27 மார்ச், 2010

புளொட் தலைவர் த.சித்தார்த்தன், புளொட் வன்னி அமைப்பாளர் க.சிவநேசன் (பவன்) ஆசிகுளம் பகுதிக்கு விஜயம்-



வன்னி மாவட்டத்தில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களான புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் கந்தையா சிவநேசன் (பவன்) மற்றும் புளொட் முக்கியஸ்தர்களும், ஆதரவாளர்களும் இன்று வவுனியா ஆசிகுளம் பகுதிக்கு விஜயம்செய்து அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர். அங்கு உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்திலும் அவர்கள் உரையாற்றினர். இங்கு உரையாற்றிய புளொட் தலைவர் த.சித்தார்த்தன் மற்றும் புளொட் வன்னி அமைப்பாளர் க.சிவநேசன் (பவன்) ஆகியோர், ஆசிகுளம் கிராமத்தைப் பொறுத்தமட்டில் இது ஓர் எல்லைப்புறக் கிராமமாகும்.

இந்த எல்லைப் பகுதியைப் பாதுகாப்பதற்காக எமது கட்சி எந்தளவுக்கு பாடுபட்டதென்பதும், எவ்வளவு பிரச்சினைகளுக்கும், சவால்களுக்கும் முகம் கொடுத்தது என்பதும் இங்கு வாழும் மக்கள் அனைவரும் நன்கு அறிந்த விடயமாகும். நாம் பாராளுமன்றத்தில் இருந்த காலத்தில் இப்பகுதிகளில் மேற்கொண்ட அபிவிருத்திப் பணிகளுக்குப் பிறகு இப்பிரதேசங்களில் எந்தவிதமான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை. அத்துடன் அபிவிருத்திக்கான எந்தவொரு முன்னெடுப்புக்களும் மேற்கொள்ளப்படவில்லை. நாங்களும் தமிழ் தேசியவாதிகள் தான். அதில் யார் கூட யார் குறைய என்று சொல்வதற்கு எதுவுமில்லை. ஆயினும் தமிழ்த் தேசியத்தின் பெயரினால் மக்களின் அவலத்தில் அரசியல் நடத்த முடியாது. இப்பகுதியில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட வேண்டும். மீள்குடியமர்ந்துள்ள மக்களின் தொழில் வாய்ப்பு, போக்குவரத்து, கல்வி, மருத்துவம் என பல்வேறு அத்தியாவசிய தேவைகளும் பூர்த்திசெய்து கொடுக்கப்பட வேண்டும். அத்துடன் தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்கான முனைப்புக்களையும் மேற்கொள்ள வேண்டும். ஆகவே இந்நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு மக்களின் ஆதரவு மிகவும் அவசியமாகும். எனவே பொதுத் தேர்தலின்போது நீங்கள் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) வேட்பாளர்களுக்கு உங்கள் பூரண ஆதரவினை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இப்பகுதி மக்கள் சிலர் இங்கு உரையாற்றுகையில், புளொட் அமைப்பு இப்பகுதியில் இல்லாதிருந்தால் இப்பகுதிகளில் நாம் பாதுகாப்பாக வாழ்ந்திருக்க முடியாது. இனிமேலும் இப்பகுதிகளில் பாதுகாப்பாக வாழவும் முடியாது.

எனவே அனைத்து மக்களும் புளொட் அமைப்பினரை வரவேற்று பூரண ஒத்துழைப்பினையும், ஆதரவினையும் வழங்குவதே சிறந்ததாகும். கடந்த காலங்களில் புளொட் அமைப்பினர் இப்பகுதி மக்களின் அமைதியான வாழ்விற்காக பல்வேறு அர்ப்பணிப்புகளுடனான சேவைகளை புரிந்துள்ளனர். இதன்போது பல்வேறு இழப்புக்களையும் அவர்கள் சந்தித்துள்ளனர். அவர்களின் சேவைகள் தற்போதும் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. எனவே அவர்களின் சேவைகள் தொடர வேண்டும். இதற்கு அனைவரும் பூரண ஆதரவினை வழங்க வேண்டுமென்று தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக