25 ஜனவரி, 2010


பாதிக்கப்பட்ட ஹெய்ட்டி மக்களுக்கு உதவச் சென்ற இலங்கைப் படையினருக்கு இடையூறுகள்-

அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட ஹெய்ட்டி மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கச் சென்றிருக்கும் இலங்கை அமைதிகாக்கும் படையினருக்கு இடையூறுகள் விளைவிக்கப்பட்டுள்ளன. நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவுப் பொருட்களை வழங்கச் சென்ற இலங்கை அமைதிகாக்கும் படையினரைச் சுற்றிய 3ஆயிரம் மக்கள் அவர்களுக்கு இடையூறுகளை விளைவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. நிவாரண உதவிகளை வழங்கும்பொருட்டு இலங்கையின் அமைதிகாக்கும் படையினர் ஹெய்ட்டியின் புதிய காற்பந்து விளையாட்டு மைதானத்தில் முகாம்களை அமைத்துத் தங்கியுள்ளனர். இவ்வாறு இலங்கை அமைதிகாக்கும் படையினருக்கு இடையூறுகள் விளைவிக்கப்பட்டபோதிலும் அதில் எவருக்கும் காயங்களோ பாதிப்புக்களோ ஏற்படவில்லையென்றும் கூறப்படுகின்றது.

திருகோணமலை நகரசபை தலைவர் கௌரிமுகுந்தனின் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது-

திருமலை நகரசபை தலைவர் ச.கௌரிமுகந்தனின் பாதுகாப்பு வாபஸ்பெறப்பட்டுள்ளது. நாiளை 26.02.2010 நடைபெறவிருக்கும் 6வது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எதிர்கட்சி வேட்பாளருக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக விடுக்கப்பட்ட செய்தியைத் தொடர்ந்தே இந்நிலைமை அவருக்கு ஏற்பட்டுள்ளதென்று தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் விலகப்பட்டதைத் தொடர்ந்து தனக்கு எதுவும் நடக்கலாம் என தான் அஞ்சுவதாக கௌரிமுகுந்தன் தெரிவித்துள்ளார். இது விடயமாக திருமலை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு தான் அறிவித்தபோது தேர்தல் கடமைகளுக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.



ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி


No Image

நாட்டின் ஆறாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் தெரிவுசெய்யப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகளை அனுப்பும் பணிகள் இன்று காலை நடைபெற்றன. நாளைய தேர்தலுக்காக 250,000 அரச அதிகாரிகளும் ஊழியர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை யாழ்ப்பாணத்தைச் சோந்த 539 வாக்களிப்பு நிலையங்களுக்குமான தேர்தல் வாக்குப் பெட்டிகள் இன்று காலை முதல் யாழ்.செயலகத்திலிருந்து கொண்டு செல்லப்படுகின்றன.

அரச மற்றும் தனியார் வாகனங்களில் வாக்குப் பெட்டிகள் அந்த அந்த வர்க்களிப்பு நிலைய அத்தியட்சகரினால் பொறுப்பேற்று பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.


வவு. நலன்புரிக் கிராமங்களில் 1000 ரூபாவுக்கு அடையாள அட்டை வாங்கப்படுவதாக ஜயலத் தகவல்

No Image
வவுனியா நலன்புரிக் கிராமங்களிலுள்ள வாக்காளர்களிடம் ஆயிரம் ரூபா பணம் கொடுத்து அடையாள அட்டைகள் வாங்கப்படுவதாக குற்றம் சுமத்தியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, தேர்தல் துஷ்பிரயோகங்களை மேற்கொள்ளவென வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு தெற்கிலிருந்து பெருந்தொகை சிங்களவர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

வடக்கிலிருந்து இந்தத் தகவல் தமக்கு சற்றுமுன்னர் கிடைத்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

"வவுனியா நலன்புரி முகாம்களிலுள்ள அப்பாவித் தமிழர்களிடம் பலவந்தமாக அடையாள அட்டைகள் பறிக்கப்படுகின்றன. தெற்கிலிருந்து பெருந்தொகை சிங்களவர்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளார்கள். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இராணுவத்தின் பலம் அதிகமாக உள்ளதால் அரசாங்கத்தின் துஷ்பிரயோக செயற்பாடுகளும் அதிகமாக இருக்கும்.

மக்கள் வாக்களிப்பதற்காக போக்குவரத்து சேவைகளை வழங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்தது. எனினும் தேர்தல் தினமான நாளை எந்தவொரு அரச பஸ்ஸும் சேவையில் ஈடுபடுத்தப்படக் கூடாது என யாழ்ப்பாணத்தில் அறிவுறுத்தப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அது தவிர வடக்கு கிழக்கில் இன்னும் பகிர்ந்தளிக்கப்படாமல் ஏராளமான வாக்காளர் அட்டைகள் தபால்நிலையங்களில் தேங்கிக் கிடக்கின்றன. அதற்குப் பதிலாக என்ன செய்ய வேண்டும் என்பதை அரசாங்கம் இதுவரை சொல்லவில்லை. இவ்வாறான சம்பவங்களை நோக்கும்போது ஆட்சி அதிகாரம் உள்ள தனிநபரின் தேவை கருதியே அரச ஆளணிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக உறுதியாகக் கூற முடியும்" என்றார்.


ரணிலின் வீட்டைச் சோதனையிட குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு நீதவான் தடை

No Image


ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டைச் சோதனையிடுவதற்காகக் குற்றத்தடுப்பு பிரிவினரால் கோரப்பட்டிருந்த அனுமதியை கொழும்பு மஜிஸ்ரேட் நீதவான் மறுத்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டைச் சோதனையிடுவதற்கான அனுமதியை குற்றத்தடுப்பு பிரிவினர் கடந்த சனிக்கிழமை கொழும்பு மஜிஸ்ரேட் நீதவான் சந்தனி மீகொடவிடம் கோரியிருந்தனர். இவ்வனுமதியைப் பெறுவதற்காக மஜிஸ்ரேட் நீதவான் சந்தனி மீகொடவின் வீட்டுக்குக் குற்றத்தடுப்பு பிரிவினர் சென்றபோதே அவர் அனுமதி வழங்க மறுத்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டில் சட்டவிரோத சுவரொட்டிகள், துப்பாக்கிகள் உட்பட சட்டவிரோத ஆயுதங்கள் இருப்பதாகப் பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சோதனையிடுவதற்கான அனுமதியைக் குற்றத்தடுப்பு பிரிவினர் கோரியிருந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டை சோதனையிட முயற்சிக்கின்றமை அரச அராஜகங்களில் மற்றுமொரு செயற்பாடாகும். அரச அதிகாரங்களைப் பயன்படுத்தி தமக்குத் தேவையானதை சாதித்துக் கொள்ள சிலர் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...


யாழ்.மாவட்டத்தில் 72.9 வீத வாக்காளர் அட்டைகளே விநியோகம்:யாழ்.அரச அதிபர்


No Image

யாழ்.மாவட்டத்தில் 72.9 வீதமான வாக்காளர் அட்டைகளே இதுவரையிலும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான கே.கணேஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று யாழ்.செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே யாழ்.அரச அதிபர் இத்தகவலைத் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

"யாழ்.மாவட்டத் தெர்தல் தொகுதி யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. இவற்றில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 6 இலட்சத்து 30 ஆயிரத்து 548 வாக்காளர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 90 ஆயிரத்து 811 வாக்காளர்களும் உள்ளனர்.

இவர்கள் வாக்களிப்பதற்கு யாழ்ப்பாணத்தில் 529 வாக்களிப்பு நிலையங்களும், கிளிநொச்சியில் 95 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு மேலாக இரு மாவட்டங்களிலும் மொத்தமாக 76 கொத்தணி வாக்களிப்பு நிலைங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

26 ஆம் திகதி காலை 7.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை மக்கள் வாக்களிக்கலாம்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 72.9 வீதமான வாக்களார் அட்டைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 10.82 வீதமான வாக்காளர் அட்டைகளும் விநியோகிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படாமைக்குக் காரணம் அவர்களில் பலர் வவுனியாவில் உள்ளமையாயே ஆகும்.தபால் மூல வாக்களிப்பில் 5 ஆயிரத்து 795 விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு, 4 ஆயிரத்து 737 வாக்குகள் நேற்று வரை ஏற்கப்பட்டுள்ளன.

மிகுதி 26 ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு முதல் வந்து சேரும்.

இம்முறை தேர்தலில் இடம்பெயர்ந்து வந்து யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ளவர்களுக்காக தெல்லிப்பளை நலன்புரி நிலையம், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, கைதடி பனை அபிவிருத்திச் சபை நலன்புரி நிலையம் ஆகிய மூன்று நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதனைவிட யாழ்.மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து வெளி மாவட்டங்களில் தங்கியுள்ள தேர்தல் ஆணையாளருக்கு விண்ணப்பித்த 15 ஆயிரத்து 597 விண்ணப்பதாரிகள் அந்தந்த மாவட்டங்களில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்களிப்பு நிலைய வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள், அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், வாக்களிப்பு நிலைய பிரிவு முகவர்கள், சர்வதேச பார்வையாளர்கள், தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர், மேற்பார்வையாளர்கள் போன்றோர் செல்லலாம்.

11 தேர்தல் தொகுதிகளுக்கு தலா 2 வாக்கெண்ணும் நிலையங்கள் அடிப்படையில் 22 வாக்கெண்ணும் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதனைவிட தபால் மூல வாக்குகளை கணக்கிடுவதற்காகவும், இடம்பெயர்தோர் வாக்குகளை எண்ணுவதற்காகவும் மேலும் இரண்டு வாக்கு எணணும் நிலையங்கள் அமைக்கப்பட்டு மொத்தமாக 24 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

எண்ணப்பட்ட வாக்குகளை உத்தியோகபூர்வமாக வெளியிடும் மையமாக மாவட்டச் செயலகம் செயற்படும்.

இம்முறை தேர்தல் பணிகளுக்காக 6 ஆயிரத்து 375 உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போக்குவரத்திற்காக 352 வாகனங்களும் ஈடுபடுத்தப்படவுள்ளன.

தேர்தல் கடமைகளுக்கு முற்று முழுதாகப் பொலிஸார் நியமிக்கப்படுவார்கள். தேவைப்பட்டால் மாத்திரம் பொலிஸார் ஊடாக இராணுவத்தினர் பயன்படுத்தப்படுவார்கள்" என்றார்.


ஜனாதிபதித் தேர்தலில் அரச சொத்துக்கள் பயன்பாடு : கண்காணிப்பு நிலையம் கண்டனம்

No Image
ஜனாதிபதித் தேர்தலில் அரச சொத்துக்கள் பயன்படுத்தப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதா கவும் 17 ஆவது திருத்தச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வருவதன் மூலம் வன்முறைகளைத் தடுக்க முடியும் என நம்புவதாகவும் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் பிரசார காலத்தில் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படாமை, அரச ஊடக துஷ்பிரயோகங்கள், தேர்தல் ஆணையாளரின் அதிகாரங்கள் மதிக்கப்படாமை, அதிகாரங்களைப் பயன்படுத்திய வன்முறைகள் போன்றவை நியாயமானதும் நேர்மையானதுமான தேர்தலைப் பாதிப்பதாக அந்நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

நாளைய, தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் இடைக்கால அறிக்கை குறித்து நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது, அந்நிலையத்தின் இணை அழைப்பாளர் பா.சரவணமுத்து இவ்விடயங்களை குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

கடந்த ஜனாதிபதித் தேர்தல்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இம்முறை வன்முறைகள் அதிகரித்துள்ளன. அதிகாரமிக்கவர்களின் பலம் தேர்தல் காலத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அரச ஊடகங்களைக் கண்காணிக்கவென அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டபோதிலும் அவரால் தனது கடமையை சரிவரச் செய்ய முடியாமைக்கான பின்புலம் பற்றி நாம் தேர்தல்கள் ஆணையாளருடன் கலந்தாலோசித்தோம்.

நமது நாட்டில் 17ஆவது திருத்தச் சட்டம் முறையாக அமுல்படுத்தப்படுமானால் சுயாதீனமான ஆணைக்குழுக்களின் பரிபாலனம் மற்றும் செயற்பாடுகளினூடாக நியாயமான தேர்தல் நடத்தப்படுவதை எதிர்பார்க்க முடியும்.

சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாகைகளை உடனடியாக நீக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்திருந்தார். எனினும் பெரும்பாலான இடங்களில் அவை அகற்றப்படவில்லை என எமக்கு முறைப்பாடுகள் கிடைத்தன.

இவை தொடர்பாகவும் ஏனைய வன்முறை முறைப்பாடுகள் தொடர்பாகவும் நாம் அடிக்கடி தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவுறுத்தி வந்தோம். வன்முறைகள், முறைகேடான சம்பவங்கள் இடம்பெற்றுள்ள போதிலும் மக்களின் தீர்மானம் ஜனாதிபதித் தேர்தலில் வெளிப்படும் என நம்புகிறோம்" என்றார்.

தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் வடக்கு கிழக்குக்குப் பகுதிகளுக்கான இணைப்பாளர் எம்.எச்.எம். ஹஜ்மிர் கருத்து தெரிவிக்கையில்,

புஎமது கணிப்பீட்டின் அடிப்படையில் சுமார் 80ஆயிரம் பேர் நலன்புரி கிராமங்களில் இருக்கின்ற போதும் 40ஆயிரம் பேர் மாத்திரமே வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். வாக்காளர் அட்டைகளுக்கு விண்ணப்பிக்கா விட்டாலும் தமக்கு வாக்களிக்கச் சந்தர்ப்பம் கிடைக்கும் என பெரும்பாலானோர் எண்ணியிருந்தனர்.

வடக்கு கிழக்கில் வாக்களிப்பு நிலையங்களைக் கண்காணிப்பதற்காக எமது விசேட குழுவினருடன் சர்வதேச கண்காணிப்பாளர்களும் தொண்டர்களும் பணியில் ஈடுபடுவார்கள்" என்றார்.

தனக்குரிய அதிகாரங்கள் பயன்படுத்தப்படுவதற்குத் தடையாக இருக்கும் நபர்கள், விடயங்கள் தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளர் நீதிமன்றத்தினூடாக தீர்வொன்றைப் பெறமுடியுமல்லவா? என ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த பா.சரவணமுத்து,

"இதுதொடர்பாக நாம் பல தடவை தேர்தல் ஆணையாளரிடம் கோரினோம். ஆனால் அது ஏனைய கட்சிகளுக்குச் சாதகமாக அமையும் என்பதால் ஆணையாளர் பதில் கூற மறுத்துவிட்டார். எனினும் இவ்விடயம் தொடர்பாக வேறு எவரேனும் நீதிமன்றுக்கு செல்லலாம்" என்றார்.


அம்பாறையில் வாக்கு மோசடிகளைத் தடுக்க எதிரணி கூட்டமைப்பு விசேட ஏற்பாடு

No Image

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களாகிய, நாவிதன்வெளி, கல்முனை, காரைதீவு, ஆலையடிவேம்பு, கோமாரி, திருக்கோவில், வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்கு மோசடிகள் நடப்பதை முன்கூட்டியே தடுப்பதற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியன சேர்ந்து சில விசேட ஏற்பாடுகளைக் கூட்டாக எடுத்துள்ளன.

இது சம்பந்தமாக எடுக்கப்பட்டுள்ள முடிவுகளின் விபரங்களை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவிக்கையில்,

"கடந்த வெள்ளிக்கிழமை 22 ஆம் திகதி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் றவூப் ஹக்கீம் தலைமையில் அவரது சம்மாந்துறை அலுவலகத்தில் கூடி ஆராயப்பட்டது. அதன் அடிப்படையில் வாக்கு மோசடிகள் நடக்கக்கூடிய அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ் பிரதேசங்கள் அடையாளப்படுத்தப்பட்டன.

அப்பகுதிகளில் எதிர்க்கட்சிப் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,ஐக்கிய தேசியகட்சி,மக்கள் விடுதலை முன்னணி ஆகிய நான்கு கட்சிகளும் ஒன்றிணைந்து மூவினத்தையும் சேர்ந்த வாக்கெடுப்பு முகவர்களைத் தமிழ்ப் பிரதேச வாக்கெடுப்பு நிலையங்களுக்கு நியமிக்க முடிவெடுக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் இந்த நான்கு கட்சிகளும் கடந்த இரண்டு தினங்களாக கலந்தாலோசித்து அம்பாறை மாவட்ட தமிழ்ப் பிரதேசங்களில் எந்தவொரு வாக்கு மோசடிகளையும் தவிர்ப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹசன் அலி, நௌஷாத் ஜோசப் தங்கத்துரை,வசந்த (மக்களவிடுதலை முன்னணி) கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், தயாகமகே, மஜீட் மற்றும் கல்முனை மாநகர சபை எதிர்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரன் ஆகியோரை உள்ளடக்கிய குழு ஒருங்கிணைக்கும் பணியை முன்னெடுக்கவுள்ளது.

நியமிக்கப்படும் வாக்கெடுப்பு முகவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்கெடுப்பு நிலையங்களில் பணிபுரியும் போது, ஏதாவது வாக்கு மோசடி நடந்தால், கையடக்கத் தொலைபேசி மூலமாக உடனடியாக அம்பாறை மாவட்ட தமிழ்ப் பிரதேசங்களிலும் அமைக்கப்பட்டிருக்கும் பொதுக்கூட்டணியின் பிரதேச செயலகங்களுக்கு அறிவிப்பதற்கும் அதை உரிய இடத்திற்கு அறிவித்து மோசடிகளைத் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே நடந்த கிழக்கு மாகாணசபை தேர்தலில் பாரிய அளவில் வாக்கு மோசடிகள் நடந்த வாக்கெடுப்பு நிலையங்கள் பற்றிய தகவல்கள் ஏற்கனவே தேர்தல் ஆணையாளரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் தேர்தல் ஆணையாளர் ஏற்கனவே வாக்கு மோசடிகளைத் தடுப்பதற்கான, விசேட ஏற்பாடுகளைச் செய்துள்ளார். இதற்கமைய இவ்வாக்கெடுப்பு நிலையங்களில் ஏதாவது வாக்கு மோசடி நடந்தால் அதனைத் தடுப்பதற்கு விசேட ஏற்பாடுகள் எடுக்க முடியாது போகும்.

இத்தகைய சந்தர்ப்பத்தில் அது தொடர்பாக தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்து அந்த வாக்கெடுப்பை ரத்துசெய்து, மீண்டும் தேர்தல் நடத்துவதற்கும் முடிவு எடுத்துள்ளனர்.

. ஆகவே இந்த சூழ்நிலையில் தமிழ் மக்கள் எந்த அச்சமும் பீதியுமின்றி வாக்கெடுப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்குமாறு வேண்டப்படுகின்றார்கள்" எனத் தெரிவித்தார்.


தெல்லிப்பளையில் நேற்று 20 பேர் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு



No Image

தெல்லிப்பளைப் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் இருபது பேர் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கடந்த 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் இவர்கள் படையினரால் பிடிக்கப்பட்டு, தெல்லிப்பளை புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர். இவர்களே நேற்று பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இவர்களில் 12 ஆண்களும் 08 பெண்களும் அடங்குவர். பெண்கள் அனைவரும் ஏற்கனவே திருமணமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ரத்துருசிங்கா, 53ஆவது படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் என்.சி.ஆர்.சில்வா, கேர்ணல் கலமல்பே உட்பட மற்றும் படை அதிகாரிகளும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்


மலையகத்தில் போலி வாக்குச்சீட்டுக்கள்; அன்னம் சின்னம் குறித்து மக்கள் தெளிவு : உதயகுமார்
No Image




"மலையகத் தோட்டப்பகுதிகளில் பல்வேறு போலியான வாக்குச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. எனினும் நாளைய ஜனாதிபதி தேர்தலில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தாம் ஏற்கனவே தெரிவு செய்துள்ள வேட்பாளரின் சின்னங்களுக்கு உரியவகையில் வாக்களித்து ஏமாற்றுப் பேர்வழிகளுக்குத் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்."

தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான உதயகுமார் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

"நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகா வெற்றி பெறுவார் என்பது உறுதி. பெரும்பான்மை மக்களுடன் இணைந்து ஒட்டு மொத்த தமிழ் மக்களும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிப்பதென ஏற்கனவே தீர்மானித்து விட்டனர்.

இவ்வாறானதொரு நிலையில் தோல்வியைச் சந்திக்க முடியாத அதிகாரத் தரப்பினர் வாக்காளர்களைக் குழப்புகின்ற கைங்கரியங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் ஜெனரல் சரத்பொன்சேகாவை அமோகமாக வெற்றிப்பெறச் செய்வதற்கான பிரசாரங்களை தமிழ் மக்கள் மத்தியில் மேற்கொண்டுள்ளோம். இதனைக்கண்டு அச்சமடைந்துள்ள மலையகத்தின் தொழிற்சங்கமொன்று போலியான வாக்குச் சீட்டுக்களை அச்சிட்டுள்ளது.

அதில் ஜெனரல் சரத்பொன்சேகாவின் பெயருக்கு முன்னால் யானைச் சின்னத்தினையும் கழுகுச் சின்னத்தையும் அச்சிட்டுள்ளதோடு வெற்றிலை சின்னத்திற்கெதிராக புள்ளடியிட்டு விநியோகித்துள்ளது.

தோட்டப்பகுதி மக்கள் வாக்களிக்கத் தெரியாதவர்கள் என்ற நோக்குடனேயே இவ்வாறு இந்தத் தொழிற்சங்கம் ஈடுபட்டுள்ளது. ஆனால் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட மலையகத்தமிழ் மக்கள் தாம் யாருக்கு எந்தச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் தெளிவாகவுள்ளனர்.

ஆகவே இம்முறை வாக்குச்சீட்டில் யானைச்சின்னம் இல்லை என்பதும் நாம் ஆதரிக்கின்ற ஜெனரல் சரத் பொன்சேகாவின் சின்னம் அன்னம் என்பதையும் புரிந்து மலையகத் தமிழ் மக்கள் செயற்படுவார்கள் என்று திடமாக நம்புகின்றேன்" என்றார்.


விடுதலைப்புலிகளை ஒழித்தது போன்று ஊழல் மோசடிகளையும் ஒழிப்பேன் :-ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

No Image


இலங்கை இன்று வறிய நாடல்ல. அது மத்திய தர வருமானம் உள்ள நாடாகுமென உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இது ஆச்சரியமிக்க வெற்றியாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். விடுதலைப்புலிப் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்தது போன்று, 27ஆம் திகதிக்குப் பின்னர் ஊழல் மோசடிகளையும் ஒழிப்பேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை பிலியந்தலை சோமவீர சந்திரசிறி மைதானத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில், இதுவரையில் உலக நாடுகளின் வறிய நாடுகள் பட்டியலில் இருந்த நாங்கள் இன்று உலகில் மத்தியதர வருமானம் பெறும் பட்டியலில் இடம்பிடித்துள்ளோம்.

இதனை சர்வதேச நாணயநிதியமும் ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே, உண்மையான மாற்றம் எமது மேடையிலேயே இருக்கிறது. எனவே, இதனை அனுபவிக்க ஆயத்தமாவோம்.

ஊடகச் சுதந்திரம் மனித உரிமைகள், நாட்டில் சுதந்திரம் தொடர்பாகக் குரல்கொடுப்பவர்களென தம்மை அடையாளப்படுத்திக் கொள்வோர் இன்று ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கின்றனர். இவ்வாறு இன்று பலர் தோன்றியுள்ளனர். இவர்கள் அனைவரது கைகளிலும் இரத்தம் தோய்ந்துள்ளது. இரத்த வாடை வீசுகின்றது. எனவே, அச்சுறுத்துவதென்பது இவர்களுக்கு பெரியதொரு விடயமல்ல. மனித உரிமைகளை, ஊடகச் சுதந்திரத்தைப் பாதுகாக்க இந்த மஹிந்த ராஜபக்ஷ அர்ப்பணிப்பு செய்வான்.

இந்த நாட்டை அபிவிருத்தி செய்து, உலகிலேயே உத்தமமான நாடு என்ற பெயரை பெற்றுக் கொடுப்பதற்கு எம்மோடு கைகோர்த்துக் கொள்ளுங்கள். குரோதம் கொண்ட அரசியல் பரப்புவதைக் கைவிட்டு, அன்பைப் பரப்பும் அரசியல் கலாசாரத்தை உருவாக்குவோம். சமாதானமான தேர்தலுக்குப் பின்பு நாட்டில் இராணுவ ஆட்சிக்கு வழிவகுக்காது ஜனநாயக ஆட்சிக்கு வழிவகுப்போம். இதற்காக ஒன்றிணைவோம். ஐ.தே.கட்சியில் எஞ்சியுள்ளோரையும் எம்மோடு இணையுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.

நாட்டில் சிறந்த சுகாதார சேவை, கல்வி முறைமையை உருவாக்குவதற்கு நீங்கள் அனைவரும் தயாராக வேண்டும். சிங்கப்பூரைப் போன்று முன்னேறிச் செல்ல வேண்டும். அதற்காகப் பாடுபடுவோம். ஒழிக்கப்பட்ட பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை. எம்மிடம் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டம் ஒன்றுள்ளது.

இதற்காக 27ஆம் திகதியிலிருந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். இச்செய்தியை மக்களிடம் கொண்டு செல்லுங்கள். 27ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டில் விருப்புவாக்கு முறைமை இருக்காது, விருப்பு வாக்குகளுக்காக சண்டையிட்டுக் கொள்ளும் நிலைமை உருவாகாது. விருப்புவாக்கு முறைமையை இரத்துச் செய்வேன் என்றார்

இறுதி முடிவுகளை அறிவிக்காது இராணுவரீதியில் நிர்வாக கட்டமைப்பை ஏற்படுத்த அரசு திட்டம் தலைநகருக்குள் கவசவாகனம் எதற்கு: ரணில்


No Image


நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் இறுதி முடிவுகளை அறிவிக்காது இருப்பதற்கும் அதேவேளை, எதிர்வரும் 27 ஆம் திகதியின் பின்னர் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதற்கு திராணி இல்லாது தொடர்ந்தும் அதிகாரத்தை நீடித்துக் கொள்ளும் பொருட்டும் இராணுவ ரீதியிலான நிர்வாக கட்டமைப்பொன்றை ஏற்படுத்துவதற்கான திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது என்று ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.

பயங்கரவாதம் அற்றுப்போயுள்ள சூழலில் யுத்த நடவடிக்கைகளுக்காக பாவிக்கப்படுகின்ற 15 கனரக கவச வாகனங்களை கொழும்பின் முக்கிய பகுதியான முகத்துவாரத்தில் அமைந்துள்ள இராணுவ முகாமில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டியதன் அவசியம் என்ன? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். வடக்கில் கடமையில் இருந்த இராணுவ அதிகாரிகள் மூவரை அங்கிருந்து இடம் மாற்றி கொழும்புக்கு அழைத்து வந்து பங்களாதேஷக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பங்குகொண்ட விசேட செய்தியாளர் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜெனரல் பொன்சேகாவின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த செய்தியாளர் மாநாட்டில் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா, ஜே.வி.பி.யின் பாராளுமன்ற குழுத் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளர் மங்கள சமரவீ ர ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தொடர்ந்தும் கூறுகையில், நாளைய தினம் நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை எதிர்கொள்ள முடியாத அரசாங்கம் தற்போது அசாதாரண சூழல்களை உருவாக்கி வருகின்றது. தேர்தல் ஒன்றில் மக்கள் எவ்வாறான தீர்மானத்தை அளிக்கின்றார்களோ அதனை ஏற்றுக்கொள்வதுதான் ஜனநாயகமாகும்.

அதனை விடுத்து நாளை தேர்தலின் முடிவுகள் தமக்கு சாதகமற்றதாக அமையப் போவதை உணர்ந்துள்ள அரசாங்கம் மக்களின் கருத்தை ஏற்றுக்கொள்ளாதிருப்பதற்கும் அதேநேரம் தமது அதிகாரத்தை தொடர்ந்தும் நீடித்துக் கொள்வதற்குமான மோசமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது தொடர்பில் எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

அரசியல் அமைப்பின் 31ஆம் பிரிவின் பிரகாரம் மக்களின் தீர்ப்புக்கு அமைய வெற்றியோ தோல்வியோ எதனையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதே முறையாகும். இது இவ்வாறிருக்க யாழ்ப்பாணம், பூநகரி, வடமராட்சி மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவ உயரதிகாரிகள் திடீரென இடம் மாற்றப்பட்டு அவர்களை தலைநகருக்கு அழைத்து வந்திருந்தனர். அதுமட்டுமல்லாது டபிள்யு.

இசட் 551 ரக 15 கவச வாகனங்கள் முகத்துவாரம் இராணுவ முகாமில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பயங்கரமான அழிவுகளை ஏற்படுத்தும் இந்த வாகனங்கள் யுத்த காலத்தின்போதே பாவிக்கப்படுபவை. யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் அதுவும் தலைநகருக்குள் இவ்வாறான வாகனங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? என கேட்க விரும்புகிறேன்.

தேர்தல் காலத்தில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுவது இயல்பானதாகும். எனினும், பாரிய வன்முறைச் சம்பவங்கள் எதுவும் தலைநகருக்குள் இடம்பெறுவதில்லை. வெளிப் பிரதேசங்களில் சில சம்பவங்கள் இடம்பெறலாம்.

இருப்பினும் நாளைய தினம் நடைபெறவிருக்கின்ற தேர்தலின் போது எந்த விதமான வன்முறைகளிலும் எவரும் ஈடுபடக்கூடாது என நாம் தெளிவாக பொது மக்களுக்கு அறிவித்திருக்கின்றோம். இந்நிலையில், வன்முறைகள் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. அவ்வாறு வன்முறைகள் இடம்பெறுமானால் அது அரசாங்கத்தையே சாரும்.

இதேவேளை, நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவுகள் அறிவிக்க வேண்டாம் என தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனம் உள்ளிட்ட அரச ஊடகங்களில் அத்தியாவசிய சேவையாளர்களை தவிர ஏனையோருக்கு விடுமுறை வழங்குமாறு பணிக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயக விரோத செயற்பாடாகும்.

தேர்தல் முடிவுகள் தமக்கு நிச்சயமாக தோல்வியிலேயே அமையும் என்பதை தெளிவாக உணர்ந்துள்ள அரசாங்கம் மக்களின் ஜனநாயகத் தீர்ப்பின்படி முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது இதன் பின்னணியில் இருந்து செயற்பட்டு வருகின்றது. ஆனால், எம்மைப் பொறுத்தவரையில் நாம் தேர்தலின் எந்த முடிவுகளையும் எதிர்கொள்வதற்கும் அதனை ஏற்றுக்கொள்வதற்கும் தயாராகவே இருக்கின்றோம்.

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் ஜனநாயக விரோத செயற்பாடுகள் தொடர்பிலான அனைத்து தகவல்களும் ஜனநாயகத்தை ஆதரிக்கின்ற பொலிஸார், இராணுவ அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் ஊடாகவே எமக்கு கிடைக்கின்றன.

எனவே, அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கும் மக்களின் தீர்ப்புகளுக்கும் மதிப்பளிக்காதவர்கள் தொடர்பிலும் அதேவேளை, நடைபெறவிருக்கின்ற தேர்தலையும் அதன் பின்னரான நடவடிக்கைகளையும் குழப்பியடித்து வன்முறைகளில் ஈடுபடுவோர் தொடர்பிலும் உரிய கவனம் செலுத்தி அதற்கு இடமளிக்காதவாறு பொலிஸார், முப்படையினர், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டும் என சகலரிடமும் கோரிக்கை விடுக்கிறோம். அத்துடன், வன்முறைக்கு
மேலும் இங்கே தொடர்க...

விடுதலைப்புலிகள் இருவருக்கு அமெரிக்காவில் சிறைத் தண்டனை




அமெரிக்காவில் ஆயுதங்கள் வாங்க முயன்றபோது கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இருவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. சதஜன் சரசந்திரன் என்பவருக்கு 26 ஆண்டுகளும், நடராசா யோகராசா என்பவருக்கு 14 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து வாஷிங்டன் மாவட்ட நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரேமண்ட் ஜே. டியரி உத்தரவு பிறப்பித்தார். இவர்கள் இருவரும் ஆகஸ்ட் 19, 2006ல் எஃப்.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் தொகைக்கு ஏவுகணைகள் மற்றும் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளை புலிகள் இயக்கத்துக்காக வாங்க முயன்றபோது கைது செய்யப்பட்டதாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...


புத்தளம் மன்னார்வீதி 108 ஆண்டுகளுக்குப் பிறகு திறப்பு-


கடந்த 108 வருடங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த புத்தளம் மன்னார்வீதி இன்று மீண்டும் பயணிகளின் போக்குவரத்துக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வீதியை மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் இளைஞர்களுக்கான நாளைய அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ச ஆகியோர் திறந்து வைத்துள்ளனர். குறித்த வீதி 105கிலோமீற்றர் வரையில் புனரமைக்கப்பட்டுள்ளது. இதனால் புத்தளத்திலிருந்து மன்னாருக்கும், மன்னாரிலிருந்து புத்தளத்திற்குமான போக்குவரத்துக்களில் நேர சிக்கனம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரணைமடு குடிநிர் விநியோகத் திட்டம் ஆரம்பமாகிறது-
http://www.tamilnation.org/images/defacto/suresh/28936151.IMG_4650copy.jpg
கிளிநொச்சி இரணைமடு குடிநீர் விநியோகத் திட்டத்தினை இன்னும் இரு மாதங்களில் ஆரம்பிக்க எண்ணியுள்ளதாகவும், இதற்குத் தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நீர்வழங்கல் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இரணைமடு குடிநீர் விநியோகத் திட்டத்திற்கு 7100மில்லியன் ரூபாய் செலவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. முழு யாழ். குடாநாட்டிற்கும் பயனளிக்கும் வகையில் இரணைமடு குடிநீர் திட்டம் அமையவுள்ளதுடன், இதற்கான நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியினதும், அரசாங்கத்தினதும் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் இரணைமடு குடிநீர் திட்டம் யாழ். குடாநாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் குடிநீர்ப் பிரச்சினைக்கு சிறந்த தீர்வாக அமையுமெனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

தற்காலிக விசாவில் தங்கியிருப்போரைக் கைது செய்வதில் சிக்கல்-
http://www.goegypt.org/images/10193858.jpg

சுற்றுலாத்துறைக்கு முதலிடம் வழங்கும் நாடாக இலங்கை அறிவிக்கப்பட்டுள்ளதால் தற்காலிக விசாவின் மூலம் இங்கு தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகளைக் கைதுசெய்ய முடியாதுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தகையவர்களை சட்டத்தின் பிரகாரம் கைதுசெய்வதால் இலங்கை தொடர்பாக வெளிநாடுகளில் தவறான கருத்துக்கள் நிலவக் கூடுமென குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் பி.பீ.அபேகோன் தெரிவித்துள்ளார். இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் பொருட்டு இங்கு வருகைதரும் 80நாடுகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு விமானநிலையத்தில் வைத்து 30நாட்கள் சுற்றுலா விசா வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். திருமலை, கல்முனை, மட்டக்களப்பு, அம்பாந்தோட்டை பிரசேதங்களில் சுற்றுலா விசாவில் வந்தவர்கள் தொழில்புரிவதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் உரிய விசாரணை நடத்தி விசா காலாவதியான வெளிநாட்டு சுற்றுப் பயணிகளை இலங்கையிலிருந்து அனுப்பிவைத்துள்ளதாகவும், அவர்கள் மீண்டும் இலங்கைக்கு வரமுடியாதவாறு தடைப்பட்டியலில் இணைத்துக் கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் வசிப்போர் வாக்களிக்க கடவுச்சீட்டும கட்டாயம்-





வெளிநாடுகளில் வசிக்கும் நிலையில் நாடு திரும்பி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவுள்ளவர்கள் தேசிய அடையாள அட்டை தவிர கடவுச்சீட்டையும் கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் மோசடிகளைத் தவிர்க்கவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. தேர்தல்கள் செயலக தகவல்களின்படி தேர்தல் வாக்குப் பட்டியலில் வெளிநாடுகளில் வசிக்கின்றவர்களை அடையாளப்படுத்துவதற்கான விசேட குறியொன்று பொறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக குறித்த வாக்காளர் வெளிநாட்டில் வசிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவே கடவுச்சீட்டை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

76முன்னாள் புலி உறுப்பினர்கள் பெற்றோரிடம் கையளிப்பு-




புனர்வாழ்வு அளிக்கப்பட்ட புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 76பேர் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் தெல்லிப்பளை புனர்வாழ்வு முகாமிலுள்ள 20பேரும், பொலநறுவை வெலிகந்தை புனர்வாழ்வு முகாமிலுள்ள 56பேரும் இன்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. இதற்கான நிகழ்வு யாழ். தெல்லிப்பளை புனர்வாழ்வு முகாமிலும், வெலிகந்தை புனர்வாழ்வு முகாமிலும் இன்றுபிற்பகல் 3மணியளவில் இடம்பெற்றதாகவும், இவ்வாறு ஒப்படைக்கப்பட்டவர்களில் 12பெண்கள் அடங்குவதாகவும் இராணுவத் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.


3492 முன்னாள் புலி உறுப்பினர்கள் வாக்களிக்கத் தகுதி-

News Photo


நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் புனர்வாழ்வு முகாம்களிலுள்ள 3ஆயிரத்து 492 புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இவர்கள் வாக்களிக்கவென 13விசேட தேர்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தயானந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வவுனியா முகாம்களிலுள்ள 20ஆயிரத்து 184பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இவர்கள் வாக்களிக்கவென 16வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...