9 ஜூலை, 2010

இலங்கை அரசுடன் பேசி நடவடிக்கை : சிதம்பரம் பதில்


சென்னை : தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையால் தாக்கப்பட்ட பிரச்னைகளை குறித்து, இந்திய வெளிவிவகாரத் துறை இலங்கை அரசுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கும் என, முதல்வர் கருணாநிதிக்கு மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பதிலளித்துள்ளார். இலங்கை கடற்படையினரால் அப்பாவி தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி, ஒருவர் படுகொலை செய்யப்பட்டது குறித்து கண்டனம் தெரிவித்து, இத்தகைய சம்பவங்களை மத்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து, பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி அவசர கடிதம் ஒன்றை அனுப்பினார். அக்கடிதத்தின் நகல், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திற்கு அனுப்பப்பட்டது. அக்கடிதம் கிடைத்ததும் அவர், தமிழக முதல்வர் கருணாநிதிக்கு இன்று எழுதிய கடிதத்தில், "தங்கள் கடிதம் தொடர்பாக பிரதமர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோரிடம் எடுத்துரைத்துள்ளேன்; விரிவாக விவாதித்திருக்கிறேன். இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகம் இலங்கை அரசுடன் பேசி, இப்பிரச்னை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்' என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

கே.பியின் சொத்து விபரங்களை வெளியிடுமாறு ரணில் கோரிக்கை

அரசாங்கத்தின் கட்டுப் பாட்டில் உள்ள கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் சொத்து விபரங்களை அரசாங்கம் வெளியிட வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

கேபிக்குச் சொந்தமாக 18 கப்பல்களும் 500 பெற்றோல் நிரப்பும் நிலையங்களும் இருந்ததாக செய்திகள் வெளியாகி இருந்ததை சுட்டிக்காட்டிய ரணில் விக்கிரமசிங்க இது குறித்த விபரங்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.

குறித்த சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டு அந்தப்பணம் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐநா நிபுணர் குழுவை ஏற்குமாறு அமெ. மீண்டும் வலியுறுத்து



இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. நியமித்துள்ள நிபுணர் குழுவை ஏற்றுக் கொள்ளுமாறு அமெரிக்கா இலங்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

நிபுணர் குழுவை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்ற தீமானத்தை இலங்கை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மார்க் டோனர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவினை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்வது சிறந்ததென அமெரிக்கா கருதுவதாக மார்க் டோனர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

உறுதிமொழிகளை நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்த வேண்டும்-த.தே.கூ

இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களை உறுதியளித்தபடி மீளக்குடியேற்றுமாறும் உரிய அரசியல் தீர்வைக் காணுமாறும் இலங்கை அரசாங்கத்திற்கு இந்திய அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை நேற்று சந்தித்துப் பேசிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை புதுடில்லிக்கு விஜயம் செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் இந்திய உள்துரை அமைச்சர் பா. சிதம்பரம், நிதியமைச்சர் பிராணப் முகர்ஜி ஆகியோரை நேற்று முன்தினம் சந்தித்து பேசியிருந்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை இவர்கள் சந்தித்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் எம்.பிக்களான மாவை சேனாதிராஜா, அப்பாத்துரை விநாயகமூர்த்தி, செல்வம் அடைக்காலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், எஸ். சுமந்திரன், ஆகியோரே நேற்று இந்திய வெளிவிவகார அமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். இந்தச் சந்திப்பின் போது உறுதியளித்தபடி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை மீளக்குடியேற்றுமாறும் அரசியல் தீர்வை உரிய வகையில் காணுமாறும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று இவர்கள் கேட்டுள்ளனர்.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஒருவருடம் ஆகிவிட்ட போதிலும் அரசியல் தீர்வு காணப்படவில்லை. ஏறத்தாழ 50 ஆயிரம் பேர் தொடர்ந்தும் முகாம்களிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை மீளக்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மீள் குடியேற்றம் என்ற பெயரில் முகாம்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களும் மீண்டும் தற்காலிக முகாம்களில் தஞ்சமடையும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் இந்தச் சந்திப்பில் எடுத்துக்கூறியுள்ளனர்.

இதேவேளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி. ராஜாவையும், தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் சந்தித்து நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதன் போது இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண இந்தியா தீவிரமாக முயற்சிக்க வேண்டும் என்று கூட்டமைப்பு எம்.பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழர் பகுதிகளில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படுவது கவலை அளிக்கின்றது. இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்காக பாராளுமன்றத்திலும், வெளியிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குரல் கொடுக்கும். குறிப்பாக முகாம்களில் வசிக்கும் மக்களை மீளக்குடியமர்த்தவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், ஏற்பாடு செய்யுமாறு நாம் இந்திய மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று சந்திப்பில் கருத்து தெரிவித்த டி. ராஜா கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

சில தினங்களில் போராட்டம் புஸ்வாணம் ஆகும்-ரவி கருணாநாயக்க

விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினரது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கண்டு ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அஞ்சி விடப் போவதில்லை. அத்துடன் நிபுணர் குழுவை கலைத்து விடப் போவதுமில்லை. போராட்டம் இன்னும் சில தினங்களில் புஸ்வாணமாகி விடும். எனவே, இந்தப் பாராளுமன்றத்தை கேலிக் கூத்தாக்க வேண்டாம் என்று ஐக்கிய தேசியக் கட்சி எம். பி. ரவி கருணாநாயக்க நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ரவி கருணாநாயக்க எம்.பி. இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவர் இங்கு தன்னிச்சையான முறையில் செயற்பட்டு வருகின்றார். ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தின் மீது கும்பலுடன் சென்று தாக்குதல் நடத்துகின்றார். அவ்வலுவலகத்துக்கு முன்பாக உண்ணாவிரதத்தை நடத்துகிறார். இவ்வாறு அவர் நடந்து கொள்வதற்கு அரசாங்கத்தின் ஆதரவு இருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது. உண்மையில் அவரது செயற்பாட்டுக்கு அரசாங்கத்தின் ஆதரவு இல்லையெனில் இந்த அமைச்சர் பாராளுமன்றத்தையும் அதேநேரம் அமைச்சரவையையும் கேலிக்கூத்தாக்குவதற்கு அரசாங்கம் இடமளிக்கக் கூடாது.

வீரவன்சவின் குழுவினரது உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பான் கீ மூன் அஞ்சி விடவும் மாட்டார். நிபுணர் குழுவை கலைத்து விடவும் மாட்டார். ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த உண்ணா விரதம் இன்னும் சில தினங்களில் கைவிடப்பட்டு விடும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

குற்றம் இழைக்கப்பட்டிருப்பின் ஆபத்தில் விழுகின்ற முதலாவது நபர் நானே



யுத்த களத்தில் குற்றங்கள் இழைக்கப்பட்டிருந்தால் அந்தச் சந்தர்ப்பத்தில் பொறுப்பானவன் என்ற அடிப்படையில் முதலில் ஆபத்தில் விழுகின்ற நபர் நானாகத்தான் இருப்பேன். கூண்டில் போடப்படுபவரும் நான்தான். எனவே அவ்வாறான குற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பதை நான் ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்து விட்டேன் என்று முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் சரத் பொன்சேகா எம்.பி. தெரிவித்தார். பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராய்வதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தினால் நிறுவப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவுக்கு ஜெனரல் சரத் பொன்சேகா சாட்சியம் வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருக்கின்றதே என்று ஊடகவியலாளர் ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த ஜெனரல் பொன்சேகா எம்.பி. கூறுகையில்,

யுத்தக் குற்றம் ஒன்று இலங்கையில் இடம்பெற்றிருக்குமானால் அது தொடர்பில் யார் சாட்சியமளித்தாலும் அதில் முதலாவதாக சிக்கலுக்குள் அல்லது ஆபத்துக்குள் விழுகின்ற நபராக நானே இருக்கின்றேன்.

இராணுவத் தளபதி என்ற வகையில் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை கொண்டு நடத்தியது நான்தான். அந்த வகையில் யுத்த களத்தில் இடம்பெற்ற அனைத்து விடயங்களுக்கும் பொறுப்புக் கூற வேண்டியுள்ளவனாக இருக்கிறேன். இதனை நான் ஏற்கெனவே பகிரங்கமாக அறிவித்திருக்கிறேன். அதனை தொடர்ந்து கூறி வருகிறேன். முன்னெடுக்கப்பட்ட யுத்தமானது சர்வதேச சட்டத்துக்கு அமைவாகவே இருந்தது. இதில் யுத்தக் குற்றச்சாட்டுகள் எதுவும் இடம்பெறவில்லை என்பதை உறுதியாக கூற முடியும்.

அத்துடன் இலங்கையில் கடப்பாடுகள் குறித்து ஆராய்ந்து தனக்கு ஆலோசனை வழங்குவதற்கென ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவின் உண்மையான நிலைப்பாடுகள் பற்றி தவறானதும் திரிபுபடுத்தப்பட்டதுமான கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்ற ஒரு சில கோமாளிகளை அரசாங்கம் உற்சாகப்படுத்தி அல்லது ஊக்குவித்து வருகின்றமையைக் காண முடிகின்றது.

இவ்வாறான கோமாளிகள் இன்று தாங்களே யுத்தத்தை மேற்கொண்டது போலவும் அதில் கிடைத்த வெற்றிக்கு தாங்களே காரணகர்த்தாக்கள் என்பது போலவும் பேசி வருகின்றனர். அத்துடன் சரத் பொன்சேகா வெளியில் சென்றால் பாரிய சிக்கல் வந்து விடும் என்றும் கூறுகின்றனர். எனவே எதை எதையோ மறைத்து இங்கு பிரச்சினை இருப்பதைப் போன்ற மாயையை தோற்றுவிக்கின்றனர்.

நான் பொய் சாட்சி சொல்லப் போவதாகக் கூறுகின்றனர். அவ்வாறு பொய் சாட்சி கூற வேண்டிய தேவையும் அவசியமும் எனக்குக் கிடையாது. இந்தக் கோமாளிகள்தான் பொய்யைக் கூறி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். மேலும் எமது நாட்டுக்கு கிடைக்கவிருந்த ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை நிறுத்தப்பட்டமையானது சர்வதேசத்தின் மத்தியில் இலங்கை நம்பிக்கை இழந்து வருவதன் ஒரு வெளிப்பாடாகவே அமைந்திருக்கின்றது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

மாலைதீவு அரசியல் நெருக்கடி நிலைக்கு ஜனாதிபதி மஹிந்தவினால் சுமுக தீர்வு அமைச்சரவை மீண்டும் சத்தியப்பிரமாணம்


மாலைதீவில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி நிலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலையீட்டையடுத்து முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சியினரையும், எதிர்க் கட்சியினரையும் பேச்சுவார்த்தையில் ஈடுபடச் செய்து ஜனாதிபதி இந்தப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்துவைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மாலைதீவு ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் அங்கு சென்று அந்நாட்டுப் பாராளுமன்றமான மஜ்லிஸ் பிரதம நீதியரசர், நான்கு எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோரைச் சந்தித்ததாகவும், ஜனாதிபதி அங்கு செல்வதற்கு முன்னர் ஆளுந்தரப்புக்கும் எதிர்த்தரப்புக்குமிடையில் எந்தவிதக் கலந்துரையாடலும் இடம்பெற்றிருக்கவில்லையென்றும் குறிப்பிட்டார்.

மாலைதீவு அரசியல் நெருக்கடியை ஜனாதிபதி தீர்த்து வைத்தமை தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று செய்தியாளர் மாநாட்டைக் கூட்டித் தெளிவுபடுத்திய அமைச்சர் பேராசிரியர் பீரிஸ், வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தின் போதும் இதுபற்றி அறிவித்தார்.

கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கத்தை ஏற்படுத்தியதன் பின்னர் நேற்று முன்தினம் 4.30 அளவில் மாலைதீவு ஜனாதிபதி நசீட் இராஜினாமாச் செய்த அமைச்சரவைக்கு மீண்டும் சத்தியப் பிரமாணம் செய்து வைத்ததாக செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் குறிப்பிட்டார்.

இது முற்றிலும் மாலைதீவின் உள்விவகாரம் என்றபோதிலும், கட்சிகள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒத்துழைப்பையே ஜனாதிபதி வழங்கினார் என்று கூறிய அமைச்சர், அரசியல் நெருக்கடி சுமுகமாகத் தீர்த்து வைக்கப்பட்டதையடுத்து சகல தரப்பினரையும் இராப்போசன விருந்துக்கு ஜனாதிபதி அழைத்திருந்தாரென்றும் கூறினார். சார்க் அமைப்பின் முன்னாள் தலைவர் என்ற ரீதியிலும், நீண்டநாள் நட்புறவைக் கொண்ட நாடு என்பதாலும் ஜனாதிபதி அந்நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க ஒத்துழைத்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கையூமை அவரது இல்லத்திற்குச் சென்று ஜனாதிபதி சந்தித்ததாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மாலைதீவில் நிலவிய அரசியல் குழப்ப நிலையை எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முழுமையாக தீர்த்து சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து சுமுக நிலைக்கு கொண்டுவந்தது மட்டுமல்லாமல் புதிய அமைச்சரவையையும் சத்தியப்பிரமாணம் செய்ய வைத்ததை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதாகக் கூறினார்.

சார்க் நாடுகளில் அங்கம் வகிக்கும் நாடுகள் என்ற அடிப்படையில் இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான நெருங்கிய நட்பின் அடிப்படையில் ஜனாதிபதியின் இந்த செயல் அமைந்திருந்தது என்றும் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

அமைச்சரின் உரை முடிவடைந்தபோது ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் அனைவரும் மேசையில் தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிக்காட்டினர்.

இது தொடர்பாக இரு நாடுகளின் சார்பிலும் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், மாலைதீவின் அரசாங்கம் மற்றும் எதிர்க் கட்சியினரின் விருப்பத்தின் பேரில் தற்போதைய முறுகல் நிலையை தீர்க்க பேச்சுவார்த்தை நடத்த நண்பர் என்ற வகையிலும் அண்டை நாட்டவர் என்ற ரீதியிலும் உதவினார்.

அரசாங்கத்திலிருந்து மூவரும், எதிர்க் கட்சியிலிருந்து மூவருமாக மஜ்லிஸின் ஆறு அங்கத்தவர்களை கொண்ட குழுவொன்றை அமைத்து அமைச்சரவை நியமனம் மற்றும் சட்ட மன்றத்தை சீராக நடத்திச் செல்லுதல் போன்ற முக்கிய விடயங்களை பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதென இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அரசாங்கமும் எதிர்க் கட்சியினரும் இணக்கம் தெரிவித்தனர்.

இலங்கை ஜனாதிபதியின் தூதுக் குழுவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளியுறவு அலுவல்கள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இவ்வாறு வெளியுறவு அலுவல்கள் அமைச்சு இலங்கை- மாலைதீவு கூட்டறிக்கை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

விமல் வீரவன்ச சாகும் வரை உண்ணாவிரதம்



ஐ.நா. செயலாளர் நாயகம் பாக் கி மூன் இலங்கை விவகாரம் தொடர்பாக ஆலோசனை வழங்கவென நியமித்திருக்கும் நிபுணத்துவ ஆலோசனைக் குழுவை வாபஸ் வாங்குமாறு கோரி தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்றுக் காலையில் ஆரம்பித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகத்திற்கு முன்பாக இவர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

இதேவேளை ஐ.நா. வின் நிபுணத்துவ குழுவை வாபஸ் வாங்கும் படி கோரி கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கொழும்பு ஐ.நா.

அலுவலகத்திற்கு முன்பாக சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தேசிய சுதந்திர முன்னணி முக்கியஸ்தர்களான புவாட் முஸ்ஸம்மில், நிமல் பிரேமவன்ச உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் தங்களது சத்தியாக் கிரகப் போராட்டத்தை நேற்றுக் காலையில் கைவிட்டனர்.

இதேநேரம் ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகம் நேற்றும் இயங்கவில்லை. இப்பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்திற்கு முன்பாக நேற்றுக் காலையில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் விமல் வீரவன்ச, இலங்கை விவகாரம் தொடர்பாக ஆலோசனை வழங்கவென ஐ.நா. செயலாளர் நாயகம் நியமித்திருக்கும் நிபுணத்துவ குழுவை வாபஸ் வாங்குமாறு கோரி ஊர்வலம் நடாத்தி, சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டோம். இருப்பினும் ஐ.நா. செயலாளர் நாயகம் எமது கோரிக்கைக்குத் திருப்திகரமான பதிலை அளிக்கத் தவறியதாலேயே சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் தாமே குதிக்கத் தீர்மானித்து அதில் ஈடுபட்டிருக்கின்றேன்.

எமது நாட்டின் இறைமையையும், சுயாதிபத்தியத்தையும் பேணிப் பாதுகாப்பதற்காக இப்படியான போராட்டங்களைத் தேசப்பற்றுள்ளவர்களும், தாயகத்தின் மீது அன்பு கொண்டவர்களும் நாடு பூராவும் முன்னெடுக்க வேண்டும்.

அதேநேரம் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர் அந்தந்த நாடுகளிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டங்களை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன்.

அதேநேரம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்ஸிலில் அங்கம் வகிக்கும் இந்தியா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் இந்த நிபுணத்துவ குழுவை ஐ.நா. செயலாளர் நாயகம் வாபஸ்பெறச் செய்வதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றேன்.

நாட்டைப் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து மீட்டெடுத்த தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படையினருக்குமா கவே இந்தப் போராட்டத்தை முன் னெடுக்கின்றேன் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

பான் கி மூனின் தீர்மானம் தான்தோற்றித் தனமானது ஐ.நா. அங்கத்துவ நாடுகளை கொச்சைப்படுத்தியுள்ளார் - சஜித் பிரேமதாச


ஆலோசனைக் குழுவை அமைப்பதற்கு பான் கி மூன் எடுத்த தான்தோன்றித் தனமான தீர்மானத்தை முழுமையாக எதிர்ப்பதாக ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அத்துடன் வெளிநாட்டுச் சக்திகள் இவ்வாறு இலங்கை விவகாரத்தில் தலையிடுவதற்கு மீண்டும் அனுமதிக்க வேண்டாம் எனவும் அரசாங்கத்தை கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

வெளிநாட்டமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சஜித் பிரேமதாச எம்.பி. இந்த வேண்டுகோளை நேற்று விடுத்தார்.

ஆலோசனைக் குழு அமைக்கும் விடயத்தில் ஐ. நா. செயலாளர் நாயகம் தான்தோன்றித்தனமாக செயற்பட்டுள்ளார். இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.

இதன் மூலம் அவர் ஐ. நா. வில் அங்கம் வகிக்கும் அனைத்து அங்கத்துவ நாடுகளையும் கொச்சைப்படுத்தியுள்ளார்.

ஆலோசனைக் குழுவை அமைப்பதன் ஊடாக ஐ. நா. வின் சாசனத்தையும் பான் கி மூன் மீறியுள்ளார். மற்றுமொரு நாடு தெம்பாக இவ்வாறான ஒரு நிபுணர்கள் கொண்ட ஆலோசனைக் குழுவை அமைப்பதாயின் ஐ.நா. பாதுகாப்பு கவுன்ஸிலின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும்.

இவ்வாறு அனுமதியை அவர் பெற்றிருக்கவில்லை என்றும் ஐ. நா. சாசனத்தை மேற்கோள்காட்டி சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை மீது அழுத்தம் பிரயோகிக்க வேண்டுமென அமெரிக்காவிடம் ரணில் ‘பொறுப்பு வாய்ந்தவர் இவ்வாறு நடந்து கொள்வது கேவலம்’

பயங்கரவாதத்துக்கு எதிரான இறுதி யுத்தத்தின்போது நடைபெற்ற சம்பவங்களின் அறிக்கையை வெளியிடுமாறும் இது தொடர்பாக இலங்கை அரசுக்கு தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்குமாறும் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அமெரிக்க செனட் சபைக்கு தெரிவித்துள்ளார் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகார உறவுகள் குறித்த குழு 2009 டிசம்பர், மாதம் 7 ஆம் திகதி வெளியிட்டுள்ளஎன்ற அறிக்கையை மேற்கோள் காட்டியே அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் இதனைத் தெரிவித்தார். வெளிநாட்டமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு நடந்துகொண்டிருக்கக் கூடாது.

நாடு என்றதும் கட்சி, நிறம், பேதம் எதுவும் இன்றி வெளிநாட்டுக் கொள்கையை மதித்து நாம் அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் செயற்பட வேண்டும். இதற்கு எமது அண்டைய நாடான இந்தியாவை எடுத்துக்கொள்ளலாம்.

ஜனாதிபதி இந்தியா சென்றிருந்தபோது நெருங்கிய நண்பனாக எம்மை வரவேற்றது மட்டுமல்ல, பயங்கரவாதத்தை முழுமையாக வெற்றிகண்டவர்கள் என பாராட்டியதுடன் இந்த நாட்டை மீண்டும் முழுமையாக கட்டியெழுப்ப பூரண ஒத்துழைப்பையும் உதவிகளையும் வழங்குவதாகவும் தெரிவித்தனர். இதேபோன்று எதிர்க் கட்சி உறுப்பினர் சுஸ்மா சுவராஜையும் சந்தித்தோம். அவர்கள் இந்தியாவுக்காக குரல் கொடுத்தார்கள்.

தாங்கள் எதிர்க் கட்சி என வேறுபட்டு பேசவில்லை. இந்தியா கொண்டுள்ள வெளிநாட்டுக் கொள்கையை மதிக்கிறோம். அதனடிப்படையிலேயே செயற்படுகிறோம் என்றார்கள்.

இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சிக்கும் இலங்கையிலுள்ள எதிர்க் கட்சிக்கும் வேறுபாடு இதுதான். இவ்வாறு செயற்படக் கூடாது.

இறுதி யுத்தத்தில் ஈடுபட்டுள்ள படையினர் மீது குற்றம் சுமத்தி அவர்களை வேட்டையாடும் எண்ணத்தில் இவை முன்வைக்கப்பட்டனவா?

யுத்தம் என்ற இருட்டிலிருந்து இலங்கை இப்போது தான் வெளிச்சத்துக்கு வந்துகொண்டிக்கிறது. முதலீடுகள் வந்து குவிய ஆரம்பித்துள்ளன. பொருளாதாரம் வளர்ச்சியடைய ஆரம்பித்துள்ளன.

அரசியல் இருக்கலாம். எனினும் எதிர்க் கட்சியினர் அதிலிருந்து விடுபட்டு எமது வெளிநாட்டு கொள்கையின்படி நடந்துகொள்ள வேண்டும். இலங்கையுடன் இந்தியாவுக்கு அசைக்க முடியாத இறுக்கமான உறவு இருக்கிறது.

வேறு எந்த நாடும் இல்லாத விதத்தில் உடனடி உதவிகளை இந்தியா வழங் குகிறது.

பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு, காங்கேசன்துறை துறைமுக கட்டுமான பணிகள் என்பவற்றை இந்தியா முன்னின்று செய்து வருகிறது.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சர் . சிதம்பரத்தின் வேண்டுகோளுக்கு இணங்க நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுடன் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கவென பெருந்தொகையான நிதியை வழங்கினர்.

சீனாவும் இலங்கைக்கு உதவி வழங்குகிறது நுறைச்சோலை அனல் மின் நிலையம், மாத்தறை கொழும்பு வீதி விஸ்தரிப்பு திட்டம், மத்தள விமான நிலையம் உட்பட பல திட்டங்களுக்கு சீனா உதவி வழங்குகிறது.

தேவையான நேரத்தில் உதவி செய்பவனே சிறந்த நண்பன். இந்த வகையில் இந்தியா எமது சிறந்த நண்பன்.

யுத்தம் என்ற சாம்பல் மேட்டிலிருந்து எழுந்து வரும் எங்களுக்கு எமது வெளிநாட்டு கொள்கையின் மீது நம்பிக்கை கொண்ட நாடுகள் உதவுகின்றன. கட்சி, நிறம் பற்றி பாராமல்பற்றி சிந்தியுங்கள் என எதிர்க்கட்சித் தலைவரிடம் கேட்டுக்கொள்கிறேன். நாம் பயங்கரவாதத்துக்கு எதிராக மேற்கொண்ட யுத்தத்தில் பெற்ற வெற்றி தொடர்பாக உலக நாடுகள் எம்மை இன்னமும் பாராட்டி வருகின்றன. உக்ரேனிய பாதுகாப்பு அகடமியில், பயங்கரவாதத்துக்கு எதிராக இலங்கை முகம் கொடுத்த விதம் பற்றி ஆய்வுகளை நடத்துகின்றன. கடற்படையில் சிறிய படகுகளை வைத்துக்கொண்டு எவ்வாறு கடற்புலிகளின் கடற்படை தளத்தை வெற்றிகொண்டார்கள் என்பது பற்றி ஆய்வு செய்கின்றன. நிலையான தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்வதற்கான ஒரு அடித்தளத்தை ஏற்படுத்திக்கொள்வதற்காக ஜனாதிபதி இன்று தமிழ்க்கூட்டமைப்பு எம்.பிக்களுடனும் பேசி வருகிறார். இந்த பேச்சுக்கள் தொடர்ந்தும் நடைபெறும் என்றார். “2008 ஆம் ஆண்டுகளில் தான் நான் அமெரிக்கா சென்றேன். 2009ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் பற்றி நான் எப்படி அமெரிக்க செனட் சபைக்கு கூற முடியும் என எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சபையில் கேள்வி எழுப்பினார். நீங்கள் கூறியதாகத்தான் செனட் சபையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதோ என் கையில் இருக்கிறது என ஜீ. எல். பீரிஸ் கையிலுள்ள ஆவணமொன்றையும் காட்டினார்.
மேலும் இங்கே தொடர்க...

கொழும்பு ஐ நா அலுவலகம் மூடல்



வவூனியா முகாமுக்கு கடந்த ஆண்டு பான் கீ மூன் விஜயம் செய்தார்
அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான போராட்டத்தை அடுத்து கொழும்பில் உள்ள தனது அலுவலகத்தை மூட ஐ நா முடிவு செய்துள்ளது.

இலங்கையின் தலைநகர் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகங்களின் பணிகள் சுமுகமாக நடைபெறுவதில் ஏற்பட்டுள்ள தடைகளை சீர் செய்ய இலங்கை அரசு செய்யத் தவறியது ஏற்றுக் கொள்ளமுடியாததாக ஐ நா வின் தலைமைச் செயலர் கருதுவதாக அவரது சார்பில் வெளியாகியுள்ள அறிக்கை கூறுகிறது.

அரசில் அங்கம் வகிக்கும் ஒரு அமைச்சரின் தலைமையில் ஒழுங்கற்ற வகையில் கொழும்பிலுள்ள ஐ நா வின் அலுவலகம் முன்பாக நடத்தப்படும் போராட்டங்கள் காரணமாக, அங்குள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சிப் பணிகளுக்கான அலுவலகத்தை மூட தலைமைச் செயலர் முடிவு செய்துள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

அங்கு இடம் பெற்று வரும் நிகழ்வுகளை அடுத்து, இலங்கையிலுள்ள ஐ நா வின் வதிவிடப் பிரதிநிதி நீல் பூன் அவர்களை ஆலோசனைக்காக நியூயார்க் வரும்படி பான் கீ மூன் அழைத்துள்ளார்.

இலங்கை அரசு தனது கடப்பாடுகளை உணர்ந்து கொண்டு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் ஐ நா வின் தலைமைச் செயலர் கோரியுள்ளதாக அவரது சார்பிலான அறிக்கை கூறுகிறது.



ஐ நா அலுவலகம் முன் நடக்கும் போராட்டம்

ஐ நா வின் அலுவலகம் இலங்கையில் செயற்படுவதை உணர்ந்து, அதற்கேற்ற நெறிமுறைகளுடன் அந்நாட்டு அரசு நடந்து கொள்ள வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மக்களுக்கு தாங்கள் செய்து வரும் உதவிகள் தங்குதடையின்றி கிடைப்பதை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் ஐ நா வின் தலைமைச் செயலரின் சார்பில் வெளியாகியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

சூரிய சக்தியில் வானமே வசப்பட்டது புதிய சாதனை





சுவிட்சர்லாந்தில் சூரிய சக்தியில் இயங்கும் விமானம் ஒன்று சரித்திரத்தில் இல்லாத வகையில் இரவு நேரத்தில் பறந்து சாதனை படைத்துள்ளது.

பரிசோதனைகளுக்காக உருவாக்கப்பட்டிருந்த இந்த விமானம் சூரிய சக்தியை மட்டும் பயன்படுத்தி இடைவிடாது ஒரு நாள் முழுக்கப் பறந்துள்ளது.

ராட்சத பலூனில் பறந்து உலகை வலம் வந்த முதல் நபர் என்ற பெருமைக்குரிய சுவிட்சர்லாந்தின் சாகச ஆர்வலர் பெர்த்ராண்ட் பிக்கார்த்தின் சிந்தனையில் உருவானது சோலார் இம்பல்ஸ் என்ற இந்த விமானம்.

ஒரு ஆள் மட்டும் அமர்ந்து செல்லக்கூடிய ஒரு இலகுரக விமானம் இது.

கார்பன் ஃபைபர் எனப்படும் கரி இழைகளால் ஆன இந்த விமானத்தின் எடை என்னவோ ஒரு காருடைய எடைதான் என்றாலும், இதனுடைய இறக்கைகள் ஒரு ஜம்போ ஜெட் விமானத்தின் அளவுக்கு அறுபது மீட்டர்கள் நீளமுடையவை.

இந்த இறக்கைகளின் மேல் பக்கம் முழுக்க சூரிய சக்தியில் இருந்து மின்சாரத்தை உருவாக்குகின்ற சோலார் செல்கள் பன்னிரண்டாயிரம் அளவுக்கு பொருத்தப்பட்டிருந்தன.

இந்த விமானத்தில் ஒரேயொருவர் மட்டுமே செல்ல முடியும், இந்த விமானம் செல்லக்கூடிய அதிகபட்ச வேகம் மணிக்கு 70 கிலோமீட்டர்கள்தான், இந்த விமான இயந்திரத்தின் வலு ஒரு சிறிய ஸ்கூட்டருக்கு உரியதுதான் என்பதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, வர்த்தக ரீதியிலான விமானப் போக்குவரத்தில் இதனனைக் கொண்டு உடனடியாக பெரிய மாற்றம் ஏதும் வந்துவிடப் போவதில்லை எனத் தெரிகிறது.

ஆனால் சுற்றுச்சூழலுக்கு பங்கம் விளைவிக்காத சக்திகளைப் பயன்படுத்தி எந்த அளவுக்கு சாதிக்க முடியும் என்பதற்கு தன்னுடைய இந்த விமானம் ஒரு எட்டுத்துக்காட்டு என்று விமானத்தை உருவாக்கிய பெர்த்ராண்ட் பிக்கார்ட் பெருமிதம் வெளியிட்டுள்ளார்.

விமானங்கள் இயங்குசக்தியைப் பெறுவதில் எதிர்காலத்தில் மாபெரும் திருப்புமுனையை இந்த தொழில்நுட்பம் ஏற்படுத்தும், ஆகவே விமானங்களின் சரித்திரத்திலே ஒரு புதிய அத்தியாயத்தின் துவக்கம் இது என்று கூறப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...