18 ஏப்ரல், 2010

த.தே.கூட்டமைப்பு எம்.பீக்களுக்கு

பழையவர்களும் புதியவர்களுமாகப் பதின்மூன்று பேர் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்ஹர்கள். அடுத்த தேர்தலுக்கும் நீங்கள் மக்களிடம் வாக்குக் கேட்டுச் செல்ல வேண்டியவர்கள்.

அப்போதாவது பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற ரீதியில் உங்கள் சாதனைகளைப் பட்டியல் போட்டுக் காட்டும் வகையில் செயற்பட வேண்டுமென வாழ்த்துகிறேன். பட்டியல் போடுவதற்கான சாதனைகள் எதுவும் இதுவரை இருக்கவில்லை. இனிமேலாவது இருக்கத்தானே வேண்டும்.

உங்களுக்கு மக்களாணை கிடைத்திருப்பதாகச் சொல்கின்ஹர்கள். பதின்மூன்று பேர் தெரிவு செய்யப்பட்டதை மக்களாணை என்று கூறிப் பெருமைப்படலாமா என்பதைப் பின்னர் பார்ப்போம்.

ஒவ்வொரு தடவையும் கூடுதலான எண்ணிக்கையில் தெரிவு செய்யப்படும் போது மக்களாணை கிடைத்திருப்பதாக நீங்கள் கூறுவது வழக்கம். ஆனால் மக்களுக்கு அதனால் எந்தப் பலனும் ஏற்படவில்லை.

விசேடமாக, கடந்த பாராளுமன்றத்தில் 22 பேர் அங்கத்துவம் வகித்தீர்கள். அது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உச்ச கட்ட பிரதிநிதித்துவம். அந்தப் பிரதிநிதித்துவமும் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையையும் பெற்றுத் தரவில்லை.

அழிவுகளையும் இழப்புகளையும் மாத்திரமே பெற்றுத் தந்தது. இழப்புகளுக்கும் அழிவுகளுக்கும் மேலதிகமாக இன்றுங்கூட அகதி வாழ்க்கை வாழ்பவர்களைக் காண முடிகின்றது. கூட்டமைப்புத் தலைமை எடுத்த தவறான முடிவின் விளைவுகள் இவை.

மீண்டும் அப்படியான அவலத்துக்குத் தமிழ் மக்கள் இட்டுச் செல்லப்படும் நிலை உருவாகுவதற்கு நீங்கள் உடந்தையாக இருக்க மாட்டீர்கள் என நம்புகின்றேன்.

மக்களாணை விடயத்துக்கு வருவோம். நீங்கள் போட்டியிட்ட மாவட்டங்களுள் யாழ்ப்பாணத்தைத் தவிர மற்றைய அனைத்தும் பல்லின மாவட்டங்கள். இந்த மாவட்டங்களில் தமிழ் மக்களின் சிந்தனையில் தமிழ்ப் பிரதிநிதிகளின் எண்ணிக்கையே முதலிடம் வகிக்கும்.

அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மனதார விரும்பாதவர்களும் அதற்கு வாக்களிக்கும் சாத்தியம் உண்டு. இம்மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியலிலும் பார்க்கத் தமிழ்ப் பிரதிநிதித்துவம் என்ற கருத்துருவம் முன்னுரிமை பெறுவது இயல்பானதே.

யாழ்ப்பாண மாவட்டத்தின் நிலை வித்தியாசமானது. அங்கே தமிழ் பிரதிநிதித்துவக் கருத்துருவம் அவசியமற்றது. ஏனென்றால் அது பல்லின மாவட்டமல்ல. யாழ்ப்பாணத்தில் உங்களுக்கு ஐந்து உறுப்பினர்கள் உள்ளனர்.

அதை மக்களாணை என்று நீங்கள் கூற முடியாது. ஐந்து ஆசனங்களில் ஒன்று போனஸ் ஆசனம். அதை நீக்கிப் பார்த்தால், வாக்குகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டவர்கள் நான்கு பேர் மாத்திரமே.

உங்களுக்கு எதிரான அணிகளிலும் நான்கு பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். உங்களுக்கும் மற்றைய கட்சிகளுக்கும் சமமான பிரதிநிதித்துவம். போனஸ் ஆசனத்தினால் நீங்கள் முன்னணியில் நிற்கின்ஹர்கள்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏழு இலட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்களில் ஒன்றரை இலட்சம் பேர் வரையிலேயே வாக்களித்திருக்கின்றார்கள். தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் அதன் முன்னோடிகளான தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்பனவும் நீண்ட காலமாக மாவட்ட அரசியலில் ஏகபோகம் செலுத்தியவை.

இந்த நிலையில் ஐந்து இலட்சம் பேர் வரை வாக்களிக்கவில்லை என்றால் இக்கட்சிகளின் அரசியல் தொடர்பான ஏமாற்றமே காரணம் என்று கூறலாமல்லவா!

யாழ்ப்பாண மாவட்டத்தில் உங்களுக்கு 65,119 வாக்குகள் கிடைத்தன. கூட்டமைப்புக்கு எதிராகப் போட்டியிட்ட கட்சிகளும் சுயேச்சைகளும் மொத்தம் 83,404 வாக்குகளைப் பெற்றன. தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் முன்னைய தேர்தல்களில் அளிக்கப்பட்ட வாக்குகளில் அரைவாசிக்குக் கூடுதலாகவே பெற்றுவந்தன. மற்றைய கட்சிகளும் சுயேச்சைகளும் பெற்ற மொத்த வாக்குகள் இவ்விரு கட்சிகளும் பெற்ற வாக்குகளுக்குக் கிட்டவும் வர முடியவில்லை.

இந்தத் தேர்தலில் நிலைமை மாறிவிட்டது. நீங்கள் பெற்ற வாக்குகளிலும் பார்க்க 18,285 கூடுதலான வாக்குகளை உங்களை எதிர்த்துப் போட்டியிட்ட கட்சிகளும் சுயேச்சைகளும் பெற்றிருக்கின்றன.

இந்த நிலையில் மக்களாணை பற்றிய பேச்சு அர்த்தமற்றது. எவ்வாறாயினும் மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள். இனப்பிரச்சினைக்குத் தீர்வு வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக