31 ஆகஸ்ட், 2009

புல்மோட்டை இடைத்தங்கல் முகாம் மக்கள் துயரங்களுக்கு மத்தியில்



புல்மோட்டை முகாமுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட மக்கள்
புல்மோட்டை முகாமுக்கு மக்கள் முன்னர் கொண்டுவரப்பட்ட காட்சி


இலங்கையின் வடக்கே யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருப்பவர்களைப் பார்வையிட தற்போது இராணுவத்தினரால் உறவினர்களுக்கு அனுமதியளிக்கப்பப்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர்க்காலத்தில் கடல் வழியாக புல்மோட்டையை வந்தடைந்த சுமார் 6000 பேர் இரண்டு நலன்பரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த காலங்களில் இந்த நிலையங்களில் தங்கியிருப்பவர்களைப் பார்வையிட தங்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை என்று கூறும் உறவினர்கள் தற்போது அனுமதியளிக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.

அங்கு சென்று தனது மகனைப் பார்வையிட்டு மட்டக்களப்பு திரும்பிய தாயொருவர் அந்த நிலையத்தில் தங்கியிருப்பவர்கள் பலவேறு சிரமங்களை எதிர் நோக்குவதை தன்னால் அறிய முடிந்ததாகக் கூறுகின்றார்.

வவுனியா இடைத்தங்கல் முகாம்கள் பற்றியே பலரும் ஆர்வம் காட்டுவதாக தனது கவலையை வெளிப்படுத்தியுள்ள அவர், புல்மோட்டை நலன்புரி நிலையம் தொடர்பாக எவரும் அக்கறை கொள்வதாக இல்லை என்றும் வருத்தம் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...
பாசிக்குடா சுற்றுலாத்துறை அபிவிருத்தி : உள்ளூர் மீனவர் விசனம்


இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையில் பிரபல்யம் பெற்றுள்ள பாசிக்குடா கடலோரப் பிரதேசத்தில் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்ய மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளினால் தமக்கு தொழில் ரீதியாகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பல வருடங்களாக மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வந்த மீனவர்களை அந்த இடங்களிலிருந்து வெளியேறுமாறு தற்போது அதிகாரிகள் அறிவித்துள்ள நிலையிலேயே மீனவர்கள் இது தொடர்பான தமது கவலையை வெளியிட்டுள்ளனர்.

இதன் காரணமாக கல்குடா பகுதியைச் சேர்ந்த குடும்பங்களில் 99 சதவீதமான குடும்பங்கள் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்குடா மீனவர் சங்கத் தலைவர் மயில்வாகனம் சுந்தரராஜா தெரிவித்தார்.

தங்களின் மீன் வாடிகள் அமைந்துள்ள காணி மற்றும் வள்ளங்கள் நிறுத்தப்பட்டுள்ள கடலோரப் பகுதி ஆகியன ஹோட்டல்கள் கட்டுவதற்கு அடையாளமிடப்பட்டு ஒப்பந்தக்காரர்களான முதலீட்டாளர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் அவர்,

"இது தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ள போதிலும் இது வரை சாதகமான பதில் எதுவும் கிட்டவில்லை" என்கிறார்

"பொருத்தமான மாற்று இடத்தை வழங்கினால் தொழில் ரீதியான பாதிப்பிலிருந்து தங்களால் விடுபட முடியும்"என சங்கச் செயலாளரான பெரியதம்பி நடராஜா சுட்டிக் காட்டுகின்றார்.

இப்பிரதேசத்திலுள்ள மீனவர்கள் 58 வள்ளங்களையும் தோணிகளையும் வைத்திருப்பதாகக் கூறும் அவர் எந்நேரத்திலும் தாங்கள் இங்கிருந்து வெளியேறலாம் அல்லது வெளியேற்றப்படலாம் என்ற நிலையிலேயே இருப்பதாகவும் தெரிவிக்கின்றார்.

"தற்போதைய இடத்திலிருந்து சற்றுத் தொலைவில், அதாவது கல்குடா இராணுவ முகாமை அண்மித்த பகுதியில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் அப்பகுதி கற்பாறைகள் நிறைந்திருப்பதால் பொருத்தமற்ற இடமாகவே உள்ளது." என்றும் தெரிவித்துள்ளார் பெரியதம்பி நடராஜா.

"சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பதை மீனவர்கள் மறுக்கவில்லை.ஆனால் பொருத்தமான இடமொன்றை பெற்று இதனால் ஏற்படும் பாதிப்பிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்றுதான் மீனவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்" என்றார்



மேலும் இங்கே தொடர்க...
ஆதரவற்ற சிறுவர் நலன் குறித்து மனித உரிமைக்குழு கலந்துரையாடல்



வவுனியா மெனிக்பாம் முகாம்கள் சிலவற்றில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள ஆதரவற்ற சிறுவர்களின் எதிர்கால நலன்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் 2 ஆம் திகதி புதன்கிழமை கலந்துரையாடவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய பொறுப்பதிகாரி எம்.ஆர்.பிரியதர்சன தெரிவித்துள்ளார்.

மெனிக்பாம் இடைத்தங்கல் முகாம் தொகுதியைச் சேர்ந்த தர்மபுரம் முகாமில் 35 சிறுவர்களும், சுமதிபுரம் முகாமில் 26 சிறுவர்களும், வீரபுரம் முகாமில் 13 சிறுவர்களும் இருப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய அலுவலகத்தினர் கண்டறிந்துள்ளனர்.

இவர்களின் முறையான பராமரிப்பு, இவர்களுக்கான சமூகப் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், எதிர்கால நன்மைகள் என்பன குறித்து சம்பந்தப்பட்ட முகாம்களின் பொறுப்பதிகாரிகள், மற்றும் அந்தந்த முகாம்களைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் ஆகியோருடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய அதிகாரிகள் கலந்துரையாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

"இந்த முகாம்களில் சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்ற போதிலும், அவர்களது பெற்றோர் - உற்றார்கள் இருக்கின்றார்களா என்பது குறித்த தகவல்கள் எதுவும் தெரியாது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட சிறுவர்களை உரிய இடங்களில் வைத்துப் பராமரிப்பதற்கு இந்தக் கலந்துரையாடல் வழிசமைக்கும்" என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய இணைப்பதிகாரி பிரியதர்சன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்
மேலும் இங்கே தொடர்க...

பத்திரிகையாளர் திஸ்ஸநாயகத்துக்கு 20 வருட சிறை

http://www.bbc.co.uk/worldservice/images/2008/06/20080630132612tissa203.jpg

மூத்த பத்திரிகையாளர் ஜே.எஸ்.திஸ்ஸநாயகத்துக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று இருபது வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

திஸ்ஸநாயகத்துக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் தொடரப்பட்டிருந்த வழக்கில் அவருக்கு எதிரான மூன்று குற்றச்சாட்டுக்களில் அவர் குற்றவாளியென மேல்நீதிமன்றம் தீர்மானித்தது.

பயங்கரவாத தடுப்புச்சட்டம் கீழ் மற்றும் அவசரகால சட்டம் ஆகியவற்றின் விதிகளின் கீழ் சட்டமா அதிபரினால் திஸ்ஸநாயகத்துக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாதாந்த சஞ்சிகை ஒன்றை அச்சிட்டு பிரசுரித்தமை, வெளியிட்டமை தொடர்பாக இனங்களுக்கிடையிலான உணர்வுகளை தூண்டி பொதுமக்கள் மத்தியில் கலவரம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக பத்திரிகையாளர் திஸ்ஸநாயகத்துக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

2006 ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதிக்கும் 2007 ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதிக்கும் உட்பட்ட காலப்பகுதியில் பிரஸ்தாப குற்றங்கள் புரிந்துள்ளதாக அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரச படைகள் கிழக்கு மாகாணத்தில் இனப்படுகொலையில் ஈடுபட்டிருப்பதாக கருத்து தெரிவித்து தனது சஞ்சிகையில் கட்டுரை வெளியிட்டமை மூலம் அரச படைகளுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

மேலும் இனங்களுக்கிடையிலான குரோதங்களை ஏற்படுத்த அதன்மூலம் திட்டமிட்டிருப்பதாகவும் அக்குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முதலாவது, இரண்டாவது குற்றச்சாட்டுகளுக்கு தலா ஐந்து வருட சிறைத்தண்டனையும் மூன்றாவது குற்றச்சாட்டுக்கு பத்து வருட சிறைத்தண்டனையும் சேர்த்து 20 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த வருடம் மார்ச் மாதம் 6 ஆம் திகதி திஸ்ஸநாயகம் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். குறிப்பிட்ட மாதாந்த சஞ்சிகையை வெளியிட்ட அச்சக உரிமையாளர் என்.யசீகரன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட பின் அவர்களை பார்வையிட பொலிசுக்கு சென்றபோதே திஸ்ஸநாயகம் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டார்.

பலமாத காலமாக பொலிஸ் தலைமையகத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த திஸ்ஸநாயகம் பின்னர் கொழும்பு உயர்நீதிமன்ற தீர்ப்பொன்றை அடுத்து கடந்த மே மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் கொழும்பு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இவரால் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரணசிங்க என்பவருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சுயாதீனமாக வழங்கப்பட்டதென கொழும்பு மேல்நீதிமன்றம் ஏற்கனவே தீர்மானித்து அதனை அடிப்படையாக கொண்டு திஸ்ஸநாயக்துக்கு எதிரான வழக்கை விசாரணை செய்தது.

இதன்படி வழக்கு விசாரணை செய்த கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர, திஸ்ஸநாயகத்தின் மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் 20 வருட கடுழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

திஸ்ஸநாயகம் சார்பாக ஆஜரான சட்டத்தரணி அனில் டி சில்வா கருத்து தெரிவிக்கையில் திஸ்ஸநாயகம் ஒரு இனவாதி அல்லவென்றும் சிங்கள மக்களுக்கு ஆதரவான வகையில் பல்வேறு போராட்டங்களுக்கு அவர் தலைமை தாங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அரசியல் அமைப்பில் கருத்து வெளியிடும் சுதந்திரம் மட்டுமல்ல இன, மத ரீதியின்றியும் பாரபட்சமின்றியும் நியாயமானதொரு வழக்கு விசாரணைக்கு அதிகாரம் வழங்கியுள்ளபோதிலும் அவருக்கு எதிரான வழக்கில் இந்த நியாயம் வழங்கப்பட்டதா என்பது ஒரு கேள்விக்குறியான விடயம் என்றும் சட்டத்தரணி அனில் டி சில்வா நீதிமன்றத்தில் இன்று வெளிப்படையாக தெரிவித்தார்.

இவ்வழக்கின் தீர்ப்பை அவதானிக்க பெருந்திரளான பத்திரிகையாளர்கள் மற்றும் வெளிநாட்டு தூதரக உத்தியோகத்தர்கள் கொழும்பு மேல்நீதிமன்றத்துக்கு சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...
யாழில் சகல உள்ளுராட்சி சபைகளுக்கும் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை-


இவ்வருட இறுதிக்குள் யாழ்ப்பாணத்தின் சகல உள்ளுராட்சி சபைகளுக்கும் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயக கட்சி செயலாளரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். இந்தக் கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்திலுள்ள 17சபைகளில், யாழ். மாநகரசபைக்கு தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. அடுத்துள்ள 03 நகரசபைகளான வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, சாவகச்சேரி என்பவற்றிற்கும் 13 பிரதேச சபைகளுக்கும் விரைவான ஒரு தேர்தலை நடத்துமாறு கேட்டுள்ளேன். ஏனெனில் அந்தமக்கள் தாங்களாகவே அந்த பிரதேசசபைகளை ஆளவேண்டுமென்று விரும்புகின்றனர். அதன் ஊடாகவே விரைவான அபிவிருத்தியை முன்னெடுக்கலாம் என்றும் அவர்கள் கோருகின்றனர். இது தொடர்பாக ஜனாதிபதியை சந்தித்து கோரிக்கை விடுக்கவுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். இதேவேளை யாழ்ப்பாணத்தில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் 1998ம் ஆண்டு இறுதியாக நடைபெற்றது
மேலும் இங்கே தொடர்க...

சரணடைந்த - கைதான புலி

உறுப்பினர்களின்

புனர்வாழ்வுக்கென 200 கோடி ரூபா


சர்வதேச இடம்பெயர்ந்தோர்
அமைப்புடன் ஒப்பந்தம் செய்ய அரசாங்கம் தீர்மானம்


எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பிலிருந்து படையினரிடம் சரணடைந்த மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளின்போது படையினரால் கைது செய்யப்பட்டவர்களது புனர்வாழ்வுக்காக சர்வதேச இடம்பெயர்ந்தோருக்கான அமைப்பினூடாக 150 கோடி ரூபா முதல் 200 கோடி ரூபா வரையிலான நிதியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில் நீதி மற்றும் நீதி மறுசீரமைப்பு அமைச்சும் சர்வதேச இடம்பெயர்ந்தோருக்கான அமைப்பும் இவ்வாரமளவில் கொழும்பில் ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடவுள்ளன.

புலி பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த மக்களுக்கு இயல்பு வாழ்க்கையைப் பெற்றுக்கொடுப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்த முயற்சிகளுக்கு இதுபோன்று பல்வேறு வெளிநாட்டு உதவிகள் கிடைத்துள்ளன.

இந்த ஒப்பந்தத்தினடிப்படையில் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்திருக்கும் நிதியை விரைவில் பெற்றுக்கொடுப்பதற்கு அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய ஐரோப்பா நாடுகளும் ஜப்பான், இந்தியா ஆகிய ஆசிய நாடுகளும் இணக்கம் தெரிவித்திருப்பதாக நீதி மற்றும் நீதி மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

எல். ரீ.ரீ.ஈ அமைப்பிலிருந்து படையினரிடம் சரணடைந்த அல்லது மனிதாபிமான நடவடிக்கைகளின்போது படையினரால் கைது செய்யப்பட்ட குழுவினருக்கு புனர்வாழ்வு அளிக்குமுகமாக கணனி மற்றும் தகவல் தொழில்நுட்பம் பற்றி கற்பித்தல், தளபாடம் தயாரித்தல், தச்சுத் தொழில் செய்தல், ஆடை உற்பத்தி செய்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

மேலும் இங்கே தொடர்க...
மீள்குடியேற்றம் தாமதப்படுகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம்-

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை மீள்குடியமர்த்தும் பணியில் தாமதம் ஏற்பட்டு வருகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம் திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் அனைவரும் தாமதமின்றி மீள்குடியமர்த்தப்பட வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையில் நீண்டகாலமாக காணப்படுகின்ற இனப்பிரச்சினைக்கு சரியான அரசியல் தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டுமென்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.


மேலும் இங்கே தொடர்க...
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் பாரிய ரயில் மறியல் போராட்டம்-

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் எதிர்வரும் 2ம் திகதி பாரிய ரயில் மறியல் போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திராவிடர் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மறியல் போராட்டத்திற்கு அதன் தலைவர் வீரமணி தலைமை தாங்குவாரென்றும் கூறப்படுகின்றது. தமிழகம், விழுப்புரம் கள்ளக்குறிச்சியில் நேற்றையதினம் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே வீரமணி இதனைத் குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கான உரிமைகள் வழங்கப்பட்டு அவர்கள் முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட வேண்டுமென்பதை வலியுறத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் இங்கே தொடர்க...
லண்டனில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமரர்.அமிர்தலிங்கம் அவர்களின் நினைவுப்பேருரை-

தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவரும், முன்னைநாள் எதிர்க்கட்சி தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 82வது பிறந்ததின நினைவு பேருரை பிரித்தானியாவில் நாளையதினம் இடம்பெறவுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவ+ப் ஹக்கீம் அவர்கள் இந்நிகழ்வில் முக்கிய பேச்சாளராக பங்குகொண்டு சிறப்பிக்கவுள்ளார். இதில் அனைத்து ஜனநாயக விரும்பிகளையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளை கோரியுள்ளது. அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 82வது பிறந்ததின நினைவுப் பேருரை நிகழ்வு நாளை ஆகஸ்ட் 31ம் திகதி மாலை 6:00மணியளவில் INDIAN YMCA, Fitzroy Square, London. W1P 6AQ என்னுமிடத்தில் இடம்பெறவுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...