12 டிசம்பர், 2009

உருத்திரகுமாரனைக் கைதுசெய்யக்கூடிய ஆதாரங்களை அமெரிக்காவுடன் பகிரத் தயாரென அரசாங்கம் தெரிவிப்பு

புலிகள் இயக்கத்தின் செயற்பாட்டாளர் விஸ்வநாதன் உருத்திரகுமாரனைக் கைதுசெய்வதற்கான ஆதாரங்களை அமெரிக்காவுடன் பகிர்ந்துகொள்ளத் தயாராகவிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. குமரன் பத்மநாதனிடம் (கே.பி) மேற்கொண்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் உருத்திரகுமாரனுக்கும் புலிகளுக்குமிடையிலான தொடர்புகள் குறித்து ஆதாரங்களை திரட்டி வருவதாக பாதுகாப்புப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இந்நிலையில் உருத்திரகுமாரன் அமெரிக்காவில் எவ்வித குற்றச்செயல்களுடனும் தொடர்புபடாத நிலையில் அவரை அங்கு கைதுசெய்ய முடியாதென தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேர்ட் ஓ பிளெக் குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையில் அவரை அங்கு கைதுசெய்வதற்கான போதிய ஆதாரங்கள் இலங்கையிடம் இருப்பதாகவும், தேவைப்படும் பட்சத்தில் அவற்றை அமெரிக்காவுடன் பகிர இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


லங்கை கலைஞர்கள் சங்கம் ஜனாதிபதி மகிந்தாவுக்கே ஆதரவு


- ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரக் கட்சி சார்பாக போட்டியிடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே தமது முழுமையான ஆதரவினை பெற்றுக் கொடுக்கவிருப்பதாக இலங்கை கலைஞர்கள் சங்கம் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.தகவல் ஊடக அமைச்சில் நேற்றுக்காலை ஒலி ஒளி நிபுணத்துவ கலந்துரையாடல் எனும் தொனிப் பொருளில் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டிலேயே ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வழங்கப் போவதாக கலைஞர்கள் பகிரங்கமாக அறிவித்துள்ளனர். திரைப்படத் தயாரிப்பாளர்களான சுமித்ரா பீரிஸ், டக்ளஸ் சிறிவர்தன, ரோஹன வீரசிங்க, சோமரத்ன திசாநாயக்க நடிகர்களான மாலினி பொன்சேகா, ரவீந்திர ரன்தெனிய, ஜெக்சன் அந்தனி, பாடகி நீலா விக்கிரமசிங்க அறிவிப்பாளர் ரேனுக்கா பாலசூரிய ஆகியோர் ஏனைய கலைஞர்கள் சார்பில் கலந்துகொண்டு ஜனாதிபதிக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து நாட்டின் அனைத்து பிரதான நகரங்களிலும் பிரசாரக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தள்ளனர். நாட்டிலுள்ள கலைஞர்கள் நாட்டை மிகவும் நேசிப்பவர்கள். பொதுமக்களின்மீது மிகுந்த அக்கறை கொண்டவர்கள். தேசத்தின் எதிர்காலத்தை ஒப்படைப்பதற்கு சிறந்த தலைவர் ஒருவரை தெரிவுசெய்ய பொதுமக்களை வழிகாட்ட வேண்டியது எமது கடமையாகுமென நடிகர் ரவீந்திர ரன்தெனிய தெரிவித்துள்ளார்.

மோதல்களில் தொடர்புடைய சிறார்களை குடும்பத்தாருடன் வாழ அனுமதிக்க வேண்டும்ஐ.நா பிரதிநிதி-

உலகின் மற்ற பகுதிகளில் இருக்கும் உதாரணங்களை வைத்துப் பார்க்கும்போது இதுபோன்ற மோதல்களில் சம்பந்தப்பட்ட சிறார்கள், தங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து வாழும்போதே, போரினால் அவர்களுக்கு உண்டான உளவியல் பாதிப்புகளில் இருந்து நல்லமுறையில் மீண்டு வருகிறார்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக, ஐநாவின் சிறுவர்ககள் மற்றும் ஆயுத மோதல்கள் விவகாரத்தை கவனிக்கும் ஐ.நா. விசேட பிரதிநிதி ஜெனரல் பேட்ரிக் கொமேர் அவர்கள் தெரிவித்துள்ளார். அவருடைய ஐந்துநாள் இலங்கை பயணத்தின்போது, புலிகளால் வலுக்கட்டாயமாக படையில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டவர்களில் 300சிறார்களை அவர் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வாழும் சிறுவர்களை மீளவும் அவர்களது குடும்பங்களுடன் இணைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி பெற்றிக் கெம்ராட் தெரிவித்துள்ளார். கூடிய விரையில் இடம்பெயர்ந்து வேறுஇடங்களில் தங்கியுள்ள சிறுவர் சிறுமியர் தங்களது குடும்பங்களுடன் இணைக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நூற்றுக்கணக்கான சிறுவர் சிறுமியரை இன்னமும் காணவில்லை அல்லது சொந்தக் குடும்பங்களுடன் இன்னமும் இணைக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமியர்களைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் இன்றியமையாததென குறிப்பிட்டுள்ளார். விலைமதிப்பற்ற சிறுவர் பராயத்தை அர்த்தபூர்வமானதாக மாற்ற வேண்டியது நம் அனைவரினதும் கடமையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமியருக்கு இலங்கை அரசாங்கம் வழங்கி வரும் நிவாரணங்கள் வரவேற்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான குழுவினர் யாழ்.விஜயம்-


எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பினர் இன்று யாழ்.குடாநாட்டிற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளனர். ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் ஆகியோர் அடங்கிய குழுவினரே இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர். இக்குழுவினர் நல்லூர் கந்தன் ஆலயம் மற்றும் யாழ்.நாகதீப விகாரை என்பவற்றுக்குச் சென்று வழிபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து யாழ். மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகத்தையும் சந்தித்துப் பேசியுள்ளனர். அத்துடன் யாழ்ப்பாணத்திலுள்ள உயர்கல்வி மாணவர்களையும், யாழ். சமாதான நல்லிணக்க குழுவினரையும், இதனைத் தொடர்ந்து யாழ். வர்த்தகப் பிரமுகர்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் எதிர்க்கட்சிகளின் தூதுக்குழுவினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தமிழ் மக்களின் பேரழிவுக்கு அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் பிரதிநிதிகளின் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாம் ஒரு ஆட்சிமாற்றத்தைக் காணவேண்டுமாயின் அனைவரும் சரத் பொன்சேகாவிற்கே வாக்களிக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி வெற்றிபெறும் பட்சத்தில் ஏ9வீதி முழுமையாக திறக்கப்படுமென அவர் உறுதியளித்துள்ளார். யாழ். குடாநாட்டின் கல்வி நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்வதற்காக அங்கு மேலும் பல்கலைக்கழகங்களை நிறுவ எண்ணியுள்ளதாகவும், அது மட்டுமன்றி நாட்டின் ஏனைய தமிழ்ப் பகுதிகளின் கல்வி நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்யத் தீர்மானித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.


அம்பாறையில் 52,218, மட்டக்களப்பில் 1220 குடும்பங்கள் அடைமழையால் பாதிப்பு

- அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் அடைமழை காரணமாக நேற்றுவரை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் 52218குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு ஒருவர் உயிர் இழந்துள்ளதாக முகாமைத்துவ நிலைய பொறுப்பதிகாரி ஏ.எஸ்.எம். சியாத் தெரிவித்துள்ளார். அதேநேரம், மட்டக்களப்பு மாவட்டத்தில் 1220குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலானோர் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர். 200குடும்பங்களைச் சேர்ந்தோர் மாத்திரம் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கான உணவுகளை வழங்குவதில் சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பிரதேச செயலக பிரிவுரீதியாக கல்முனையில் 7565குடும்பங்களும் காரைதீவில் 2595குடும்பங்களும் சாய்ந்தமருதுவில் 6566குடும்பங்களும் நிந்தவூரில் 7000குடும்பங்களும் அட்டாளைச்சேனையில் 5842குடும்பங்களும் ஆலையடிவேம்பில் 5009குடும்பங்களும் திருக்கோவிலில் 8426குடும்பங்களும், சம்மாந்துறையில் 9,895குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அம்பாறை பதில் அரசாங்கஅதிபர் தெரிவித்துள்ளார். பொத்துவில் பிரதேசசெயலாளர் பிரிவில் 6200குடும்பங்களும், நாவிதன்வெளியில் 1800குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது


பிரபாகரனும், பொட்டம்மானும் உயிரிழந்ததாக இந்தியாவிடம் இலங்கை அறிவிப்பு

- புலிகளின் தலைவர் பிரபாகரனும், புலிகளின் புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டம்மானும் உயிரிழந்ததாக இந்திய அரசிடம் இலங்கையரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகள் இயக்கத்தின் முன்னாள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் புலனாய்வுப்பிரிவின் பொறுப்பாளர் பொட்டுஅம்மான் ஆகியோர் முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்தி கொலைவழக்கு தொடர்பான விசாரணைகளுக்காக இந்தியாவினால் தேடப்பட்டு வந்தனர். இந்நிலையில் இலங்கையின் இந்த அறிவிப்பின்படி நீண்டகாலமாக தொடர்ந்து வந்த ரஜீவ்காந்தி படுகொலை வழக்கின் சர்ச்சை முடிவுக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ரஜீவ்காந்தியின் படுகொலை விசாரணைகளை முன்னெடுப்பதற்காக குறித்த இருவரதும் மரணச் சான்றிதழ்களையும் வழங்குமாறு இந்தியா இலங்கையிடம் கோரிக்கை விடுத்திருந்தது. அத்துடன் இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 26பேருக்கு இந்திய நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளதுடன், அவர்களில் நால்வருக்கு மரணதண்டனையும் விதித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...
கல்பிட்டி-மன்னார் நேரடி பஸ் சேவை நேற்று ஆரம்பம்




கல்பிட்டியிலிருந்து மன்னாருக்கான பயணிகள் போக்குவரத்து பஸ் சேவை நேற்று (2009.12.10) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டரை வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த பஸ் சேவையினால் பயணிகள் பெரும் அசௌகரியங்களை அனுபவித்து வந்தனர்.

கல்பிட்டியிலிருந்து புத்தளம் வந்து, அங்கிருந்து மதவாச்சி வரை செல்லும் வவுனியா-மன்னார் பஸ்களில் சென்று, மதவாச்சியில் கடும் சோதனைகளுக்குப் பின்னர் மற்றுமொரு பஸ்ஸில் ஏறி பயணிக்க வேண்டிய நிலையே இருந்து வந்தது.

தற்போது மதவாச்சி சோதனை சாவடி பயணிகள் போக்குவரத்துக்காகத் திறந்து விடப்பட்டதையடுத்து இந்த பஸ் சேவை இன்று ஆரம்பமானது.

தினந்தோறும் காலை 7.00 மணிக்கு கல்பிட்டியிலிருந்து மன்னாருக்கும், மன்னாரிலிருந்து காலை 9.00 மணிக்கு கல்பிட்டிக்குமான போக்குவரத்து இடம்பெறும் என மன்னார் பஸ் சாலை பணிப்பாளர் எம்.அஸ்ஹர் தெரிவித்தார். இன்னும் சில தினங்களில் பஸ்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...
இலங்கையில் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரையும் நாம் ஆதரிக்கவில்லை சென்னையில் ரொபேட் ஒ பிளேக் தெரிவிப்பு

இலங்கையில் அமைதியாகவும் நியாயமான முறையிலும் தேர்தல் நடைபெற வேண்டும். வன்முறைகள் இன்றி தேர்தல் நடைபெறுவது அவசியம். நாம் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரையும் ஆதரிக்கவில்லை என்று அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான பிரதி ராஜாங்க செயலாளர் ரொபேட் ஒ பிளேக் தெரிவித்தார்.

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் அமைதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அங்கு வசிக்கும் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு அளிக்க வேண்டும் என நாம் வலியுறுத்தியுள்ளோம் என்றும் அவர் கூறினார்.

இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் இந்தியாவுக்கு வருகைதந்த அவர் சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதகரத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.இங்கு அவர் மேலும் கூறியதாவது:

கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கைக்கு சென்று வந்தேன். இலங்கை முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள், மீண்டும் தங்களது சொந்த இடங்களுக்கு குடியமர்த்தப்பட்டு வரும் விதம் எங்களுக்கு திருப்தி அளிப்பதாக இருக்கிறது. அங்கு இன்னும் 1 லட்சத்து 15 ஆயிரம் தமிழர்கள் மட்டுமே முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மற்ற அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கே திரும்பிவிட்டார்கள். முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பவர்களும், சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கவில்லை. இலங்கை ஜனாதிபதி முன்பு சொன்னபடியே, வரும் ஜனவரி மாதத்துக்குள் அவர்கள் அனைவரும் சொந்த இடங்களுக்குச் சென்றுவிடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

மன்னார் பகுதியில்மின் விநியோகம்

நான் இலங்கையில் மன்னார் பகுதியிலுல் உள்ள கிராமங்களுக்கு சென்றேன். அகதிகள் முகாம்களில் இருந்து அப்பகுதிக்குத் திரும்பிய மக்களிடம் நான் பேசினேன். அங்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த மக்கள் தங்களது வீடுகளை கட்டுவதற்கான பொருட்களை இலங்கை அரசு தந்துள்ளது. உணவுப் பொருட்களையும் சிறப்பான முறையில் விநியோகித்து வருகிறது. அங்கு விவசாயப் பணிகள் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூடங்கள், சாலைகள், மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன.

பல ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் கிடந்த பகுதிகளுக்கு மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறாக பலவித சேவைகளை அங்குள்ள மக்களுக்கு இலங்கை அரசு வழங்கி வருகிறது. இது ஒரு வரவேற்கத்தக்க முன்னேற்றமாகும். இந்த நடவடிக்கைககள் உறுதியாக தொடரும் என்று நம்புகிறேன்.

சீனா

தமிழர்கள் வாழும் பகுதியில் அமைதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அவர்களுக்கு அதிகாரப்பகிர்வு தர வேண்டும் என்று நாங்கள் இலங்கை அரசிடம் வற்புறுத்தியுள்ளோம். அங்கு நிலைமை சீரடைந்து, தற்போது அங்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக இலங்கை அதிபர் தேர்தல் ஜனவரி மாதம் நடைபபெறுகிறது. அதன்பிறகு அங்கு உள்ளாட்சி தேர்தலும், மாகாண தேர்தலும் நடைபெறுகிறது. இது அங்கு ஒரு நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். அங்கு புதிய அரசியல் தலைமுறையினர் உருவாவார்கள். இவர்கள், அந்தப் பகுதியில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தவும், தேசத்தை வலுப்படுத்தவும் உதவுவார்கள்.

சமீபகாலமாக இலங்கை விஷயங்களில் அமெரிக்கா அதிகம் ஆர்வம் காட்டும் வகையில் அதன் கொள்கையில் இருப்பதாக கூறுகிறார்கள். அங்கு சீனாவும் கவனம் செலுத்தி வருவதால்தான் எங்களது கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது தவறு. அங்கு நிலவிய சூழலை கருத்தில் கொண்டே நாங்கள் தலையிட்டிருக்கிறோம்.

விசாரணையின்றி இருப்பவர்களை

இலங்கையில் உள்ள சில முகாம்களில் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாக கருதப்படக்கூடிய 11 ஆயிரம் தமிழ் மக்கள் வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் விசாரணை இன்றி அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், புலிகளுடன் தொடர்பு இருப்பவர்களை மட்டும் தண்டித்து மற்றவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த நடவடிக்கையை இலங்கை அரசு மேற்கொண்டால் நாங்கள் வரவேற்போம். இலங்கையில் அமைதியான நியாயமான முறையில் தேர்தல் நடக்க வேண்டும். வன்முறை தலையீடு இன்றி தேர்தல் நடக்க வேண்டும்.நாங்கள் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரையும் ஆதரிக்கவில்லை.

ஒபாமா இந்தியா வருகை

இந்தியா அமெரிக்கா இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை வலுப்படுத்தவும், அடுத்த ஆண்டில், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகைக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவும் வந்திருக்கிறேன். அதிபர் ஒபாமாவின் இந்திய வருகை பல விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். உலகின் எதிர்கால பாதுகாப்பையும், நன்மையையும் உறுதி செய்வதில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதில் இந்தியா ஒரு தவிர்க்க முடியாத கூட்டாளி என்று அதிபர் ஒபாமா தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

டேவிட் ஹெட்லி டேவிட் ஹெட்லி விவகாரத்தில் இந்தியாவுக்கு தேவையான ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்திய உள்துறை மந்திரி சிதம்பரம் அமெரிக்கா வந்தபோது சிறப்பான முறையில் பேச்சுவார்த்தைகள் அமைந்தன. பாகிஸ்தானுக்கு நாங்கள் அளிக்கும் உதவி, இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படாமல் இருப்பதை நாங்கள் கண்காணித்து வருகிறோம். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் திரும்பப் பெறுவது 2011ஆம் ஆண்டு இறுதியில்தான் தொடங்கும். ஆனால், அது அப்போது நிலவும் சூழலை பொறுத்து மறுபரிசீலனை செய்யப்படும். ஆப்கானிஸ்தான் இராணுவத்தை வலுப்படுத்துவதே எங்களது முக்கிய நோக்கம்.
மேலும் இங்கே தொடர்க...


ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கவே ஐக்கிய தேசிய கட்சி

- ஜே.வி.பி கூட்டு

இலங்கையின் ஜனநாயக விழுமியங்களை குழிதோண்டிப் புதைக்கவே ஐ.தே.க. - ஜே.வி.பி கூட்டு சரத் பொன்சேகாவைத் தேர்ந்தெடுத்துள்ளது என்று இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான டியூ குணசேகர நேற்றுத் தெரிவித்தார்.

எந்த விதத்திலும் ஒத்துச் செல்ல முடியாத ஐ.தே.கவும், ஜே. வி. பியும் கூட்டுச் சேர்ந்திருப்பது ஜனநாயகத்தைப் பெற்றுத் தரவோ, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கவோ அல்ல.

மாறாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிக்க முயற்சி செய்யும் வெளிநாட்டு சூழ்ச்சியாளர்களின் தேவையை நிறைவேற்றுவதற்காகவே என்றும் அவர் கூறினார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஐ. ம. சு. முன்னணியின் தேர்தல் பிரசார செய்தியாளர் மாநாடு மகாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இச்செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் டியூ குணசேகர தொடர்ந்தும் உரையாற் றுகையில், பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதற்கான யுத்தம் முடிவுறுவதற்கு இரு வாரங்களுக்கு முன்னர் தொடக்கம் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது வெளிநாடுகள் யுத்தத்தை நிறுத்தும்படி கடுமையாக அழுத்தம் கொடுத்தன. இருப்பினும் இந்த அழுத்தங்களுக்கு தலை சாய்க்காது எமது ஜனாதிபதி பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டினார். இந்த சமயத்தில் மூன்றாம் மண்டல நாடுகள் தான் எமக்கு பக்கபலமாக இருந்தன. மேற்குலக நாடுகள் எமக்கு உதவிகள் நல்கவில்லை.

இவ்வாறான சூழ்நிலையில் ஜனாதிபதி தேர்தல் வந்திருப்பதால் வோஷிங்டனின் இணக்கப்பாட்டுடன் சரத் பொன்சேகாவை எதிரணி அபேட்சகராக கொண்டு வந்துள்ளனர்.

இந்த நாடு சுதந்திரமடைந்த பின்னர் எதிர்கொள்ளுகின்ற மிக மோசமான அரசியல் சூழ்ச்சியே இது. வெளிநாட்டு சதியாளர்களின் தேவையை நிறைவேற்றவே ஐ. தே. க., ஜே. வி. பி. கூட்டு இந்த சூழ்ச்சியில் பங்காளியாகியுள்ளது.

எதிரணி அபேட்சகர் இராணுவத்தில் 40 வருட காலம் சேவையாற்றியவர். அவருக்கு அரசியல் அனுபவம் கிடையாது. அதனால் அவரது அரசியல் பிரவேசம் இந்நாட்டு ஜனநாயகத்திற்கு பெரும் சவாலாகும்.

யுத்தம் முடிவுற்ற பின்னர் இடம்பெற்ற பாதுகாப்பு கவுன்ஸில் கூட்டத்தில் சரத் பொன்சேகா இராணுவத்திற்கு ஒரு இலட்சம் பேரைத் திரட்ட வேண்டும். முப்படைகளுக்கும் கட்டளை இடக்கூடிய அதிகாரம் தமக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இது அவரது உள்நோக்கத்தை நன்கு புலப்படுத்துகின்றது.

இதனால் இந்நாட்டின் ஜனநாயக அரசியல் இராணுவ மயமாகக்கூடிய நிலைமை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.



. தே. க. - ஜே. வி. பி. கூட்டுக்குள் முரண்பாடு:

இரு வாரங்களுக்குள் பொன்சேகாவின் பிரசாரத்தில் முட்டுக்கட்டை ஏற்படும்

ஐ. தே. க., ஜே. வி. பி. கூட்டுக்குள் ஏற்பட்டிருக்கும் உள் முரண்பாடு காரணமாக அடுத்துவரும் இரு வாரங்களுக்குள் சரத் பொன்சேகாவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் பாரிய முட்டுக்கட்டையை எதிர்கொள்ளும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன நேற்றுத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஜனாதிபதி தேர்தல் பிரசார கோஷங்களை எதிரணி அபேட்சகர் தமது பிரசாரத்திற்காக களவாடியுள்ளார் என்றும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறினார்.

தேசப்பற்றாளர் முகாமிலிருந்த சரத் பொன்சேகா எதிரணி முகாமுக்குள் சென்றதால் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலு முள்ள புலி ஆதரவாளர்களே மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலின் நிமித்தம் ஐ. ம. சு. மு. வின் செய்தியாளர் மாநாடு மகாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இச்செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அமைச்சர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி தேர்தலின் எதிரணி அபேட்சகரின் ஊடகப் பேச்சாளர்களாக எம்.பிக்களான மங்கள சமரவீரவும் அனுர குமார திசாநாயக்காவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் ஐ. தே. க. சார்பில் எவருமே நியமிக்கப்படவில்லை. ஐ. தே. க.வில் பல பேச்சாளர்கள் இருந்தும் அவர்கள் நியமிக்கப்படவில்லை. இதற்கான காரணம் என்ன? இது அவர்களது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. இதற்கு ஐ. தே. க. - ஜே. வி. பி. கூட்டுக்குள் ஏற்பட்டுள்ள உள்முரண்பாடே காரணம்.

ஐ. ம. சு. முன்னணியின் ஜனாதிபதி தேர்தல் அபேட்சகரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் திட்டமிட்ட அடிப்படையில் வெற்றிகரமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால், எதிரணி அபேட்சகருக்கு பிரசாரம் செய்யக் கூட ஆளில்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசார கோஷங்களை களவாடியே சுவரொட்டி வெளியிடும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. ஏனெனில் எதிரணி அபேட்சகர் அரசியலில் ஒரு குழந்தைதான்.

இதன் காரணத்தினால் தான் அவர் தேசிய ஊழியர் சங்க மாநாட்டில் கலந்து கொண்டு அரச ஊழியர்களுக்கு ரூ. 10,000 படி சம்பள உயர்வு வழங்குவதாக அறிவித்தார். இதனை அவரால் எவ்வாறு செய்ய முடியும். இவரது அறிவிப்புபடி சம்பள உயர்வு வழங்குவதாயின் வருடத்திற்கு 120 பில்லியன் ரூபா தேவை.

ஆகவே, பொருளாதாரம், திறைசேரி குறித்த அறிவு இருந்திருந்தால் அவர் இவ்வாறு அறிவித்திருக்க மாட்டார். சரத் பொன்சேகா எதிரணி ஜனாதிபதி தேர்தல் அபேட்சகர் என ஜே. வி. பி. அறிவித்ததை தொடர்ந்து அவுஸ்திரேலியா, கனடா,பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் வாழும் புலி ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கி பட்டாசு கொளுத்தி மகிழ்ந்தனர்.



ஆசியாவின் கேந்திர நிலையமாக இலங்கை மாற

கல்வித்துறையில் விரிவான மாற்றங்கள் வேண்டும்

ஆசியாவின் அறிவின் கேந்திர நிலையமாக இலங்கையை மாற்ற வேண்டுமானால் நமது கல்வித் துறையில் விரிவான மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கையானது கடல், வான் மற்றும் வர்த்தகத் துறை கேந்திர நிலையமாக மாறிவருகின்ற போதும் அறிவின் கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றுவதே தமது எதிர்பார்ப்பாகு மெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எமது எதிர்கால சந்ததியினரை விஞ்ஞான உலகிலும், தொழில்நுட்ப உலகிலும் வெற்றிபெறக் கூடிய வகையில் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு கல்வித் துறையில் சகல அதிகாரிகளுக்குமுரியதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கல்வித்துறை நிர்வாகச் சேவை சங்கத்தின் பிரதிநிதிகள் ஜனாதிப தியைச் சந்தித்த நிகழ்வொன்று நேற்று முன்தினமிரவு அலரி மாளிகையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

அறுபது ஆண்டுகளுக்கு மேல் நாம் ஜனநாயக ரீதியில் ஆட்சி செய்யும் நாடு இது. அந்த ஜனநாயகத்தை நாம் தொடர்ந் தும் பாதுகாப்பது அவசியம். ஜனநாயகத்தை உதாசீனப்படுத்திய காலகட்டமொன்றை நாம் கடந்து வந்துள்ளோம்.

சமாதான உடன்படிக்கையொன்றை மேற்கொண்டு நாட்டை இரண்டாகப் பிளவுபடுத்த முயற்சித்த யுகமொன்று இருந்தது. இது போன்ற செயல்கள் ஜனநாயக நாடொன்றில் இடம்பெறக் கூடாது. பட்டலந்தை வதை முகாம் ஒருபோதும் எதிர்பார்க்காத ஒன்று. எனினும், நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக நாம் ஆரம்பித்த போராட்டத்தின் பலனை இன்று நாடு அனுபவித்து வருகின்றது.

இந்நாட்டின் சகல மக்களினதும் ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்துவது முக்கியம் என்பதாலேயே வடக்கு மக்களும் தமக்கு விருப்பமான தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே ஜனாதிபதித் தேர்தலை நடத்தத் தீர்மானித்தோம். இதன் மூலம் நாட்டின் சகல மக்களும் சமமாக ஜனநாயக உரிமையை அனுபவிப்பார்கள் என நம்புகிறேன்.

வடக்கு மக்கள் எமக்கு வாக்களிக்கவில்லை. எனினும் அவர்கள் விரும்பிய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் சந்தர்ப்பத்தை நாம் வழங்க வேண்டும். ஜனநாயக நாட்டின் தலைவன் என்ற வகையில் அதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளோம். நான் ஒரு பகுதியினருக்கு தலைவனாக இருப்பதில் பயனில்லை.

அதனால் தான் இந்தத் தேர்தலை நடத்த தீர்மானித்தேன்.

எனது பதவிக் காலம் இன்னும் இரண்டு வருடங்களாக உள்ள போதும் அவர்களுக்கு நாட்டின் தலைவரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இத்தேர்தலைக் கொண்டு வந்தோம்.

அம்மக்களை பயங்கரவாதத்திலிருந்து மீட்டுள்ளோம். மீள்குடியேற்றம் இடம்பெற்று வருகிறது. தற்போது நிவாரணக் கிராமங்களில் 94,000 பேரே உள்ளனர். தினமும் மீள்குடியேற்றம் நடைபெறுகிறது. தற்போது ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தவறு என சிலர் விமர்சிக்கின்றனர். எனினும் இதனை நான் தவறென்று கருதவில்லை. மக்களுக்கு அதற்கான உரிமை உள்ளது என்று நாம் நம்புகிறோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

யாழ்பாணத்தில் நடைபெற்ற சர்வதேச மனிதஉரிமை தினநிகழ்வில் புளொட் தலைவர் பங்கேற்று உரை ரரறரினார்














சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மனிதஉரிமை இல்லத்தின் ஏற்பாட்டில் நேற்றையதினம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. பெருந்திரளான மக்கள் இந்நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தனர். இந்நிகழ்வுகளில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) பொதுச்செயலர் தி.சிறீதரன், அமைச்சரும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா, தமிழ்க் கூட்டமைப்பின் எம்.பி மாவை சேனாதிராஜா, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசன் ஆகிய தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும், யாழ். மாநகரமேயர் திருமதி.யோகேஸ்வரி பற்குணராஜாவும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். முதலில் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது கொல்லப்பட்டவர்களின் நினைவுத்தூபிக்கு அருகாமையில் மரம் நடுகை நிகழ்வு இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து கட்சிகளின் தலைவர்கள் உரையாற்றினார்கள்.

இங்கு உரையாற்றிய புளொட் தலைவர் திரு.சித்தார்த்தன் அவர்கள், வீரசிங்கம் மண்டபத்தில் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது கொல்லப்பட்டவர்களின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் இந்த மரம் நடுகை இடம்பெற்றுள்ளது. 1974ம் ஆண்டு தைமாதம் 10ம் திகதி இடம்பெற்ற 04வது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று ஒன்பது தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்ட 36ம் ஆண்டு நினைவு தினத்திற்கு இன்னும் ஒருமாதகாலமே உள்ளது. இந்நிலையில் அன்றே மனித உரிமைகள் மீறப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் அனைத்துமே தமிழ் மக்களுடைய அரசியல் மற்றும் மனித உரிமைகளை மீறி வந்திருக்கின்றன. அதன்காரணமாக ஆரம்பத்தில் சாத்வீக ரீதியிலான போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் ஆயுதப் போராட்டமாக மாற்றம்பெற்றது. ஆனால் துரதிஸ்டவசமாக மனித உரிமை மீறல்கள் என்ற விடயத்தில் போராட்ட இயக்கங்களான நாங்களே ஒவ்வொருவருடைய கருத்துச் சுதந்திரங்களையும், பேச்சு சுதந்திரங்களையும் மீறி நடந்திருக்கிறோம். இவ்விடயங்களில் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டினாலும், பொதுவாக நாம் அனைவருமே மற்றையவர்களின் கருத்துச் சுதந்திரத்தை மதிக்கத் தவறியுள்ளோம். இங்குள்ள யாவரும் ஒற்றுமை ஒற்றுமை என்று குறிப்பிடுகின்றனர். இந்த ஒற்றுமை என்று கூறிக்கொண்டு நாம் பழைய நிலையை நோக்கிச் செல்லமுடியாது. எனினும் ஒற்றுமையை நாமும் விரும்புகிறோம்.

வடகிழக்கில் ஜனநாயகம், பன்முகத்தன்மை என்பன நிச்சயமாக இருக்கவேண்டும். நான் ஒரு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட ஒரு தகப்பனின் மகன் என்ற ரீதியிலும், அதேபோல வாழ்வுரிமை மறுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான எங்களுடைய தோழர்களின் அடிப்படையிலும் கூறுகிறேன், நாங்கள் மே 18க்குப் பிறகாவது தமிழர்களுக்குள்ளும், தமிழ்க் கட்சிகளுக்குள்ளும் ஒருவருக்கொருவர் மற்றைவர்களுடைய கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் மற்றையவர்கள் தமது கருத்தினைக் கூறக்கூடிய சுதந்திரத்தையாவது அனுமதிக்க வேண்டும். இதேவேளை போராட்டத்தில் பங்குபற்றிய அல்லது ஆதரவளித்த எந்த ஒரு கட்சியும் மனிதஉரிமை மீறல்களில் தமக்குச் சம்பந்தமில்லையென்று கூறமுடியாது. அது மாத்திரமல்ல பொதுமக்கள்கூட சில சாராருடைய மனிதஉரிமை மீறல்களை கைகட்டி நின்று பார்த்தது மாத்திரமல்லாமல், அதற்கு ஆதரவும் அளித்திருக்கிறார்கள். இந்த நிலைகளில் மாற்றம் வந்தால்தான் தமிழர்கள் தங்களுடைய உரிமைகளைப் பெற்று மானத்துடன் வாழலாம் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வுகளைத் தொடர்ந்து இந்தப் போராட்டத்தினால் வந்த அழிவுகள், தமிழ்மக்கள் தமிழ் அரசியல் கட்சிகளால் பிரித்தாளப்பட்டமை என்பவற்றை எடுத்துவிளக்கும் வகையில் மிகவும் சிறந்த நிகழ்வாக சிறுவர்களின் நாட்டிய நாடகமொன்றும் இடம்பெற்றது. அடுத்ததாக வீரசிங்கம் மண்டபத்திலிருந்து யாழ். பஸ் நிலையம் வரையில் மனித உரிமையை வலியுறுத்தும் வகையிலான பேரணியொன்றும் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து இன்றிரவு ஆரியகுளக் கரையில் தீபங்கள் ஏற்றப்பட்டு மனித உரிமை நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...
இலங்கை-இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு

வடக்கே மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் அவர்களுடைய சொந்த இடங்களில் குடியமர்த்தும் பிரச்சனை குறித்து வெளிவிவகார அமைச்சர் ரோஹிகித போகொல்லாகமவுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆலோசனை நடத்தியுள்ளார்.

மியான்மர் நாட்டில் பல்துறை, தொழில்நுட்ப, பொருளாதார கூட்டமைப்புக்கான வங்காள விரிகுடா அமைப்பின் 12ஆவது அமைச்சர்கள் நிலையிலான கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்க ரோஹிகித போகொல்லாகம , எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோர் மியானமார் சென்றுள்ளனர். அப்போது இருவரும் சந்தித்துப் பேசினர்.

இதன் போது இலங்கையில் மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த தமிழர்களை மீண்டும் குடியமர்த்தும் பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆலோசிக்கப்பட்டதுடன், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது குறித்தும் பேசப்பட்டதாகத் தெரியவருகிறது
மேலும் இங்கே தொடர்க...