30 ஜூன், 2011

அரசியல் தீர்வு தொடர்பிலான ஜனாதிபதியின் கூற்றுக்கு இந்தியாவே பதிலளிக்க வேண்டும்: மாவை

தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதியின் தெளிவுபடுத்தல்கள் மற்றும் அவரது நிலைப்பாடு ஆகியவற்றுக்கு இந்தியாவே பதிலளிக்க வேண்டுமே தவிர அதற்கான தேவை தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு கிடையாது என்று கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட எம்.பி. யுமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

உள்நாட்டின் தேசிய பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் உயர் அதிகாரிகள் ஆகியோருடனான சந்திப்பின் போது அரசியல் தீர்வு விவகாரம் குறித்து வெளியிட்டிருந்த கருத்துக்கள் தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மாவை எம்.பி. மேலும் கூறுகையில்:

தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வுகள் தமிழர்களால் எதிர்பார்க்கப்படுகின்ற நிரந்தரமான அரசியல்தீர்வு உள்ளிட்ட தமிழர் தரப்பு விடயங்கள் குறித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு ஏற்கனவே அரசாங்கத்திடமும் ஜனாதிபதியிடமும் அறிவித்தாயிற்று. இதனை ஊடகங்களும் வெளிப்படுத்தியிருந்தன.

இந்நிலையில் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது அல்லது அத்திருத்தத்துக்கும் அப்பால் செல்வது குறித்து இந்தியா தமக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருப்பதும் பாராளுமன்றத் தெரிவுக்குழு மற்றும் அரசியல் தீர்வு தொடர்பிலான தமது நிலைப்பாடு சம்பந்தமான கூற்றுக்களை அவர் வெளியிட்டிருப்பது குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அலட்டிக் கொள்ளவில்லை.

மேலும் பாராளுமன்றத் தெரிவுக்கு அமைப்பதான நோக்கம் குறித்தும் நாம் எடுத்துக் கூறியிருக்கிறோம். எனவே ஜனாதிபதியின் மேற்படி கூற்றுக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடோ அல்லது அவசியமோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடையாது.

இலங்கைத் தமிழர் விவகாரம் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பில் நடைமுறைப்படுத்த வேண்டிய விடயங்கள் மற்றும் கடைப்பிடிக்கவேண்டிய அணுகு முறைகள் குறித்து இந்தியா இலங்கைக்கு எந்தவித அழுத்தமும் கொடுக்கவில்லை என்று ஜனாதிபதி கூறியிருப்பதற்கு இந்தியாவே பதிலளிக்க வேண்டும், கூட்டமைப்பு அல்ல.

மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தை பேசிக் கொண்டிருக்கவும் எமக்கு நேரமில்லை. ஜனாதிபதியின் கூற்று குறித்து ஊடகங்கள் இந்தியாவிடமே கேள்வியெழுப்ப வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக