11 ஏப்ரல், 2010

தோல்வியடைந்தவர்களுக்கு தேசிய பட்டியலில் இடமில்லை

டலஸ் அலஹப்பெரும



தேர்தலில் போட்டியிட்டுத் தோல்விய டைந்த முன்னாள் அமைச்சர்களோ எம்.பி.களோ எக்காரணம் கொண்டும் தேசியப் பட்டியல் மூலம் நியமிக்கப்பட மாட்டார்கள் என முன்னாள் அமைச்சர் டலஸ் அலஹப்பெரும நேற்றுத் தெரிவித்தார்.

தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் இது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெளிவாக அறிவித்துள்ளார். தேசியப் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டவர்களே எம்.பிக்களாக நியமிக்கப்படுவர். ஐ. ம. சு. முன்னணிக்கு எத்தனை தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் கிடைத்துள்ளனர் என்பது 21ம் திகதி தெரியவரும்.

அதன் பின்னர் ஐ. ம. சு. முன்னணி சார்பாக நியமிக்கப்படுபவர்களின் விபரம் ஆணையாளருக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ. ம. சு. முன்னணி சார்பில் 46 புதுமுகங்கள் தெரிவு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக இம்முறை 46 புது முகங்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட் டுள்ளனர்.

இவர்களில் பல்வேறு துரை சார்ந்தவர்கள் அடங்குவதாக முன்னாள் அமைச்சர் டலஸ் அலஹப் பெரும நேற்றுத் தெரிவித்தார்.

ஐ.ம.சு. முன்னணி ஊடகவியலாளர் மாநாடு நேற்று (11) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. அவர் மேலும் கூறியதாவது,

ஐ. ம. சு. முன்னணி சார்பாகவே இம்முறை கூடுதலான புதுமுகங்கள் தெரிவாகியுள்ளனர். இவர்களில் மிகவும் வயது குறைந்த உறுப்பினர்களும் சிரேஷ்ட உறுப்பினர்களும் எமது கட்சியையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். நாமல் ராஜபக்ஷ மிகக் குறைந்த வயதில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

இம்முறை பாராளுமன்றம் இளம் சந்ததிகளைக்கொண்ட பாராளுமன்றமாக இருக்கும். மக்கள் இளம் சமூகத்தினரை அதிகமாக பாராளுமன்றத்துக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

நிவாரண கிராமங்களில் சீரான குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை என பொய்யான தகவல்




வவுனியா அரச அதிபர் திருமதி சாள்ஸ்



இடம்பெயர்ந்த மக்கள் தங்கியு ள்ள செட்டிகுளம் நிவாரண கிராமங்களில் குடிநீர் விநியோகம் சரியான முறையில் நடைபெறுகின்றது.

அதில் எந்தவித குறைபாடுகளும் இல்லை என வவுனியா மாவட்ட அரச அதிபர் திருமதி பி. எம். எஸ். சாள்ஸ் தெரிவித்தார். தனது அதிகாரிகளை அனுப்பி நிவாரண கிராமங்களுடைய தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக ஆராய்ந்தபோது குடிநீருக்குத் தட்டுப்பாடு இல்லை என அறிக்கை வந்துள்ளது என கூறினார்.

பொதுத் தேர்தலின் பின்னர் இங்கு குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை என வெளியான தகவல்கள் முற்றுமுழுதாக பொய்யானது என குறிப்பிட்ட அரச அதிபர், செட்டிகுளம் நிவாரண கிராம ங்களில் இன்னமும் சுமார் 70 ஆயிரம் மக்கள் தங்கியுள்ளனர்.

அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப் பட்டுள்ளன. அடுத்த சில வாரங்களிலும் மேலும் பெரும்பாலான மக்கள் தங்களுடைய பழைய இடங்களுக்கு திரும்புவார்கள் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய கடற்படை கப்பல் திருமலை துறைமுகத்தில்





இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ‘மாகர்’ என்ற கப்பல் திருகோணமலை துறைமுகத்தை நேற்று முன்தினம் வந்தடைந்துள்ளது.

இரு நாடுகளுக்கும், இரு கடற் படைகளுக்கும் இடையிலான நட்புறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்குடனேயே இந்தக் கப்பல் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு இங்கு வந்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் அதுல செனரத் தெரிவித்தார்.

மாகர் கப்பலின் கெப்டனான கொமாண்டர் சிமோன் மத்தாயிஸ் தலைமையில் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த இந்தக் கப்பலை, இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர்.

கடற்படையின் கிழக்குப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த கொழம்பகே இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

மாகர் என்ற இந்தக் கப்பல் யுத்தத் தாங்கியும் ஹெலிகொப்டர்களும் நிறுத்தக் கூடிய வசதிகளைக் கொண்டது. 125 மீற்றர் நீலமான இந்தக் கப்பலில் 5 ஆயிரத்து 700 தொன் பொருட்களை ஏற்றலாம். 20 அதிகாரிகளும், 235 பணியாளர்களும் இந்தக் கப்பலில் சேவையாற்றி வருகின்றனர்.

இந்தக் கப்பல் இங்கு சில நாட்களுக்கு நங்கூறமிட்டிருக்கும். இக்கப்பலில் இலங்கை கடற்படை அதிகாரிகள் நூறு பேர் பயிற்சி பெறவுள்ளனர்.

கப்பல் ஓட்டுதல், தொலைத் தொடர்பு, கப்பல் ஓட்டும் முறை, கப்பல் திருத்தும் முறை மற்றும் தீ அணைக்கும் முறை போன்ற பயிற்சிகள் வழங்கப்படவு ள்ளன
மேலும் இங்கே தொடர்க...

பாராளுமன்றம் 22ம் திகதி கூடியதும் சபாநாயகர் தெரிவு




அதனையடுத்து அமைச்சரவை நியமனம்



புதிய அமைச்சரவை எதிர்வரும் 22ஆம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதியினால் நியமிக்கப்படும். அமைச்சர்கள் நியமிக்கப்படாத நிலையில் திட்டமிட்டபடி 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் சபாநாயகர் தெரிவு இடம்பெறும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி செயலாளர் சுசில் பிரேம் ஜெயந்த் தெரிவித்தார்.

தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் மற்றும் கண்டி, திருகோணமலை மாவட்ட உறுப்பினர்கள் அடங்கலாக ஐ. ம. சு. முன்னணிக்கு 143 ஆசனங்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

ஐ. ம. சு. முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (11) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. அவர் மேலும் கூறியதாவது,

நாவலப்பிட்டியிலும் திருகோணமலையிலும் 20ஆம் திகதி மீளத் தேர்தல் நடைபெறுவதால் பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரமடங்கிய வர்த்தமானி அறிவித்தல் தாமதமடைகிறது. தேசியப் பட்டியல் எம். பிக்களின் நியமிப்பும் தாமதமாகியுள்ளது- 21ஆம் திகதி இரு மாவட்ட முழு முடிவுகளும் வெளியிடப்பட்டு வர்த்தமானி அறிவித்தலும் தேர்தல் ஆணையாளரினால் அன்றே வெளியிடப்படும் என எதிர்பார்க்கிறோம்.

அமைச்சரவை நியமிப்பது குறித்து ஜனாதிபதி ஆராய்ந்து வருகிறார். அமைச்சர்கள் நியமிக்கப்படாத நிலையிலே புதிய பாராளுமன்றம் கூடும்.

தேசியப் பட்டியலின் மூலம் எமக்கு 17 ஆசனங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். சபாநாயகராக யாரை நியமிப்பது என ஆளும் கட்சி எம்.பி.க்கள் கூடி முடிவு செய்வர் என்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி செயலாளர் மைத்திரிபால சிரிசேன கூறியதாவது,

பிரதமராக யாரை நியமிப்பது என்பது குறித்து ஜனாதிபதி முடிவு செய்வார். கட்சியில் இதற்குத் தகுதியானவர்கள் பலர் உள்ளனர்.

அவர்களில் மிகவும் தகுதியானவரை ஜனாதிபதி நியமிப்பார்.

அமைச்சரவையை 35 ஆக மட்டுப்ப டுத்தவே திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டுக்கு சுமையற்றவாறு அமைச்சர் தொகை முடிவு செய்யப்படும். இம்முறை அமைச்சரவையில் புது முகங்களுக்கும் இடமளிக்கப்படும் என்றார்.

டலஸ் அலஹப்பெரும கூறியதாவது:

வரலாற்றில் முதற் தடவையாக ஐ.தே.க. வின் வாக்குப்பலம் 29 வீதமாக குறைந்துள்ளது. 1977 தேர்தலில் சு.க.வுக்கு 8 ஆசனங்கள் மட்டுமே கிடைத்தது. ஆனால் சு.க. 30 வீத வாக்குகளைப் பெற்றது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

மஹிந்த சிந்தனை திட்டத்தை நிறைவேற்ற மக்களிடமிருந்து முழுமையான ஆணை




அரசு அர்ப்பணிப்புடன் செயற்படுமென ஐ. ம. சு. மு. தலைவர்கள் உறுதி


மஹிந்த சிந்தனை தொலைநோக்குத் திட்டத்தை நிறைவேற்றவும் அரசியல், சமூக ரீதியிலான மாற்றங்களை ஏற்படுத்தவும் மக்கள் முழுமையான ஆணையை வழங்கியுள்ளனர். மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு புதிய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் நேற்றுத் தெரிவித்தனர்.

மஹிந்த சிந்தனையை முன்னெடுப்பதற்கு அரசியல் கட்சிகளும் ஏனைய தரப்பினரும் தமது முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரினர்.

பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் இடம்பெற்ற முதலாவது ஊடகவியலாளர் மாநாடு நேற்று (11) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. அங்கு உரையாற்றிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிறிசேன கூறியதாவது, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை வெற்றிபெற வைத்த மக்கள் இம்முறை தேர்தலிலும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக வாக்களித்து 2/3 பெரும்பான்மை பலத்தை தந்துள்ளனர். மஹிந்த சிந்தனை தொலைநோக்குத் திட்டத்தை முழுமையாக செயற்படுத்து வதற்காக மக்கள் தமது ஒத்துழைப்பை முழுமையாக வழங்கியுள்ளனர். மக்களின் அபிலாஷைகளை புதிய அரசாங்கம் நிறைவேற்றும். அதற்காக நாம் அர்ப்பணிப் புடன் செயற்படுவோம் என்றார்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஐ. ம. சு. முன்னணியின் செயலாளர் சுசில் பிரேம் ஜயந்த் கூறியதாவது,

ஜனாதிபதி எதிர்பார்க்கும் மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் மேற்கொள்வதற்கு பலம்வாய்ந்த பாராளுமன்றத்தை மக்கள் வழங்கியுள்ளனர். 22 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஐ. ம. சு. முன்னணி சார்பாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எனவே, மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதே எமது அரசாங்கத்தின் ஒரே குறிக்கோளாகும். எமக்குப் பெருவெற்றியை வழங்கிய மக்களுக்கும் தேர்தலை சுதந்திரமாக நடத்துவதற்குப் பங்களித்த அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையாளர், அரசாங்க ஊழியர்கள், பொலிஸார் உட்பட சகல தரப்பினருக்கும் ஐ. ம. சு. முன்னணி சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார். முன்னாள் அமைச்சர் டளஸ் அலஹப்பெரும கூறியதாவது, தேர்தல் சுதந்திரமாக நடைபெற்றது, இதனை ஐ. தே. க. தலைவரும் ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால் வாக்களிப்பு வீதம் குறைந்திருப்பது குறித்து வழமை போல் எதிர்க்கட்சிகள் கருத்துக் கூறத் தொடங்கியுள்ளனர்.

அமைதியான சூழல் காணப்படும் நிலையில் வாக்களிப்பு வீதம் குறைவது வழமையாகும். தமது தோல்வியை மறைப்பதற்காக எதிர்க்கட்சிகள் கூறும் காரணங்கள் மூலம் அவர்களது வங்குரோத்து நிலை தெளிவாகிறது.

2 மாதங்களுக்கு முன் 57 சதவீதம் வாக்ககளை பெற்ற நாம் தற்பொழுது 60 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளோம். எதிர்க்கட்சி வாக்குகள் 41 சதவீதத்தில் இருந்து 37 ஆக குறைந்துள்ளன.

பொன்சேகாவின் உதவியுடன் ஜே. வி. பி. ஐந்து ஆசனங்களை மட்டுமே பெற்றுள்ளது.

ஆறாவதாகவும் இறுதியாகவும் நடைபெற்ற விகிதாசார முறையிலான பாராளுமன்றத் தேர்தலில் வரலாற்று முக்கியமான மிகப் பெரும் வெற்றியை ஐ. ம. சு. முன்னணி ஈட்டியிருக்கிறது. நாடு சுபீட்சமாக இருப்பதனாலோ பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருப்பதனாலோ மக்கள் எமக்கு வாக்களிக்கவில்லை. இந்த நாட்டை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையின் காரணமாகவே பெருமளவு மக்கள் எமக்கு வாக்களித்தனர்.

மக்களின் அபிலாஷைகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் என உறுதியளிக்கிறோம் என்றார். மக்கள் ஐக்கிய முன்னணித் தலைவர் தினேஷ் குணவர்தன கூறியதாவது,

அரசியலில் புதிய திருப்பு முனையை ஏற்படுத்தும் வகையில் இந்த தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. தேர்தல் சமயத்தில் நாட்டுக்கு எதிராக உள்நாட்டு வெளிநாட்டு மட்டத்தில் சதிகள் முன்னெடுக்கப்பட்டன.

சில கட்சிகள் அவற்றின் கையாட்களாக செயற்பட்டன. இனியாவது அவர்கள் தாய் நாட்டிற்கு விசுவாசமாக செயற்படுமாறு கோருகிறோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் சம்பிக ரணவக்க கூறியதாவது,

1977 ஆம் ஆண்டின் பின்னர் முதற் தடவையாக நாடு பூராவும் அச்சமின்றி சுதந்திரமாகத் தேர்தல் நடைபெற்றது. பல்வேறு இனங்களையும் கருத்துக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இம்முறை பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மக்கள் தந்துள்ள இந்த ஆணையை கருத்திற் கொண்டு எதிர்க்கட்சியினர் தமது கொள்கைகளையும் தலைவர்களையும் மாற்ற வேண்டியிருக்கும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். நாச்சிமார் கோவிலடியில் கடைகளுக்குத் தீ வைப்பு







யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த தென்னிலங்கை வியாபாரிகளின் விற்பனை நிலையங்கள் இனந்தெரியாத நபர்களால் நேற்று மாலை 7.00 மணியளவில் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன.

நாச்சிமார் கோவிலின் தேர் முட்டி அருகில் கடந்த சில வாரங்களாக தென்னிலங்கை வியாபாரிகளுக்கென விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இவற்றையே மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் தீப்பந்தங்களைக் கொளுத்தி மேற்படி கடைகளுக்கு மேல் எறிந்துவிட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடைகள் முற்றாக எரிவதற்குள், வியாபாரிகள் தீயை அணைத்து விட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்
மேலும் இங்கே தொடர்க...

திருமலை - கண்டி மாவட்ட மீள் வாக்கெடுப்பு 20இல்




திருகோணமலை மற்றும் கண்டி வாக்கெடுப்பு நிலையங்களில் ரத்து செய்யப்பட்ட வாக்கெடுப்பு, எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறைகள் மற்றும் சட்ட மீறல்கள் இடம்பெற்றதாகக் கூறப்பட்டு திருகோணமலை மாவட்டத்தின் கும்புறுபிட்டிய மற்றும், கண்டி மாவட்ட நாவலப்பிட்டியின் 34 வாக்கெடுப்பு நிலையங்களின் வாக்குகள் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில் அந்த வாக்கெடுப்ப நிலையங்களில் மீண்டும் வாக்குப் பதிவுகள் மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி எதிர்வரும் 20ஆம் திகதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் எனத் தேர்தல்கள் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் நாவலபிட்டி மற்றும் கும்புறுபிட்டிய தேர்தல் வாக்கு நிலையங்களின் முடிவுகள் அறிவிக்கப்படாமல், புதிய நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியாது. எனவே எதிர்வரும் 20ஆம் திகதி மீண்டும் தேர்தல் நடத்தி, முழுமையான பெறுபேறுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் புதிய நாடாளுமன்றம் கூட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
மேலும் இங்கே தொடர்க...



உதய நாணயக்கார திடீர் சுகயீனம் : யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதி
முன்னாள் இராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார திடீர் சுகயீனம் காரணமாக நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த இவர், பலாலி இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

நேற்று இரவு இவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது
மேலும் இங்கே தொடர்க...

அடுத்த பிரதமர் யார்? : ஆகக்கூடிய விருப்பு வாக்குகள் பசிலுக்கு



புதிய பிரதமராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர்களான தி.மு. ஜயரத்ன, மைத்திரிபால சிறிசேன மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோரில் ஒருவரையே பிரதமராக நியமிக்க வேண்டுமென்று கட்சியின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன.

கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற பசில் ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க வேண்டுமென கட்சியின் முக்கியஸ்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவ்வாறு வழங்கப்படாவிடின் வெளிவிவகார அமைச்சுப் போன்ற முக்கிய அமைச்சுப் பொறுப்பு ஒன்றினை அவருக்கு வழங்க வேண்டுமென்றும் அவர்கள் கேட்டுக் கொண்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கம்பஹா மாவட்டத்தில் 4,25,861 அதிகூடிய விருப்பு வாக்குகளை பசில் ராஜபக்ஷ பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்களில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவர் என்ற பெருமையும் இவரையே சாரும்.

1994 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இதே மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க 4,64,588 வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் மீண்டும் இவ்வாரம் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, புதிய அமைச்சரவை நியமிப்பது தொடர்பில் நேற்று முன்தினம் கட்சி முக்கியஸ்தர்களுடன் ஜனாதிபதி மந்திராலோசனை நடத்தியுள்ளார்.

இந்த வாரம் புத்தாண்டு விடுமுறைக்குப் பின்னர் மீண்டும் கூடி இது குறித்து ஆலோசித்து, அமைச்சரவைப் பெயர்பட்டியலைத் தயாரிக்கவுள்ளதாகக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் வீரகேசரி வாரவெளியீட்டுக்குத் தெரிவித்தார்.

அமைச்சுகளை நிரல்படுத்தி, அவற்றினை அடுத்த பிரதமர் இணைத்து குறைந்த எண்ணிக்கையிலானோரை அமைச்சரவைக்கு நியமிப்பது குறித்தும் இந்த வாரம் ஆராயப்படவுள்ளது.

உதாரணமாக, தபால்துறைக்கு ஓர் அமைச்சு, தொலைத்தொடர்புக்கென இன்னொரு அமைச்சு, ஊடகத்துறைக்கென பிறிதொரு அமைச்சு என்றில்லாமல் இவை அனைத்தினையும் ஒன்றுபடுத்தி தபால், தொலைத்தொடர்புகள் தகவல், ஊடகத்துறை அமைச்சு என்ற ஒன்றை உருவாக்கும் சாத்தியமே பெரும்பாலும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகம் தொண்டமான் றிசாட் பதியுதீன், ஏ.எல்.எம். அதாவுல்லா, ஏ.எச்.எம். பௌஸி, விநாயகமூர்த்தி முரளிதரன் (தேசியப்பட்டியல்) ஆகியோருக்கு அமைச்சரவையில் மீண்டும் இடமளிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் தேசியப் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஷான் சண்முகநாதன் ஆகியோருக்கு பிரதியமைச்சர் பதவிகள் வழங்கப்படலாமெனவும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

தாக்குதலுக்கு இலக்கான பாலித ரங்கே பண்டார தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்

தாக்குதலுக்கு இலக்கான புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் இதனைத் தெரிவித்தன.

பாலித ரங்கே பண்டார சிலாபம் பகுதியில் கூட்டம் ஒன்றில் நேற்று கலந்து கொண்ட போது, இனந்தெரியாதவர்களால் தாக்குதலுக்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழர் பிரச்சினை தொடர்பாக அரசாங்கத்துடன் பேச தயார்-சுரேஷ் பிரேமசந்திரன்



தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தயாராகவிருக்கிறோம். அதற்கான ஆணையை எமக்குத் தேர்தல் மூலம் மக்கள் தந்துள்ளார்கள். ஆகவே, அரசாங்கம் இதனைப் புரிந்து கொண்டு செயற்படவேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசு தீர்வை வழங்க முடியாதென மீண்டும் மீண்டும் கூறி வருமானால் நாம் எமது உரிமைகளைப் பெறுவதற்கு இங்கும் சர்வதேச ரீதியிலும் ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தள்ளப்படுவோம். அவ்வாறு ஒன்று இடம்பெற்றால் அது இலங்கை அரசாங்கத்துக்கு ஆரோக்கியமானதாக இருக்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் தொடர்பில் வீரகேசரி வாரவெளியீட்டுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், நாம் தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை ஏலவே வெளியிட்டுள்ளோம். அதற்கு மக்கள் ஆணையை வழங்கியுள்ளார்கள். இதன் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் எம்முடன் பேச முன்வர வேண்டும்.

நடைபெற்று முடிந்த தேர்தலை ஜனநாயக ரீதியான தேர்தலாக நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். யாழ்ப்பாணத்தில் கடந்த 7 ஆம் திகதிவரை ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒலிபெருக்கிகளைப் பாவித்து தொடர்ந்தும் பிரசாரங்களை மேற்கொண்டிருந்தனர். இது தேர்தல் சட்டவிதிகளுக்குப் புறம்பானது என்று கூட தெரிந்திருந்தும் அங்கிருந்த இராணுவமோ பொலிஸாரோ அதனைக் கண்டுகொள்ளவில்லை. 5 ஆம் திகதிக்குப் பின்னர் சனசமூக நிலையமொன்றில் தேர்தல் பிரசாரக் கூட்டமும் நடத்தப்பட்டது. இதுபோன்று பல விடயங்களைக் கூற முடியும்.

இதுதவிர, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற மாவட்டங்களில் கூட அந்த மக்களின் வாக்களிக்கும் உரிமை முற்றாக மறுதலிக்கப்பட்டது. அந்த மக்கள் முகாம்களில் இருந்து கிளிநொச்சிக்கு வாக்களிக்கக் கொண்டு செல்லப்பட்டு வாக்களிக்க முடியாத நிலையில் திரும்பவும் முகாம்களுக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு வாக்களிக்கும் சந்தர்ப்பம் மறுக்கப்பட்டது.

முல்லைத்தீவு, ஒட்டுச்சுட்டான் போன்ற குடியேற்றப்பட்ட பிரதேசங்களில் வாக்களிக்கும் மக்களுக்கான இடம் வவுனியாவாக இருந்தது. அவர்கள் ஐம்பது மைல் தூரம் சென்று வாக்களிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மொத்தத்தில் எங்கு போய் வாக்களிப்பது, தங்களது வாக்குச்சாவடிகள் எங்கு இருக்கின்றன, வாக்காளர் அட்டைகள் எங்கு சென்று பெற்றுக் கொள்வது போன்ற பிரச்சினைகளை அந்த மக்கள் முகம் கொண்டனர். இவை காரணமாக அந்த மக்களின் வாக்களிப்பு முழுமையாக இடம்பெறவில்லை. இவற்றினை ஒரு திட்டமிடப்பட்ட விடயமாகவே நாங்கள் கருதுகிறோம். இந்த விடயங்கள் குறித்து நாம் ஏற்கெனவே தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்துள்ளோம். மக்கள் மீள்குடியேற்றப்பட்ட இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைப்பதாக எமக்கு முன்னர் உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது நடைபெறவில்லை. இவற்றினையெல்லாம் பார்க்கும் போது இதனை எவ்வாறு ஜனநாயக ரீதியான தேர்தலாகக் கணிக்க முடியும்? மக்களின் வாக்களிக்கும் உரிமை முற்றாக மறுக்கப்பட்டது. இதனை வன்னி மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகவே நான் கருதுகிறேன்.

மேலும், யாழ்ப்பாணத்தில் கெடுபிடிகள், வன்னியில் கெடுபிடிகள் இவைகளுக்கு மத்தியில் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 14 ஆசனங்களை வென்றுள்ளது. இது ஒரு பெருமைப்படக்கூடிய விடயம். தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் தேசிய சக்தியாக ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதையே இது காட்டுகின்றது. தமிழ் மக்கள் தமது இனப்பிரச்சினையைத் தீர்க்கவும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தெரிவு செய்துள்ளனர் என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது. இது எல்லோராலும் புரிந்துகொள்ளப்பட வேண்டிய ஒரு விடயமாகும். அரசாங்கமும் கூட இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசி தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிகளை அரசு காண வேண்டும். அந்த மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை, இனப்பிரச்சினை போன்ற விடயங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசி தீர்வு காண அரசாங்கம் முன்வர வேண்டும்.

எதிர்காலத்தில் தமிழ் மக்கள் பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்துடன் சேர்ந்து பேச்சு நடத்துவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். அதற்கான ஆணையை மக்கள் தந்துள்ளார்கள். அரசாங்கம் அதற்கு முன்வர வேண்டும். தமிழ் மக்கள் ஒன்றுபட்ட நாட்டுக்குள் தமது பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்றே விரும்புகின்றார்கள். இதனை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். அதேசமயம் தமிழ் மக்கள் கடந்த காலத்தில் தமது உரிமைகளுக்காகப் பல இழப்புகளைச் சந்தித்துள்ளனர். இதனை அரச தரப்பு புரிந்துகொள்ள வேண்டும். இதனடிப்படையில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வுக்கு அவர்கள் வர வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வை வழங்க முடியாதென மீண்டும் மீண்டும் கூறி வருமானால் நாம் எமது உரிமைகளைப் பெறுவதற்கு இங்கும் சர்வதேச ரீதியிலும் ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுக் கும் ஒரு நிலைக்குத் தள்ளப்படுவோம். அவ் வாறு ஒன்று இடம்பெற்றால் அது இலங்கை அரசாங்கத்துக்கு ஆரோக்கியமானதாக இருக் காது என தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பேசாலையில் நேற்று மாலை ஐமசுகூ - ததேகூ மோதல்




மன்னார் பேசாலைப் பகுதியில் நேற்று மாலை 4.30 மணியளவில் இரு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கிடையே கடுமையான மோதல் சம்பவம் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின்போது லக்ஷ்மன் (வயது 24) என்பவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி மன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் பேசாலை கிராம அலுவலகர் ஆளும் கட்சி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ளதாகவும் செய்தியாளர் குறிப்பிடுகிறார்.

தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும் சம்பவ இடத்துக்கு வந்திருந்ததாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ் மக்களின் ஐக்கியம் தலைவர்களின் பாராளுமன்ற ஆசனங்களைப் பாதுகாக்கவா?

இனப் பிரச்சினையின் தீர்வுக்காகத் தமிழரசுக் கட்சி முதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரை நிலையான கொள்கையைப் பின்பற்றவில்லை. நிலையான கொள்கை அவர்களிடம் இருக்கவில்லை.

தேர்தல் முடிந்துவிட்டது. எதிர் பார்த்தது போலவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி ஈட்டியது.

தேர்தல் பிரசாரத்தின் போது எதிரணிக் கட்சிகள் தாராளமாகவே வாக்குறுதிகளை அள்ளி வழங்கின. ஆட்சிக்கு வரப்போவ தில்லை என்பதை முன்கூட்டியே அறிந் ததால் எவ்வித தயக்கமும் இல்லாமல் வாக்குறுதிகளை அள்ளிக் கொட்டினார்கள்.

எதிரணிக் கட்சிகளுள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் பிரசாரம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. இவர்களின் பிரசாரத்தில் புதிதாக எதுவும் இல்லை. வழமை போல, இனப் பிரச்சினைக்குத் தீர்வு, காண்பதற்குத் தமிழ் மக்கள் அனைவரும் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே கூட்டமைப்புப் பிர சாரத்தின் சாராம்சம். எல்லாத் தேர்தல் காலங்களிலும் போல இந்தத் தேர்தல் பிர சாரத்தின் போதும் தமிழ் மக்கள் ஒன்றுமை ப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு முக்கியத்துவம் அளித்தார்கள்.

தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றைப் போலத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பாராளுமன்ற ஆச னங்களைத் தக்கவைப்பதற்காகவே ஒற்று மைக் கோரிக்கையை முன்வைக்கின்றது. ஒரு தீர்வு திட்டத்தை முன்வைத்து அதை வென்றெடுப்பதற்காக ஒற்றுமைப்படும்படி இவர்கள் எந்தக் காலத்திலும் கேட்கவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நான்கு கட்சிகள் சேர்ந்து 2001ம் ஆண்டு ஆரம் பிக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட் டணி, தமிழ்க் காங்கிரஸ் கட்சி, ரெலோ, ஈ. பி. ஆர். எல். எப். (சுரேஷ் அணி) ஆகியவையே அந்த நான்கு கட்சிகளும். நான்கு அம்ச உடன்படிக்கையொன்றில் நான்கு கட்சிகளும் கையொப்பமிட்டுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆரம்பித்தன.

நான்கு கட்சிகளும் வெவ்வெறு நிலைப்பாடுகளுடன் ஒன்றுக்கொன்று எதிராகச் செயற்பட்டவை. இக்கட்சிகள் கூட்டமைப்பாக ஒன்றிணைவதற்கான உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடும் போது அதில் கொள்கை பிரதானமாக இடம்பெறும் என்றே எல்லோரும் நினைப்பார்கள். அதாவது இனப் பிரச்சினையின் தீர்வுக்கான ஒரு நிலைப்பாட்டை உடன்படிக்கையில் உள்ளடக்குவார்கள் என்று மக்கள் எதிர்பார்த்திருப்பார்கள். ஆனால் இவர்களின் உடன்படிக்கையில் இனப் பிரச்சினையின் தீர்வுக்கான கொள்கை எதுவும் இருக்கவில்லை.

பாராளுமன்ற ஆசனம்

கூட்டமைப்பின் நான்கு அம்ச உடன் படிக்கையின் முதலாவது அம்சம் பாராளு மன்ற ஆசனங்களைப் பகிர்ந்து கொள்வது பற்றியது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ் வொரு கட்சியும் எத்தனை வேட்பாளர்களை நிறுத்துவது என்பதே உடன்படிக்கையின் பிரதான அம்சம். உதாரணமாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட் டணியின் 7 வேட்பாளர்களும் அகில இலங் கைத் தமிழ்க் காங்கிரஸின் 3 வேட்பாளர்களும் ரெலோவின் 1 வேட்பாளரும் ஈ. பி. ஆர். எல். எப். சுரேஷ் அணியின் 1 வேட்பாளரும் நிறுத்தப்படுவது. இதுபோல, ஐந்து மாவட்ட ங்களுக்கும் ஒவ்வொரு கட்சியினது எத் தனை வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்பதுதான் உடன்படிக்கையின் முதலாவது அம்சம்.

இரண்டாவது அம்சம் தேசியப் பட்டியல் பிரதிநிதித்துவம் தொடர்பானது. தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ரெலோ, ஈ. பி. ஆர். எல். எப். என்ற முன்னுரிமை அடிப்படையில் தேசியப் பட்டியல் பிரதிநிதித்துவம் வழங்குவதென்பது உடன்படிக்கையின் இரண்டாவது அம்சம்.

இக்கட்சிகள் பகிரங்கமாக ஒன்றையொன்று தாக்கவோ விமர்சிக்கவோ கூடாதென்பது மூன்றாவது அம்சம்.

இக்கட்சிகளுக்கிடையே உள்முரண்பாடு இடம்பெறும் பட்சத்தில் மத்தியஸ்தர்கள் மூலம் அதைத் தீர்ப்பது தொடர்பானது நாலாவது அம்சம். சுருக்கமாகக் கூறுவதானால் கொள்கை இல்லாமல், பாராளுமன்ற ஆசனங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இதுதான் தமிழ் மக்களின் சாபக்கேடு.

இனப் பிரச்சினையின் தீர்வுக்காகத் தமிழரசுக் கட்சி முதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரை நிலையான கொள்கையைப் பின்பற்றவில்லை. நிலையான கொள்கை அவர்களிடம் இருக்கவில்லை. ஆரம்பத்தில் சமஷ்டி. பின்னர் வட்டுக்கோட்டையில் தனிநாட்டுத் தீர்மானம். அதன் பின் ஜே. ஆர். ஜயவர்த்தனவின் மாவட்ட சபையை ஏற்றார்கள். அதற்குப் பின் அதிகாரப் பகிர்வு. பின்னர் புலிகளின் தனிநாட்டு நிகழ்ச்சி நிரல். இப்போது கொள்கை இல்லாத கூட்டு.

யதார்த்த பூர்வமான ஒரு கோரிக்கையை நிரந்தரமாக முன்வைத்து ஆக்கபூர்வமான முறையில் செயற்பட்டிருந்தால் இதுவரையில் கணிசமான தீர்வை அடைய முடிந்திருக்கும்.

இப்போதும் ஒன்றும் குடிமுழுகிப் போகவில்லை. நீண்ட கால மற்றும் குறு கியகாலத் திட்டங்களை வகுத்துச் சரியான முறையில் செயற்பட்டால் தீர்வை அணுகிச் செல்ல முடியும்.

இப்பத்தியில் அடிக்கடி கூறுவதைப் போல, முழுமையான தீர்வை ஒரே நேரத்தில் அடைய வேண்டும் எனக் கூறுவது தீர் வுக்குத் தடையான நிலைப்பாடு. தமிழ்த் தலைவர்கள் பிரச்சினையைத் தவறாகக் கையாண்டதன் விளைவாக உருவாகியுள்ள சூழ்நிலை முழுமையான அரசியல் தீர்வை வலியுறுத்துவதற்குச் சாதகமானதாக இல்லை. எனவே, இப்போது எது சாதக மானதோ அதைப் பயன்படுத்த வேண்டும்.

மாகாண சபை

மாகாண சபை இப்போது சாதகமானது. அதை ஏற்றுக் கொள்வதால் தமிழ் மக்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறலாம். அதே நேரம் சில அதிகாரங்கள் புதிதாகக் கிடைக்கின்றன. மாகாண சபையை ஏற்பதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிடிவாதம் பிடிப்பதற்கான காரணம் விளங்கவில்லை. மாகாண சபையை ஏற்றுக் கொண்டு அதைச் சரியாகச் செயற்படுத்தும் சிரமத்துக்குப் பயப்படுகின்றார்களோ தெரியவில்லை.

தமிழ்ப் பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நடக்கின்றன என்று தமிழ்த் தலைவர்கள் அடிக்கடி கூறுவது வழக்கம். முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் தொடங்கி எல்லாத் தேர்தல்களிலும் தமிழ்த் தலைவர்கள் இதைப் பிரதான தேர்தல் கோஷமாக முன்வைத்து வருகின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் இந்தத் தேர்தலிலும் இதைப் பிரதானமாக முன்வைத்துப் பிரசாரம் செய்தார்கள். தமிழ் மக்களின் உணர்வுகளோடு சம்பந்தப்பட்ட பிரச்சினையைத் தேர்தல் கோஷமாக முன்வைத்து வாக்குப் பெறுவதொன்றும் கஷ்டமான காரியமல்ல. எதைப் பாதிப்பு என்று கூறுகின்றோமோ அதைத் தவிர்ப்பதற்கான முயற்சியை மேற்கொள்வதே கஷ்டமானது.

கஷ்டம் இல்லாத காரியத்தைச் செய்வதும் கஷ்டமான காரியத்தைத் தவிர்ப்பதும் தமிழரசுக் கட்சி முதல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வரை தலைவர்களின் பாரம்பரியமாக இருக்கின்றது.

இவர்கள் பிரச்சினைகளை மேடையில் நின்று பேசுவார்கள். பெரிதுபடுத்தியும் பேசுவார்கள். ஆனால் பிரச்சினையின் தீர்வுக்காக எதுவும் செய்வதில்லை.

இவற்றைப் பற்றித் தமிழ் மக்கள் எப்போது சிந்திக்கத் தொடங்குகின்றார்களோ அப்போது தான் அவர்களுடைய விமோசனத்தின் ஆரம்பம்.

தலைவர்கள் பிரச்சினைகள் பற்றிப் பேசும் போது ‘இவற்றின் தீர்வுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்’ என்று மக்கள் அவர்களைக் கேட்க வேண்டும்.

தொப்புள்கொடி உறவு

பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைத்த தோல்வி வரலாற்று முக்கியத்துவம் பெறுகின்றது. உலகில் எந்தவொரு பிரதான அரசியல் கட்சியின் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் அடுத்தடுத்து அடைந்த தோல் விகளின் எண்ணிக்கையை அண்மித்துமிருக்க முடியாது. அந்த வகையில் ரணில் உலக சாதனை படைத்திருக்கிறார்.

வீதிகள் அமைப்பதும் பாலங்கள் கட்டுவதும் ஒரு பிரதேசத்தின் அபிவிருத்திக்கு அத்தியாவசியமானவை. ஆனால் ரணில் விக்கிரமசிங்ஹ பாலம் எதற்காக என்று கேட்கிறார். பாலத்தைக் கட்டினால் தாய்மார் அதிலிருந்து பிள்ளைகளை ஆற்றில் போடுவார்கள் என்று நையாண்டி செய்கிறார். இப்படியான தலைவரின் கீழ் எப்படித்தான் கட்சி உருப்படும்?

இது அவர்களின் பிரச்சினை. நாங்கள் சொல்ல வந்ததைப் பார்ப்போம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் ஜனநாயக தேசிய கூட்டமைப்புடனும் கூட்டாக ஆட்சி அமைக்கப் போவதாக ரணில் தேர்தல் பிரசாரத்தின் போது திரும்பத் திரும்பக் கூறினார். கூட்டு அரசாங்கம் அமைப்பது ஏனோதானோ என்று செய்யும் செயலல்ல. பேச்சுவார்த்தைக்கூடாகப் பொதுவான கொள்கை உடன்பாட்டை ஏற்படுத்திய பின்னரே கூட்டு அரசாங்கம் அமைய வேண்டும்.

ரணில் திடீரென ஒரு மேடையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டரசாங்கம் என்று சொல்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு மெளன அங்கீகாரம் அளிக்கின்றது. தேசிய இனப்பிரச்சினைக்கு ஐக்கிய தேசியக் கட்சியிடமும் தீர்வு இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமும் தீர்வு இல்லை. எனவே, இரண்டு கட்சிகளும் சேர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்திருக்கலாம். ஆனால் இரண்டு கட்சிகளும் சமகால அரசியல் நிலையை மதிப்பீடு செய்ய முடியாதவை என்பதை வெளிக்காட்டி விட்டன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பக்கம் பலமான அலை வீசுகின்றதென்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் கூட்டரசாங்கம் பற்றி ரணில் பேசுகின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சரியாக மதிப்பீடு செய்ய முடியாமல், ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டரசாங்கம் அமைப்பதற்கு மெளனத்தின் மூலம் சம்மதம் தெரிவித்தது.

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலுள்ள ‘தொப்புள் கொடி உறவை’ இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்
மேலும் இங்கே தொடர்க...

அரசியல் தீர்வுக்குப் பொருத்தமான சந்தர்ப்பம்




தேர்தல் முடிவுகள் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையைத் தோற் றுவிப்பனவாக உள்ளன. நாட்டின் சகல பகுதிகளும் திரு ப்திகரமான முறையில் அபிவிருத்தி செய்யப்படும் என்ற நம்பிக்கை ஏற்படுகின்றது. வெளிநாட்டு அழுத்தங்களுக்குப் பணி யாது இலங்கை தலைநிமிர்ந்து நிற்கும் என்ற நம்பிக்கை தோன்று கின்றது.

இதுவரை தீர்வின்றி இழுபடும் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நடைமுறையை ஆரம்பிப்பதற்குச் சாதகமான சூழ் நிலை உருவாகும் என்ற நம்பிக்கை தோன்றுவதற்கும் இடமுண்டு.

இனப் பிரச்சினைக்கான தீர்வு இதுவரை சாத்தியமாகாததற்கு வெவ்வேறு தரப்பினர் வெவ்வேறு காரணங்களைக் கூறுகின்றனர். ஆனால், உண்மையான காரணங்கள் யாவை என்பது பற்றிய தெளிவு ஏற்ப டும் போது தான் தீர்வு முயற்சி பலனளிப்பதாக அமையும்.

தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய தலைவர்கள் சரியான அணுகுமுறையைப் பின்பற்றத் தவறியமை பிரச்சினை தீராதிருப் பதற்கான காரணங்களுள் பிரதானமானது எனக் கூறலாம்.

முழுமை யான தீர்வை ஒரே தடவையில் பெறுவதற்கு முயற்சிப்பதா அல் லது கிடைக்கும் அதிகாரங்களைப் பெற்றுக்கொண்டு மேலதிக அதி காரங்களுக்காகத் தொடர்ந்து முயற்சிக்கும் அணுகுமுறையைப் பின் பற்றுவதா என்பதையிட்டு நிலையான நிலைப்பாட்டைக் கொண்டி ருக்கவில்லை.

இரண்டாவது அணுகுமுறையை ஒரு கட்டத்தில் தமிழ்த் தலைமை பின்பற்றியது. ஜே. ஆர். ஜயவர்த்தனவின் அர சாங்கம் வழங்கிய மாவட்ட சபையை ஏற்றார்கள். கிடைக்கும் அதி காரங்களை ஏற்றுக்கொண்டு மேலதிக அதிகாரங்களுக்காகத் தொட ர்ந்து முயற்சிக்கும் நோக்கத்துடனேயே அதை ஏற்றார்கள்.

ஆனால் அந்த அணுகுமுறையை இப்போது அவர்கள் கைவிட்டிருப்பது பிரச்சினையின் தீர்வுக்குத் தடையாக இருக்கின்றது. பதவியிலுள்ள அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் வெளிநாட்டு சக்தி கள் மூலம் தீர்வைப் பெறலாம் என்ற அடிப்படையில் செயற்பட்ட மையும் தீர்வைச் சாத்தியமற்றதாக்கிய இன்னொரு காரணம்.

நாட்டில் பேரினவாதிகளின் குரல் முன்னரிலும் பார்க்க இப்போது ஓங் கியிருப்பதும் தீர்வுக்குச் சாதகமற்ற சூழ்நிலையைத் தோற்றுவிக்கின் றது. இவ்வாறான சூழ்நிலைக்கு மத்தியில் தீர்வு முயற்சியை முன் னெடுப்பதிலேயே தமிழ்த் தலைமையின் கெட்டித்தனம் தங்கியிருக் கின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியாயமான தீர்வுக்குச் சாதகமான நிலை ப்பாட்டைக் கொண்டிருப்பவர். சிங்கள மக்களில் மிகப் பெரும்பா ன்மையானோர் மத்தியில் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருப்பவர்.

முன்னைய தீர்வு முயற்சிகளின்போது அன்றைய ஆட்சித் தலைவ ர்களுக்குப் பெரும்பாலான சிங்கள மக்களின் ஆதரவு இல்லாதிருந் தமை அம்முயற்சிகளை முன்னெடுக்க முடியாமற் போனதற்கு ஒரு காரணம். இப்போது அந்த நிலை இல்லை.

எனவே தமிழ் தலை வர்கள் அரசியல் தீர்வுக்குப் பொருத்தமான இச்சந்தர்ப்பத்தைச் சரி யான முறையில் பயன்படுத்த வேண்டும்.

நீண்ட காலமாகத் தீர்வின்றியிருக்கும் பிரச்சினையாக இனப் பிரச் சினை இருக்கின்றது. நாடு சுதந்திரம் அடையும்போதே இப்பிரச் சினை இருந்தது. அறுபது வருடங்கள் கழிந்த நிலையிலும் இன் னும் இனப் பிரச்சி8னை தீரவில்லை. தமிழ் மக்களைப் பிரதிநிதித் துவப் படுத்தியவர்கள் நிச்சயமாக இதற்குப் பொறுப்பேற்க வேண் டும்.

இந்த நிலையில், இன்றைய தலைவர்கள் இதை ஒரு சவாலாக எடுத்துப் பிரச்சினையின் தீர்வுக்காக ஆக்கபூர்வமான முறையில் செயற்பட முன்வருவார்களென நம்புகின்றோம்.

ஒரே தடவையில் தீர்வை அடைவதற்குச் சாதகமான சூழ்நிலை இப் போது இல்லை என்பது எல்லோரும் அறிந்ததே.

எனவே, என்னெ ன்ன அதிகாரங்கள் இப்போது சாத்தியமோ அவற்றைப் பெற்றுக் கொண்டு மேலதிக அதிகாரங்களுக்காகத் தொடர்ந்து முயற்சிக்கும் நடைமுறை தான் முழுமையான தீர்வை அடைவதற்கான வழி. தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தரக்கூடியதும் இந்த நடைமுறையே
மேலும் இங்கே தொடர்க...

தேர்தலில் வாக்கெண்ணும் நடைமுறையில் திருப்தி




பொதுத் தேர்தல் முடிவுகளில் பூரண திருப்தியடைவதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும்பான் மையைப் பெற்று வெற்றியடைந்துள்ள தாகவும் வாக்குகளை எண்ணும் நடைமுறை திருப்தி கரமாக மேற்கொள்ளப்பட்டதாகவும் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்வதா, இல் லையா என்பதைப் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்ப தாக கட்சியைச் சேர்ந்த சிலர் கருத்துத் தெரிவித்தி ருந்தனர். இந்நிலையிலேயே பொதுத் தேர்தல் முடிவு கள் பூரண திருப்தியைத் தருவதாக ரணில் விக்கிரம சிங்க கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கட்சியை மறுசீரமைக்க வேண்டியது இன்றியமையாதது என்பதை தேர்தல் முடிவுகள் தெளிவாக உணர்த்தியுள்ளதாக ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். அதற்காக அவசியமும் அவரசமும் கட்சி முக்கியஸ்தர் களால் உணரப்பட்டுள்ளதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்
மேலும் இங்கே தொடர்க...

யாழ்நகரில் மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் தடைகளை அகற்றுவதில் அமைச்சர் டக்ளஸ் தீவிரம்




யாழ். மாநகர சபைக்குரிய பகுதிகளில் பொது மக்களுக்கு இடையூறுகளையும் சிரமங்களையும் ஏற்படுத்தும் அனைத்துத் தடைகளையும் அகற்றி இப்பகுதிகளை குப்பைகளற்ற சுத்தமான பகுதிகளாக மாற்றும் தனது திட்டத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமுக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தீவிரமாக்கியுள்ளார்.

இதன் பிரகாரம் நேற்று (10) அதிகாலை யாழ். நகரப் பகுதி மற்றும் குருநகர், பாசையூர், நாவாந்துறை போன்ற பகுதி களுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் பொது மக்களின் பாவனைக்கு உட்படும் பகுதிகளில் அம்மக்களின் சுதந்திரமான நடமாட்டங்களுக்கு இடை யூறு மற்றும் சிரமங்களை ஏற்படுத்தும் விடயங்களைத் தவிர்ப்பது மற்றும் குப்பை களை குவிக்காமல் தடுப்பது குறித்தும் அப்பகுதி வர்த்தகர்கள் உட்பட பொதுமக்க ளுக்கு ஆலோசனை வழங்கியி ருந்தார்.

இதன் தொடர்ச்சியாக நேற்றுமாலை யாழ் மாநகர சபைக்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குப்பைகள் கொட்டும் இடங்களை ஆராய்ந்து அவற்றை உடனுக்குடன் அகற்றுவதற்கான பணிப் புரைகளை வழங்கியதுடன் கடைத் தெருக்கள் முழுதும் சென்று குப்பைகளை நடை பாதைகளில் கொட்டுவதை தவி ர்த்துக் கொள்ளும்படி ஆலோசனை தெரிவித்ததுடன், இதனை மீறி குப்பைகளை பொதுமக்களின் பாவனைக்கு உட்படும் நடைபாதைகளிலும் ஏனைய இடங்களிலும் கொட்டுவோர் அதனை அகற்றும் பொறுப் பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

பொதுமக்களின் சுதந்திரமான நடமாட் டத்திற்கு பெரிதும் பாதிப்புக்களை ஏற்ப டுத்தி வருகின்ற சட்டவிரோதமான நடைபாதை கடைகளை அகற்றுவதற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை வழங்கியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

24வது வயதில் நாமல்




அம்பாந்தோ ட்டை மாவட்டத்தில் ஐ. ம. சு. மு. சார் பில் போட்டியிட்டு அதிகூடிய வாக்குக ளைப் பெற்ற ஜனாதி பதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ நேற்று 24வது வயதில் காலடி பதித்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷ 1,47,568 வாக்கு களைப் பெறும் போது அவருக்கு வயது 23 ஆகும். நேற்று அவர் தனது 24வது பிறந்த தினத்தைக் கொண்டா டினார்.

தந்தையின் வழியில் அரசியலுக் குள் கால்பதித்துள்ள இவர், அவரைப் போலவே 24வது வயதில் பாராளு மன்றத்திற்குள் பிரவேசிக்கிறார்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பெலியத்த தொகுதியில் முதன் முதலாகப் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ, தனது 24வது வயதில் பாராளுமன்றத்திற்குத் தெரிவானார்.
மேலும் இங்கே தொடர்க...

கொழும்பு மாவட்டத்தில் விமல், ரணிலுக்கு அதிகூடிய வாக்குகள்: போகொல்லாகம, மிலிந்த, இராதாகிருஷ்ணன் தோல்வி; பெளஸி, லொக்குகே தெரிவு

கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் 10 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் 07 உறுப்பினர்களும் தெரிவாகியுள்ளனர்.

அதேநேரம், ஜனநாயக தேசிய கூட்டணியின் சார்பில் இரண்டு உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர்.

ஆளும் ஐக்கிய சுதந்திர முன்னணியின் பட்டியலில் போட்டியிட்ட தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மிகக் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்றுத் தெரிவாகியுள்ளார். அவர் 2,80,672 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். இரண்டாவது இடத்திற்குப் புதிய முகமாக துமிந்த சில்வா 146,336 விருப்பு வாக்குகளைப் பெற்றுத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சர்கள் ஏ. எச். எம். பெளஸி, காமினி லொக்குகே ஆகியோர் தோல்வியடைந்து விட்டதாக நேற்றைய தினம் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாயிருந்தன. எனினும், அமைச்சர் பெளஸி 51,641 விருப்பு வாக்குகளைப் பெற்று எட்டாவது இடத்துக்குத் தெரிவாகியுள்ளார். அமைச்சர் காமினி லொக்குகே 49,750 விருப்பு வாக்குகளைப் பெற்று பத்தாவது இடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் முறையே, முன்னாள் அமைச்சர்கள் சம்பிக ரணவக, தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன, சுசில் பிரேம்ஜயந்த், ஏ. எச். எம். பெளஸி, ஜீவன் குமாரதுங்க, காமினி லொக்குகே ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஆறாவது இடத்துக்குப் புதுமுகமாகத் திலங்க சுமதிபால தெரிவாகியுள்ளார்.

இதேவேளை, முன்னாள் அமைச்சர்கள் ரோஹித்த போகொல்லாகம,

மிலிந்த மொறகொட, பிரதியமைச்சர் பி. இராதாகிருஷ்ணன் ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர். பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணன் 9064 விருப்பு வாக்குகளையும், இ. தொ. கா. வேட்பாளர் எம். ரவிச்சந்ரன் 4210 வாக்குகளையும் பெற்றுத் தோல்வியடைந்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க 231,957 விருப்பு வாக்குகளைப் பெற்று முதலிடத்துக்குத் தெரிவாகியுள்ளார். மற்றும் ரவி கருணாநாயக்க, விஜேதாச ராஜபக்ஷ ஆகிய முன்னாள் உறுப்பினர்களும் புதுமுகங்களாக மொகான்லால் கிறேரு, ரோசி சேனநாயக்க, சுஜீவ சேனசிங்க, பிரபா கணேசன் (42,851) ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

மேலும் மொஹமட் முஸம்மில், நல்லையா குமரகுருபரன், மொஹமட் மஹ்ரூப், சபீக் ரஜாப்டீன் ஆகியோர் தோல்வியடைந்தள்ளனர்.

இது இவ்வாறிருக்க முன்னாள் ஜெனரல் சரத் பொன்சேகா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் இரண்டு பேர் வெற்றி பெற்றுள்ளனர். சரத் பொன்சேகா 98,458 விருப்புவாக்குகளைப் பெற்றும், ஜே. வி. பி.யின் முன்னாள் உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி 78,126 விருப்பு வாக்குகளைப் பெற்றும் தெரிவாகியுள்ளனர். ஜே. வி. பியின் முன்னாள் உறுப்பினர் லக்ஷ்மன் நிபுன ஆராச்சி உட்பட 20 பேர் தோல்வியடைந்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

அரசின் அமோக வெற்றிக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து நீண்ட காலத்திற்குப்பின் அறுதிப் பெரும்பான்மை

நீண்ட காலத்திற்குப் பின்னர் அறுதிப் பெரும்பான்மையுடன் அரசாங்கம் அமைவதும் பல புதிய முகங்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியிருப்பதும் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்துடனான பாராளுமன்றத்தின் விசேட அம்சங்களாக உள்ளன.

நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இந்தத் தேர்தல் முறையின் கீழ் அறுதிப் பெரும் பான்மையுடனான அரசாங்கம் அமையவுள்ளது.

கடந்த 8ம் திகதி நடந்த தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலுமிருந்து பல புதுமுகங்கள் தெரிவாகியிருக்கிறார்கள்.

இவர்களுடனான பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் 22ம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்தத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எதிர்க்கட்சியினரைவிட இரண்டு மடங்குக்கு கூடுதலான வாக்குகளைப் பெற்றுள்ளது.

வெளியிடப்படாத இரண்டு மாவட்ட முடிவுகளை விட, 20 மாவட்டங்களில் ஐ.ம.சு.மு. 117 ஆசனங்களைப் பெற்றுள்ளது. ஐ. தே. கட்சி 46 ஆசனங்களை மாத்திரமே பெற்றுத் தோல்வியடைந்துள்ளது. தமிழரசுக் கட்சி வடக்கு கிழக்கில் போட்டியிட்டு 12 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. வெற்றிக் கிண்ண சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயக தேசிய முன்னணி 5 ஆசனங்களை மாத்திரமே பெற்றுள்ளது. இந்த நிலையில் கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டியில் 34 வாக்குச் சாவடிகளுக்கும் திருமலை மாவட்டத்தில் கும்புறுப்பிட்டியில் ஒரு வாக்குச் சாவடிக்கும் மீள்வாக்குப் பதிவு 20ம் திகதி நடைபெறவுள்ளது. இதன் முடிவு வெளியிடப்பட்டதும். நாடு முழுவதுமான தேர்தல் முடிவு உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும். அதன் பின்னரே கட்சிகள் பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை முழுமையாகத் தெரியவரும்.

இந்த நிலையில் புதிய அமைச்சரவையை அமைப்பதில் ஜனாதிபதி மும்முரமாக ஈடுட்படுள்ளாரெனத் தெரியவருகிறது. ஆயினும், இது தொடர்பான அறிவிப்புக்கள் இரண்டொரு தினங்களில் வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது. நடந்து முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகளின்படி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் அம்பாந்தோட்டையில் போட்டியிட்ட நாமல் ராஜபக்ஷ, கம்பஹா மாவட்டத்தில் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே, மாத்தறை மாவட்டத்தில் சனத் ஜயசூரிய, கொழும்பு மாவட்டம் துமிந்த சில்வா, திலங்க சுமதிபால, மாத்தளை மாவட்டத்தில் சட்டத்தரணி வசந்த பெரேரா, காலி மாவட்டத்தில் நிஷாந்த முத்துஹெட்டிகம, சஜித் வாஸ்குணவர்தன, யாழ். மாவட்டத்தில் ஈ.பி.டி.பி. சார்பில் போட்டியிட்ட எலன்ரின் உதயன், இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஆர். சரவணபவன், சி. சிறி தரன், ஐ.தே.க. சார்பில் காலஞ்சென்ற முன்னாள் ஐ.தே.க. எம்.பியின் மனைவி விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் புதியவர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்காவின் புதல்வர் விதுர விக்ரமநாயக்கவும் புதிதாக பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

பிரதான கட்சிகளிலுள்ள பிரபலங்கள் பலர் நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்துள்ளதுடன் மாறாக புதியவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் கூடுதல் விருப்பு வாக்குகள் பெற்று நாமல் ராஜபக்ஷ தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆறாவது பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த ஜே.வி.பியின் பிரபலங்கள் பலர் தோல்வியடைந்துள்ளனர். பிமல் ரத்நாயக்க, லால்காந்த, நிஹால் கலப்பத்தி போன்றோர் தோல்வியடைந்துள்ளனர்.

கொழும்பில் போட்டியிட்ட மிலிந்த மொரகொட, ரோஹித போகொல்லாகம போன்றோரும் தோல்வியடைந்துள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் வீ. இராதாகிருஷ்ணன், பீ. ராஜதுரை, திகாம்பரம், ஜே. ஸ்ரீரங்கா ஆகியோரும் புதியவர்களாக பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.

உலகத் தலைவர்கள் வாழ்த்து

இதேவேளை நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றியீட்டியுள்ளதைத் தொடர்ந்து உலக நாட்டுத் தலைவர்களிடமிருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்துச் செய்திகள் வந்த வண்ணமுள்ளன. பல தசாப்தங்களுக்குப் பின்னர் நாடு முழுவதும் நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியைப் பெற்றுள்ளமைக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக அமெரிக்கா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இது இரட்டிப்பு வெற்றியாகும் என்றும், மனித உரிமைகளைப் பாதுகாத்து, பொருளாதார அபிவிருத்தி, அதிகாரப் பரவலாக்கம், இன நல்லிணக்கம் என்பவற்றை மேற்கொள்வதற்கான செயற்பாட்டை முன்னெடுக்க மக்கள் ஆணை வழங்கியிருக்கிறார்களென்றும் அமெரிக்கா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிதாகத் தெரிவாகியுள்ள அரசாங்கத்தோடு வரலாற்று ரீதியான உறவை வலுப்படுத்திக் கொள்ள முடியுமென நம்புவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருவதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன
மேலும் இங்கே தொடர்க...