27 மே, 2010

சரத் பொன்சேகாவிற்கெதிரான மூன்றாவது இராணுவ நீதிமன்றமும் ஆரம்பம்



இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகாவுக்கு எதிரான மூன்றாவது இராணுவ நீதிமன்றமும் அமைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது பதவிக் காலத்தில் சட்டவிரோதமான ஆயுதக் கொள்வனவுகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டை விசாரிப்பதற்காகவே இந்த மூன்றாவது நீதிமன்றம் அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில் ஜெனரல் சரத் பொன்சேகா தொடர்பான இரண்டாவது இராணுவ நீதிமன்றம் விசாரணை இம் மாதம் 24 ஆம் திகதியன்று இடம்பெற்ற போது இரண்டாவது நீதிமன்ற விசாரணைகளை ரத்துச்செய்யமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா மனுதாக்கல் செய்திருந்தார். எனவே இந்த விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் திகதி; வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொன்சேகாவுக்கு எதிராக மூன்றாவது இராணுவ நீதிமன்றமும் அமைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

தமிழீழம் தொடர்பாக பிரசாரம் செய்த இருவர் கைது

நாடு கடந்த தமிழீழம் தொடர்பாக கிழக்கு மாகாணத்தில் பிரசாரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாண்டிருப்பு மற்றும் எருவில் பகுதிகளைச் சேர்ந்த இவர்கள் கல்முனை மற்றும் களுவாஞ்சிக்குடிப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் இருவரும் நாடு கடந்த அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும்படி மக்களிடம் பிரசாரம் செய்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

வவுனியாவுக்குச் சென்ற தனியார் பஸ் விபத்து: 50 பேர் காயம்

வவுனியாவுக்குச் சென்ற தனியார் பஸ் விபத்து: 50 பேர் காயம்
கொழும்பிலிருந்து வவுனியாவிற்குச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று அநுராதபுரம் பகுதியில் இன்று காலை விபத்துக்குள்ளானதில் 50 பேர் காயடைந்துள்ளனர்.

விபத்துக்குள்ளான பஸ் வண்டியில் 50 பேர் காயமடைந்ததோடு இவர்களில் 28 பேர் படுகாயங்களுக்குள்ளானதாகவும் இவர்கள் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்ப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

குழந்தை கடத்தல் வழக்கில் பாதிரியார் கைது




கிருஷ்ணகிரி : குழந்தை கடத்தல் வழக்கில் தொடர்புடைய, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த, மேலும் ஒரு பாதிரியார் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரியில், மூன்று மாத ஆண் குழந்தை மற்றும் மூன்று வயது சிறுவன் ஆகியோரை கடத்திய, தனலட்சுமி (35) மற்றும் சென்னை கிரிஜா, கணவர் சிவா, ராணி மற்றும் பாதிரியார் அல்போன்ஸ் சேவியர் ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். கடத்தப்பட்ட இரு சிறுவர்களை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தைகள் கடத்தல் தொடர்பாக, விழுப்புரம் மாவட்டம் ரெட்டணையை சேர்ந்த, பாதிரியார் செல்வம் (44) என்பவரை போலீசார் கைது செய்தனர். பாதிரியார் செல்வத்திடம் நடத்திய விசாரணையில், கிடைத்த தகவலின்படி, கிரிஜாவை காவலில் எடுத்து விசாரிக்க, போலீசார் கிருஷ்ணகிரி குற்றவியல் நடுவர் மன்றத்தில், மனுதாக்கல் செய்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

கட்டுநாயக்க, இரத்மலானை உட்பட 13 உள்ளூர் விமான நிலையங்கள் அபிவிருத்தி

கட்டுநாயக்க, இரத்மலானை விமான நிலையங்கள் உட்பட மேலும் 13 உள்ளூர் விமான நிலையங்களை முழுமையாக அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழிகாட்டல்களை வழங்கியுள்ளார்.

இந்நிகழ்வு அலரி மாளிகையில் நடைபெற்றதுடன் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் விமானப் பயணிகளுக்குக் கூடுதல் வசதிகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் முழுமையான அபிவிருத்திக்கு உள்ளாக்கப்படுவது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயற்திட்ட மீளாய்வு நிகழ்வு அலரி மாளிகையில் நடை பெற்ற போது மேற்படி விடயங்கள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப் பட்டன. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு 23 விமான சேவை நிறுவனங்களைச் சேர்ந்த விமானங்கள் வந்து போகின்றன. 46 மார்க்கங்கள் ஊடாக இச்சேவைகள் இடம்பெறுகின்றன.

நாட்டில் தற்போது நிலவும் அமைதிச் சூழலில் உல்லாசப் பிரயாணிகளின் வருகை 50 வீதத்தால் அதிகரித்துள்ளதுடன் விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் தொகையும் ஐம்பது வீதத்தால் அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையம் முழுமையான அபிவிருத்திக் குள்ளாக்கப்படவுள்ளது. இதுவரை காலமும் வருடத்திற்கு 4.2 மில்லியன் என்ற வீதத்திலேயே மக்கள் விமான நிலையத்தை உபயோகப்படுத் தியுள்ளனர். எதிர்வரும் 2012ம் ஆண்டில் இதனை 6 மில்லியனாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

தற்போது மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தியின் கீழ் விமான நிலைய போக்குவரத்துக்கான விசேட சொகுசு ரயில் சேவை, தீர்வையற்ற வர்த்தக நிலையங்கள் விமானங்களுக்கிடையில் மாறும் பயணிகளுக்கான ஹோட்டல் வசதிகளை மேம்படுத்தல் போன்ற நடவடிக்கைகளும் இடம்பெறவுள்ளன.

இந்நிகழ்வில் அம்பாந்தோட்டை மத்தள புதிய விமான நிலையம் தொடர்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. வருடத்திற்கு ஒரு மில்லியன் பிரயாணிகள் உபயோகப்படுத்தும் வகையில் சகல வசதிகளையும் அங்கு ஏற்படுத்துவது தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.

3500 மீற்றர் நீள ஓடு பாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதுடன் முதற் கட்டமாக 10 விமானங்கள் தரித்து நிற்கக் கூடிய வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. சர்வதேச எட்டு விமான மார்க்கங்களை உபயோகிப்பதற்கும் சம்பந்தப்பட்ட நாடுகளின் அனுமதி பெறப்பட்டுள்ளன. அத்துடன் இத்திட்டத்தின் சமகாலத்தில் இரத்மலானை உட்பட 13 உள்ளூர் விமான நிலையங்களை அபிவிருத்தி செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள்: ரூ.7000 மில். செலவில் அபிவிருத்தி திட்டங்கள்


*
பள்ளிமுனை நீர்விநியோகம்
*
வவுனியா - கிளிநொச்சி, சுன்னாகம் மின் விநியோகம்
*
மன்னார், கிளிநொச்சி வைத்தியசாலைகள் புனரமைப்பு


மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் சுமார் 7000 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்ட குடிநீர், மின் விநியோகம், நீர்ப்பாசனம், மற்றும் சுகாதார அபிவிருத்தித் திட்டங்கள் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.

வட மாகாண அபிவிருத்தி, மீள்குடியேற்றம் என்பனவற்றுக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் இந்த அபிவிருத்தி திட்டங்களுக்கான ஆரம்ப நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தினகரனுக்குத் தெரிவித்தார்.

மன்னார், கிளிநொச்சி பகுதிகளில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்களின் நலன் கருதி, அவர்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் பொருட்டே அரசாங்கம், வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் ஊடாக இந்த அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வட மாகாண சபை, இலங்கை மின்சார சபை, ஆசிய அபிவிருத்தி வங்கி, மற்றும் ஜப்பான் சர்வதேச உதவி நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்பு மற்றும் நிதி உதவியுடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

மின்சாரம்

வட மாகாணத்தில் தேசிய மின்சார கட்டமைப்பை மேம்படுத்தி, வட பகுதி மக்களின் அன்றாட வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் 69.4 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் பல்வேறு மின்சார அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் எம். எம். சி. பேர்டினன்டோ தெரிவித்தார். வவுனியாவிலிருந்து கிளிநொச்சி வரை 132 கிலோ வோல்ட் மின் இணைப்புக்களை ஆரம்பிக்கும் திட்டத்திற்கென ஜப்பான் அரசாங்கம் 33.6 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், கிளிநொச்சி முதல் சுன்னாகம் வரை 132 கிலோ வோல்ட் ‘கிரிட்’ உப நிலையங்களை அமைக்கும் திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 32.9 மில். அமெரிக்க டொலர்களையும் கடனுதவியாக வழங்குகின்றது.

நீர் விநியோகம், நீர்ப்பாசனம்

மன்னார், பள்ளிமுனை பிரதேச மக்களின் நலன் கருதி 35 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பள்ளிமுனை நீர் விநியோக திட்டமும் இன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி இதற்கான நிதி உதவியை வழங்குவதாக தெரிவித்த வட மாகாண ஆளுநர், இதன்மூலம் பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த 500 குடும்பங்கள் நன்மையடையவுள்ளன என்றார். அத்துடன் வவுனியா மன்னார் மக்களின் நலன் கருதி உலர் வளப் பகுதியில் நீர் விநியோக திட்டத்திற்கான அடிக்கல்லும் இன்று நாட்டப்படவுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

சுகாதாரம்

மன்னார், கிளிநொச்சி மக்களின் சுகாதார துறையை மேம்படுத்தும் நோக்கில் இரு வைத்தியசாலைகளின் பல பகுதிகள் புனரமைக்கப்பட்டு மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கென வட மாகாண சபையினால் சுமார் 130 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ள துடன், நெகோர்ட் அமைப்பின் ஊடாக புனர்நிர்மாண பணிகள் மேற்கொள்ளப்பட்டு ள்ளன. 80 மில்லியன் ரூபா செலவில் மன்னார் வைத்தியசாலையின் முன்று மாடிக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இவற்றில் இரு மாடிகளில் சத்திரசிகிச்சை வார்ட்கள் இரண்டும், கீழ் மாடியில் சத்திரசிகிச்சை கூடமும் அமைக்கப்பட்டு ள்ளது. சகல வசதிகளுடன் குளிரூட்டப்பட்டு ள்ளது.

சுமார் 50 மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சி வைத்தியசாலையின் பல பகுதிகள் புனரமைக்கப்பட்டுள்ளன. குளிரூட்டப்பட்ட இரு வார்ட்களும், அவசர சேவை பிரிவும், சத்திரசிகிச்சை வார்ட்டும் இன்று மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேலும் குறிப் பிட்டார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள இந்த வைபவங்களில் அமைச்சர்களான பாடலி சம்பிக்க ரணவக்க, ரிஷாத் பதியுதீன், பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர, ஆசிய அபிவிருத்தி வங்கி தலைவர் ஹருஹிகோ, குருரோடா, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் குனிஓ தக்கஹாஷி, ஜப்பான் சர்வதேச உதவி நிறுவனத்தின் பிரதான பிரதிநிதி அக்கிரா ஷிமூரா, மாவட்ட செயலாளர்கள் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை அதிகாரிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்
மேலும் இங்கே தொடர்க...

போர் நடந்த இடங்களில் அமைதி : மந்திரி பெரிஸ் தகவல்





இலங்கையில் 25 ஆண்டுகளாக சண்டை நடந்த பகுதியில், 2 லட்சத்து 97 ஆயிரம் பேர் மீண்டும் குடியமர்த்தப்பட்டுள்ளனர் என, வெளியுறவுத் துறை அமைச்சர் பெரிஸ் தெரிவித்துள்ளார். போர் நடந்த இடங்களில் அமைதி தற்போது தவழ்வதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் பெரிஸ், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனை சந்தித்து பேசுகிறார்.

இலங்கை அமைச்சர் பெரிஸ், நிருபர்களிடம் கூறியதாவது: இலங்கையில் கடந்த 25 ஆண்டுகளாக சண்டை நடந்த பகுதிகளில், 2 லட்சத்து 97 ஆயிரம் மக்களை மீண்டும் குடியமர்த்தியுள்ளோம். தற்போது இலங்கையில் புதிய சூழல் நிலவுகிறது. இலங்கையில் பயங்கரவாதம் முறியடித்த பிறகு, அளப்பரிய தன்னம்பிக்கை ஏற்பட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக இல்லாத அரசியல் ஸ்திரத்தன்மை தற்போது ஏற்பட்டுள்ளது.

புலிகளுடனான போர் முடிந்த பிறகு, வேறெந்த பயங்கரவாத நடவடிக்கையும் நடக்கவில்லை. மக்களின் மனநிலை மாறிவிட்டது. கடும் போர் நடந்த பகுதியில் சீரமைப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தற்போது நாங்கள் எந்த பாகுபாடும் பார்ப்பதில்லை. திரிகோணமலை, கிளிநொச்சி பகுதிகளில் தொழிற்சாலைகள், ஓட்டல்கள் போன்றவை செயல்படத் துவங்கியுள்ளன. இலங்கையில் புலிகளுடனான உச்சகட்டப் போர் நடந்த போது, போர் குற்றங்கள் நடந்ததாக ஒரு சில அமைப்புகள் தெரிவிக்கின்றன. இதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை. இவ்வாறு பெரிஸ் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

விமானத்தில் குண்டு புரளி : முஷாரப் பயணம் பாதிப்பு

வாஷிங்டன் : பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் பயணித்த விமானத்தில் வெடிகுண்டு புரளி கிளம்பியதால், விமானத்திலிருந்து அவர் கீழே இறக்கப்பட்டார். பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப், 2008ல் பதவி விலகினார். பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் தங்கியுள்ள முஷாரப் மீது பாகிஸ்தான் அரசு பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளது. நாடு திரும்பினால் கைது செய்யப்படும் அபாயம் உள்ளதால், முஷாரப் வெளிநாடுகளில் தங்கியுள்ளார்.

இதற்கிடையே அமெரிக்காவின் நியூஜெர்சியிலிருந்து லண்டன் புறப்பட்ட விர்ஜின் அட்லாண்டிக் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து அப்புறப்படுத்தப்ட்டனர். இந்த விமானத்தில் இருந்த முஷாரப், நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டார். விமானத்தில் வெடிகுண்டு ஏதும் இல்லை என்ற தகவலையடுத்து, பயணிகள் மீண்டும் இந்த விமானத்தில் ஏற்றப்பட்டு லண்டன் சென்றனர்.
மேலும் இங்கே தொடர்க...