25 நவம்பர், 2009

25.11.2009 தாயகக்குரல்29

அடுத்து முதலில் நடைபெறும் தேர்தல் ஜனாதிபதி தேர்தலா பொதுத் தேர்தலா என்ற கேள்வி நீண்ட நாட்களாக இருந்து வருவது யாவரும் அறிந்ததே. இந்தக் கேள்விக்கு நேற்று முன்தினம் அலரி மாளிகையில் நடைபெற்ற அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களின் மகாநாட்டில் விடை கிடைத்துள்ளது. ஜனாதிபதி தோர்தலை முதலில் நடத்துவது எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டது.


ஜாதிபதி பதவிக்காலம் இன்னமும் இரண்டு வருடங்கள் இருக்கும் நிலையில் முன்கூட்டியே தேர்தலை நடத்துவதற்கான காரணங்களை நேற்று ஊடகங்களின் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மகாநாட்டில் ஜனாதிபதி விளக்கினார். குறிப்பாக கடந்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு மக்களுக்கு ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. கடந்த நான்கு வருடங்களில் இந்த நாட்டில் இருந்த பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டிய நிலையில் நாட்டை கட்டி எழுப்ப புதிதாக மக்கள் ஆணையைப் பெறவிரும்புவதாகவும் இந்த தேர்தலில் வடக்கு கிழக்கு மக்களுக்கும் தேர்தலில் வாக்களிக்க சந்தர்ப்பம் கொடுத்து அவர்கள் உட்பட முழு நாட்டினதும் மக்கள் ஆணையைப் பெறுவதும் முன்கூட்டியே தேர்தலை நடத்துவதற்கான நோக்கம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி தேர்தல் முதலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டபோதும் தேர்தலகள்; ஆணையாளரால் தேர்தல் திகதி அறிவிக்கப்படாத நிலையிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது. நேற்று நாடெங்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷாவை ஆதரித்து மக்கள் பேரணிகள் நடைபெற்றுள்ளன.


ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்தட்டும் பார்ப்போம் என சவால் விட்டுவந்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி இன்னும் பொது வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கவில்லை. அது தொடர்பாக ஜே.வி.பி.யுடனான பேச்சுவார்த்தை வெற்றி பெற்றுள்ளதாகவும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சிக் கூட்டணிசார்பில் நிறுத்தப்படும் பொது வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.


பொது வேட்பாளர் தொடர்பாக எதிர்க்கட்சி கூட்டணிக்கும் ஜே.வி.பி. க்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது சரத் பொன்சேகாவும் கலந்துகொண்டுள்ளார். சரத் பொன்சேகாவின் வேண்டுதலின்பேரில் ரணிலை காபந்து அரசாங்கத்தின் பிரதமராக்க ஜே.வி.பி ஒப்புக்கொண்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.. எனவே பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதனிடையே பொது வேட்பாளர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி.திசநாயக்கா, ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான கே.என்.சொக்ஸி போன்றோருக்கு உடன்பாடில்லை எனத் தெரிகிறது. பொது வேட்பாளர்; தொடர்பான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆலோசனைக்கூட்டம் எதிலும் இவர்கள் பங்குபற்றவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.


எதிர்க்கட்சிக் கூட்டணியில் உள்ள முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கட்சி கூட்டணியின் பொது வேட்பாளருடன் பேசியபின்னரே அவரை ஆதரிப்பது தொடர்பாக தமது கட்சி முடிவெடுக்கும் என எதிர்கட்சிக் கூட்டணியில் உள்ள கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.


பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவை நியமிப்பதானால் அவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளவேண்டும் என முன்னர் நிபந்தனை விதித்திருந்த ரணில் இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆலோசனையைப் பெற்றாரா இல்லையா என்பது தெரியவில்லை. தமிழ் மக்களின் வாக்கை தம்பக்கம் இழுக்கும் நோக்கில் காபந்து அரசாங்கத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அமைச்சர் பதவி கொடுக்கவேண்டும், மீள்குடியேற்றம் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளையும் ரணில் பொது வேட்பாளருக்கு விதித்திருந்ததை மறந்துவிட முடியாது.;. ஆனால் எதிர்கட்சிகள் எதிர்பார்க்காத விதத்தில் அரசாங்கம் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தியதுடன் முகாம்களில் உள்ள மக்களையும் சுதந்திரமாக நடமாட அனுமதித்துள்ளது.


முகாம்களில் உள்ள மக்களின் மீள் குடியேற்றம் திருப்திகரமாக முன்னெடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை சரத் பொன்சேகா தான் ஓய்வு பெற அனுமதி கேட்டு ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருந்ததாக செய்திகள் வெளிவந்திருந்தன. ஆனால் யுத்தம் முடிந்த பின்னர் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா ~இப்போதைக்கு மீள்குடியேற்றம் செய்யக்கூடாது| எனத் தெரிவித்திருந்தார்.
அண்மையில் வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் மேற்கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை பாராட்டியுள்ளதுடன் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே மீள்குடியேற்றம் பற்றி ஐக்கிய தேசியக் கட்சி இனி தமிழ் மக்களிடையே பிரச்சாரம் செய்யமுடியாது.


எனவேதான் ஐக்கிய தேசியக் கட்சி இப்போது கூறுகிறது, அரசாங்கம் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த தங்களுடைய நிர்ப்பந்தமே காரணம் என்கிறது.. அதே போல தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தங்களது நிர்பந்தம் காரணமாகவே அரசாங்கம் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தியதாக கூறுகிறது.
ஜனாதிபதி தேர்தல் களத்தில் வடக்கு கிழக்கில் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற யுத்தமே முக்கிய கருப்பொருளாக இருக்கும். அதாவது புலிகளை அழித்த வெற்றி இராணுவத்திற்குரியது என ஐக்கிய தேசியக் கட்சி கூறிவருகிறது. இராணுவ வெற்றிக்கு ஜனாதிபதியின் அரசியல் தலைமையே காரணம் என்கிறது அரசாங்கம். இந்த விவாதம் எற்கனவே ஆரம்பமாகிவிட்டது. தேர்தல் களத்தில் சூடுபிடிக்கலாம்.


புதிய இராணுவத் தளபதி பதவி ஏற்றபோது யுத்தம் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்து இங்கு கவனிக்கத்தக்கது. புலிகளுடனான யுத்தத்தில இராணுவம் வெற்றி பெற அரசியல் தலைமையே முக்கிய காரணம் எனத் தெரிவித்திருந்தார். இந்த கருத்து பலராலும் முன்வைக்கப்படுகிறது. அதில் உண்மையும் இருக்கிறது.
ஒரு நாட்டின் இராணுவ வெற்றிக்கு அந்நாட்டு அரசியல் தலைமையே பிரதான காரணம். கடந்த காலங்களில் பல சிறந்த இராணுவத் தலைவர்கள் இருந்துள்ளனர். ஆனால் அன்றைய அரசியல் தலைமைகளின் பலவீனத்தாலேயே புலிகள் வெல்லப்பட முடியாதவர்கள் என்ற அபிப்பிராயமும் இலங்கை இராணுவத்தால் புலிகளை வெற்றி கொள்ளமுடியாது என்ற அபிப்பிராயமும் பல மட்டங்களிலும் மேலோங்கின.


அன்றைய அரசியல் தலைமைகள் இராணுவத்தின் முன்னேற்றத்தின்போது அந்நிய சக்திகளின் தலையீட்டுக்கு அடிபணிந்து இராணுவ நடவடிக்கைகளை இடைநிறுத்தி வந்தன. அதனால் இராணுவத்தினரும் போரில் அக்கறைகொள்ளவில்லை. ஆனால் தற்போதைய அரசியல் தலைமை அந்நிய சக்திக்கு அடிபணிந்து யுத்தநித்தம் மேற்கொள்ளாமல் இராணுவத்தினருக்கு சரியான தலைமை கொடுத்ததாலேயே இப்போது புலிகளை இராணுவத்தால் வெற்றி கொள்ள முடிந்தது என்ற விமர்சனங்கள் பலராலும் முன்வைக்கப்படுகிறது.


ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்கு இரு தரப்பினரும் பல வியூகங்களை வகுக்கின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பை எதிர்க்கட்சி கூட்டணியில் ஒரு அங்கமாக மக்களுக்கு காட்ட ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிக்கிறது. ஆனால் தமிழ் மக்கள் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக யார் என்ன கூறப்போகிறார்கள் என்பதையே எதிர்பார்க்கிறது.

மேலும் இங்கே தொடர்க...
அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்களுக்கு ராஜரட்ணம் மறுப்பு


நிதிச் சந்தை மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்க அரசாங்கத்தினால் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என பிரபல அமெரிக்க தமிழ் வர்த்தகர் ராஜ் ராஜரட்ணம் தெரிவித்துள்ளார்.

பாரிய நிதிச் சந்தை மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரபல அமெரிக்கத் தமிழ் வர்த்தகர் ராஜ் ராஜரட்ணத்தை அந்நாட்டு அரசாங்கம் கைது செய்திருந்தது.

போலியான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியதன் மூலம் அமெரிக்க அரசாங்கம் தமது அரசியல் சாசன உரிமையை மீறியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பங்குச் சந்தையில் இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து ராஜ் ராஜரட்ணம் அறிந்திருக்கவில்லை என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறெனினும், சட்டவிரோத பங்குப் பரிவர்த்தனையின் ஊடாக ராஜ் ராஜரட்ணம் பெருந்தொகை லாபத்தை ஈட்டியுள்ளதாகத் அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது
மேலும் இங்கே தொடர்க...
ஏ-9 வீதியூடாக செல்ல பாரவூர்தி உரிமையாளர்களுக்கும் அனுமதி
.மாவட்டத்திலிருந்து ஏ-9 வீதியினூடாக கொழும்பு செல்லும் வாகனத் தொடரணி சேவையில் பாரவூர்தி உரிமையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அரச அதிபர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், "யாழிலிருந்து கொழும்புக்கும், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும் பொருட்களைக் கொண்டு வர விரும்பும் பாரவூர்தி உரிமையாளர்கள் அவர்களுக்கான நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் வாகனத் தொடரணியில் இணைந்து கொள்ள முடியும்.

பாரவூர்தி உரிமையாளர்கள் தொடரணியில் இணைய விரும்பின், புறப்படும் தினம் காலை 6.30 மணிக்கு முன்னர் நாவற்குழி அரச களஞ்சியத்தில் பதிவினை மேற்கொள்ள வேண்டும். இதனைவிட யாழ்ப்பாணத்திலிருந்து பொருட்களை ஏற்றிச் செல்ல விரும்புகிறவர்கள் முதல் நாள் பொருட்களை நாவற்குழி களஞ்சியசாலைக்கு எடுத்துச் சென்று, பாதுகாப்பு அதிகாரிகளின் பரிசீலனையின் பின் மறுநாள் வாகனத் தொடரணியில் இணைய முடியும்.

தொடரணியில் இவ்வாறு இணையும் பாரவூர்திகள், பாரவூர்தியின் பதிவுப் புத்தகம், நடப்பாண்டு வரி அனுமதிப் பத்திரம், காப்புறுதிப் பத்திரம், வாகனத் தகைமைச் சான்றிதழ் என்பவற்றின் மூலப்பிரதிகளை வைத்திருக்க வேண்டும். பாரவூர்தி சாரதி, உதவியாளர், கொள்வனவு உத்தியோகத்தர் போன்றோர் தமது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

நடைமுறைகள் பின் பாரவூர்திகள் சீல் வைக்கப்பட்டு தொடரணியில் இணைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும்" எனக் குறிப்பிட்டிருக்கின்றார்
மேலும் இங்கே தொடர்க...
முல்லைத்தீவு,கிளிநொச்சி அரச ஊழியர்கள் அங்கு செல்ல விசேட பஸ் சேவை


, கிளிநொச்சி மாவட்டங்களில் கடமை புரிந்த அரச ஊழியர்கள் அங்கு செல்வதற்கான பஸ் சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.அரச அதிபர் க.கணேஷ் தெரிவத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருந்து தற்போது யாழ்ப்பாணத்தில் தமது கடமையாற்றுகின்ற மற்றும் கடமையாற்ற கோரியுள்ள அனைத்து அலுவலகர்களையும் முல்லைத்தீவு மாவட்டத்தில் தமது கடமையைப் பொறுப்பேற்குமாறு முல்லைத்தீவு அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.கணேஷ் தெரிவித்துள்ளார்.

மேற்படி அலுவலகர்கள் தற்போது யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் அலுவலகத்திலிருந்து விடுவித்தல் கடிதங்களைப் பெற்று முல்லைத்தீவு அரசாங்க அதிபருடன் தொடர்பு கொண்டு தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

அம்மாவட்டங்களுக்குச் செல்லும் அரச ஊழியர்கள் சிங்கள மகா வித்தியாலயத்தில் காலையில் வருகை தருமாறும் வரும் போது ஆள் அடையாள அட்டை, உத்தியோகத்தர் அடையாள அட்டை என்பனவற்றைக் கொண்டு வரும்படியும், மாலையில் திரும்பி வருவதற்கான பஸ் ஒழுங்குகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...
வாழ்க்கையில் எந்தவொரு விடயத்திலும் நான் இதுவரை தோற்றதில்லை ஓரிரு தினங்களில் முடிவை அறிவிப்பேன் என்கிறார் பொன்சேகா

ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான நிலைப்பாடு குறித்த அறிவிப்பினை நாட்டின் பிரதான கட்சிகள் வெளியிட்டதன் பின்னர் என்னுடைய நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிப்பேன் என்று கூட்டுப்படைகளின் முன்னாள் பிரதம அதிகாரிஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். கொழும்பு, தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நேற்று முற்பகல் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு வெளியேறிய ஜெனரல் சரத் பொன்சேகாவை வழிமறித்த ஊடகவியலாளர்கள் சிலர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் நீங்கள் வெற்றி பெறுவீர்களா என்று அங்கு ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஜெனரல் சரத் பொன்சேகா, எனது வாழ்நாளில் இதுவரை எந்தவொரு விடயத்திலும் நான் தோல்வி கண்டதேயில்லை என்றும் கூறினார்.

இது தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகா அங்கு மேலும் கூறியதாவது :

ஜனாதிபதித் தேர்தலை எதிர்ப்பார்த்திருந்த நாட்டின் பிரதான கட்சிகள் இந்தத் தேர்தலில் போட்டியிடும் தமது பிரதான வேட்பாளர்கள் தொடர்பிலான கட்சிகளின் நிலைப்பாடுகளை இந்த நாட்களில் வெளியிட்டு வருகின்றனர். அவர்கள் அவர்களுடைய நிலைப்பாடகள் தொடர்பில் அறிவித்ததன் பின்னர் நான் என்னுடைய நிலைப்பாடு தொடர்பில் அறிவிப்பேன். அதற்கு இன்னும் ஓரிரு நாட்கள் தேவைப்படுகின்றன.

நான் இதுவரையில் எந்தவொரு விடயத்திலும் தோல்வி கண்டதேயில்லை. என்னுடைய எதிர்கால தீர்மானம் குறித்து நான் இன்னமும் அறிவிக்கவில்லை. அதனை அறிவிக்க எனக்கு இன்னும் ஓரிரு தினங்கள் தேவைப்படுகின்றன. அதுவரையில் காத்திருக்குமாறு உங்கள் அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

எது எவ்வாறெனினும் பொதுமக்களின் தேவைகளை முன்னெடுப்பதற்கு என்னுடைய ஒத்துழைப்பினை அயராது வழங்குவேன். பொதுமக்கள் என்னிடம் எதையாவது எதிர்ப்பார்ப்பார்களாயின் அதனால் அவர்களுக்கு நன்மை கிடைக்குமாயின் அதற்காக என்னுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்குவேன். அது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி உரிய தீர்மானத்தினை வெகு விரைவில் எடுப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.
மேலும் இங்கே தொடர்க...