஜே.வி.பியும் எதிரும் புதிருமான கொள்கைகளை கொண்டிருப்பதாலும், சரத் பொன்சேகா தற்செயலாக வெற்றி பெற்றாலும், யாருடைய சொற்படி அவர் ஆட்சி நடாத்துவது என்ற அதிகார இழுபறி ஏற்படலாம் என மக்கள் கருதுகின்றனர்.
அதுவுமல்லாமல், சரத் பொன்சேகா வெற்றி பெற்றால் வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்துவிட்டு, ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டபடி ஆட்சியை அவரிடம் ஒப்படைப்பாரா என்ற சந்தேகமும் ஐக்கிய தேசியகட்சியிடம் நிலவுகின்றது.


மறுபக்கத்தில், தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் சரத் பொன்சேகாவும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இரகசிய உடன்படிக்கை ஒன்றைச் செய்துள்ளதாக சிங்கள மக்கள் மத்தியில் கருத்தொன்று உருவாகியுள்ளதால், சரத் பொன்சேகாவுக்கான ஆதரவு சிங்கள மக்கள் மத்தியில் திடீரென வீழ்ச்சி அடைந்துள்ளது.
அதனால் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றாவது வெற்றி பெற முடியுமா என்ற அங்கலாயப்பில் சரத் பொன்சேகா இருப்பதைக் காணமுடிகிறது. ஆனால் சரத் பொன்சேகா தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு பல பொய் வாக்குறுதிகளை வழங்கிய போதும், தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை பற்றி எதுவும் குறிப்பிடாததால், கூட்டமைப்பினரிடையிலேயே மிகுந்த அதிருப்தி காணப்படுவதையும், சம்பந்தன் கோஷ்டியினர் தனிமைப்பட்டுச் செல்வதையும் அவதானிக்க முடிகிறது.
அதனால் தான் சம்பந்தர் – மாவை கோஸ்டி அவசர அவசரமாக யாழ்ப்பாணத்துக்கு ஓடி தமிழரசுக்கட்சி மாநாட்டைக் கூட்டி தங்களது தவறான செயல்பாட்டுக்கு அங்கீகாரம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

அதேவேளையில,; தான் பதவிக்கு வந்தால் மகிந்த ராஜபக்சவை ஆதரிக்கும் அரசியல் கட்சிகள், அரச ஊழியர்கள், படையினர் என்போரை பழிவாங்கப் போவதாக, சரத் பொன்சேகா கூட்டங்களில் பகிரங்கமாகப் பேசி வருவதால், மக்கள் மத்தியில் ஒருவித பீதி காணப்படுவதுடன், மகிந்த ராஜபக்ச நிச்சயம் வெல்வார் என்றபடியால், தேர்தலின் பின் சரத் பொன்சேகாவுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் என்ன நடக்குமோ என்ற அச்சம் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்hள் மத்தியிலும் காணப்படுகிறது.
இரு முக்கியமான கருத்துக் கணிப்புகள், மகிந்தவின் அபரிமிதமான வெற்றியை கட்டியம் கூறுகின்றன!
இலங்கையில் ஊடகத்துறையைப் பொறுத்தவரையில், மொழி வித்தியாசம் இன்றி சகல ஊடகங்களும், ஐக்கிய தேசியக்கட்சிக்கு சாதகமாகவே கடந்த 60 வருடங்களாக செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்த விடயம். எனவே வழமைபோலவே, இம்முறை ஜனாதிபதி தேர்தலிலும், அவை எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாகவே பெரும் எடுப்பில் பிரச்சாரம் செய்து வருகின்றன.
ஆனால் கடந்த காலங்களைப் போலவே, தேர்தல் முடிவு வெளிவரும் போது, மக்கள் பெரும்பாலான ஊடகங்களின் கருத்துகளுக்கு எதிராக தீர்ப்பை வழங்கியிருப்பதைக் காணமுடியும் என்றும் அறிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

பயங்கரவாதத்துக்கு ஆதரவான சில குழுக்கள் ஈழப் போராட்டத்துக்கு வழி அமைக்க எத்தனம்-ஜனாதிபதி

பயங்கரவாதத்திற்குத் தொடர்ச்சியாக ஆதரவு தெரிவித்துவரும் சில குழுக்கள், மீண்டுமொரு ஈழப் போராட்டத்திற்கு வழி அமைத்துக் கொடுக்க முயற்சி செய்கின்றன என்று எச்சரித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்த எத்தனத்தைத் தடுக்க இந்நாட்டு மக்கள் அனைவரும் தயாராக வேண்டும் என்றும் தெரிவித்தார். கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்ட பத்தில் நேற்று அவர் தமது ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு உரையாற்றியபோதே இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.

அந்த நிகழ்வில் உரை நிகழ்த்துகையில் அவர் மேலும் கூறியவை வருமாறு: 2005 இல் நான் நாட்டைப் பாரமெடுக்கும்போது இந்நாடு பாரிய பயங்கரவாதப் பிரச்சினையை எதிர்கொண்டிருந்தது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒன்று இங்கிருந்து நாட்டை அழித்துக்கொண்டிருந்தது. பயங்கரவாதம் ஒருபுறமிருக்க பொருளாதாரப் பிரச்சினையாலும் நாடு சீரழிந்துகொண்டிருந்தது. விவசாயிகள் தமது உற்பத்திகளை விற்க முடியாது நஞ்சு அருந்தி உயிரை விட்டனர். நான் பதவியேற்றதும் இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் இல்லாதொழித்தேன். சர்வதேச நாடுகளின் அழுத்தத்திற்கு அடிபணியாது பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டினேன். இது தொடர்பில் பல நாடுகள் எனக்குக்கடுமையான நிபந்தனைகளை விதித்தன. அவை அனைத்தையும் நான் தூக்கி வீசிவிட்டேன்.

புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நிறுத்த முயற்சி செய்து தோற்றுப் போனவர்கள் இப்போது ஒன்றிணைந்து எனக்கு எதிராக செயற்படுகின்றனர். இன்று நாம் முற்றாக சுதந்திரமடைந்த நாட்டில் வாழுகின்றோம். முழுமையான சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்றோம். மாற்றமுடியாத ஒன்றிணைந்த ஒரு சமூகமாக எம்நாட்டு மக்கள் இப்போது இருக்கின்றனர். புலிகளை முற்றாக ஒழித்து நாட்டுக்கு முழுமையான சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுக்க எமது இளைஞர்கள் கடும் தியாகத்தைச் செய்தனர் என்பதை எம்மால் மறுக்க முடியாது. எம்முள் உள்ள இப்போதைய பிரச்சினை அபிவிருத்தியே பயங்கரவாதத்தை ஒழித்ததன் பிறகு இப்போது எம்முன்பாக உள்ள பிரச்சினை அபிவிருத்திதான். நாம் இப்போது பல அபிவிருத்திட்டங்களை நிறைவு செய்துள்ளோம். சில திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றோம். இந்நாட்டு மக்கள் அனைவரும் இந்நாட்டில்தான் வாழவேண்டும். அவர்களுக்கு இங்கு வாழ இடமில்லை என்று எவராலும் கூறமுடியாது.

எமது நாட்டு இளைஞர்கள் வெளிநாடுகளுக்குத் தொழில்வாய்ப்புத் தேடிச் செல்லும் நிலை மாறி வெளிநாட்டு இளைஞர்கள் எமது நாட்டுக்குத் தொழில் தேடிவரும் நிலை வரும். இந்த நாட்டில் ஊழல், மோசடிகளை முற்றாக ஒழித்துக்கட்ட வேண்டும். ஜனவரி 27 ஆம் திகதிக்குப் பின் நான் ஊழல், மோசடிகளை முற்றாக ஒழித்துக்கட்ட என்னை அர்ப்பணிப்பேன். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்திற்கு அளிக்கும் வாக்குகள் இந்நாட்டின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வாக்குகளாகும்.
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்ற சக்திகள் இன்னும் உள்ளன. இன்னொரு ஈழப் போராட்டத்திற்கு வழி அமைக்க அந்த சக்திகள் முயற்சி செய்துகொண்டிருக்கின்றன.

அவ்வாறான தேச விரோத சக்திகளைத் தோற்கடிப்பதற்கு இந்நாட்டு மக்கள் தயாராக வேண்டும். வடக்கு மக்கள் அவர்களது தேவைகளைத் தாங்களே நிறைவேற்றிக் கொள்வதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் விதத்தில் அங்கு விரைவில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

அரசியல் சாசனத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி சிறுபான்மை மக்களுக்கு நிரந்தர தீர்வு- சரத்பொன்சேகா

இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தற்காலிகத் தீர்வு வழங்காது. அரசியல் சாசனத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி அதனூடாக நிரந்தரத் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்தோடு சிறுபான்மை மக்களின் அரசியல், கலாசாரம், பண்பாட்டு மரபுரிமைகள் மற்றும் பாதுகாப்பு என்பன உறுதி செய்யப்படும் என எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் வெற்றி பெற்றால் இலங்கையில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்படும்படுமென அரசாங்கம் மேற்கொள்ளும் பிரசாரங்களை நம்பி பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஜனநாயக ஆட்சி எவ்வாறு அமையவேண்டும் என்பதனை தற்போதைய அரசாங்கத்திற்கு எதிர்வரும் நாட்களில் கற்பிப்போம் எனவும் அவர் கூறினார்.
சிறுபான்மை இன சமூகத்தைச் சார்ந்த பிரதி நிதிகளை நேற்று திங்கட்கிழமை ஜெனரல் சரத்பொன்சேகா தமது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே ஜெனரல் சரத்பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இலங்கையின் அரசியல் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தி சகல இன மக்களுக்கும் சமமான உரிமைகளை வழங்கி கேள்விக்குறியாகிப்போயுள்ள ஜனநாயகத்தை ஸ்தாபிப்பதே எனது அரசியல் பிரவேசத்தின் பிரதான நோக்கம். ஆனால் இன்று அரசாங்கம் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகளுக்கோ அல்லது நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கோ தீர்வுகளை ஏற்படுத்தாமல் தேர்தல் வெற்றிகளை மாத்திரம் கருத்தில் கொண்டு செயற்பட்டு வருகின்றது.
எனது வெற்றியின் பின் ஒரு போதும் இராணுவ ஆட்சி ஏற்படாது. ஏனென்றால் நான் தற்போது இராணுவ அதிகாரியல்ல. மாறாக ஜனநாயக வாதியே. என்னை இராணுவ ஆட்சியாளர் என்று கூறும் அரசாங்கம் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் 5 இராணுவ அதிகாரிகளை களமிறக்க உள்ளது.
உண்மையில் தற்போதைய அரசாங்கம்தான் இராணுவ ஆட்சியொன்றை முன்னெடுத்து வருகின்றது. எவ்வாறாயினும் இலங்கையில் பல்லினம் வாழும் ஒரு சூழல் உள்ளமையால் அதனடிப்படையில் அரசியல் மற்றும் பொருளாதார செயற்பாடுகளை ஏற்படுத்த வேண்டும் எனக் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

மஹிந்தவும் சரத்தும் வெளிநாட்டு முகவர்கள் - ரத்மலானை கூட்டத்தில் விக்ரமபாகு

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மகிந்த ராஜபக்ஷவும், சரத் பொன்சோகாவும் மேலை நாடுகளின் முகவர்கள். அவர்களை நம்பி மக்கள் ஏமாற்றமடைந்துவிடக் கூடாது என கலாநிதி விக்ரமாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடும் விக்ரமபாகு கருணாரத்ன ரத்மலானை - கம்கரு செவன நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
ஏராளமான தமிழ் மக்களைக் கொன்றொழித்த இவர்கள் இருவரும் இன்று ஜனநாயகத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாட்டு மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.
மேலும் இங்கே தொடர்க...

இன்றும் நாளையும் தபால் மூல வாக்களிப்பு

எதிர்வரும் 26ம் திகதியன்று நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கான
தபால் மூல வாக்களிப்பு நாடெங்கும் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
இத்தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 4 இலட்சத்து ஆயிரத்து 118 பேர் விண்ணப்பித்து ள்ளனர். அனைத்து மாவட்டங்களிலு முள்ள சுமார் 15 ஆயிரம் அரச அலுவலகங்களில் தபால் மூலம் வாக்களிப்புக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணி தபால் திணைக்களத்தினால் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும் இங்கே தொடர்க...