24 ஆகஸ்ட், 2009

தாயகக்குரல் 14

பிரச்சனையை உருவாக்கிய அதே பழைய சிந்தனை மட்டத்தால் அந்தப் பிரச்சனையை தீர்க்கமுடியாது- - அல்பர்ட் ஜன்ஸ்டைன்
~~யாழ்ப்பாணத்தில் தலைசிறந்த தமிழ் தலைவர்கள் இருந்தார்கள். இவர்கள் உலகமட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட திறமைசாலிகள். இவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றியும் நாம் சிந்திக்கவேண்டும்.|| என்று இலங்கையில் யுத்த நிறுத்தம் வேண்டும் என்று தமிழ் நாடு சட்டசபையில் கொண்டுவந்த தீர்மானத்தின்மீது உரையாற்றிய காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர் பீற்றர் அல்போன்ஸ் கூறியிருந்தார்.
தமிழ் அரசியல் தலைவர்களான அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், நீலன் திருச்செல்வம், சாம் தம்பிமுத்து போன்ற பலர் புலிகளால் கொல்லப்பட்டது குறித்தே பீற்றர் அல்போன்ஸ் மேற்படி கூறியிருந்தாரா அல்லது இந்த தலைவர்கள் முதல்கொண்டு இவர்கள் வழி வந்து இன்று கட்சிகளுக்கு தலைமை தாங்கும் மாவை சேனாதிராசா, இரா.சம்பந்தன் வரையும், எவராலுமே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியவில்லையே என்ற ஆதங்கந்தில் கூறினாரா தெரியவில்லை.
கடந்த 60 வருடங்களுக்கு மேலாக இந்த தலைவர்கள் பாராளுமன்றத்திற்கூடாக பெறமுடியாத உரிமைகளை இன்று வடக்கில் நடைபெறும் உள்ளுராட்சி மன்றங்களுக்கூடாக பெற்றுத் தருவோம் என மக்களிடம் வாக்கு கேட்கிறார்கள் தமிழ் தேசியக் கூட்டமைபபினர்.
இந்த உள்ளுராட்சித் தேர்தல்களில் போட்டியிடும் கட்சிகளில் தேசியக் கட்சிகளான பொதுசன ஐக்கிய முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றைப்பற்றி தமிழ் மக்களுக்கு நன்கு புரியும். இனப்பிரச்சினை ஆயுதப்போராட்டமாக மாறுவதில் இக்கட்சிகள்; வகித்த பாத்திம் என்ன என்பதை தமிழ் மக்கள் நன்கறிவர். ஆனால் இனப்பிரச்சினை தீர்க்கப்படாததில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வகித்த பாத்திரம் என்ன என்பதுபற்றி தமிழ் மக்களுக்கு குறிப்பாக இன்றை சந்ததியினருக்கு தெரிந்திருக்காது.
பீற்றர் அல்போன்ஸ் கூறியிருந்தபடி ஜீ.ஜீ. பொன்னம்பலம் , எஸ்.ஜே.வி.செல்வநாயகம், செனற்றர் திருச்செல்வம், வன்னியசிங்கம், கதிரவேற்பிள்ளை, சிவசிதம்பரம், அமிர்தலிங்கம் போன்ற பலர் இராணி வழக்கறிஞர்களாகவும் சாதாரண வழக்கறிஞர்களாகவும் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கியிருந்தனர். இனப்பிரச்சினைக்கு இதுவரை திர்வு காணப்படாமைக்கு அரசாங்கம்மீதே தமி;ழ் தலைவர்கள் குற்றம் சுமத்தி வந்தனர். ஆனால் இவர்கள் கூற்றின் உண்மையை அறியவேண்டுமானால் தமிழ் தலைவர்களது கடந்தகால செயற்பாடுகள் குறித்தும் திரும்பி பார்க்கவேண்டியுள்ளது. அதே நேரம் கடந்த காலங்களில் தமிழ் தலைவர்கள்மீது ஏனையோரால் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களையும் இன்றுவரை நாம் பெற்ற அரசியல் அனுபவங்களுடன் ஒப்பிட்டு பார்ப்பதும் அவசியம்.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண தமிழ் தலைவர்களுக்கு கிடைத்த பல சந்தர்ப்பங்களை கோட்டைவிட அவர்களின் வர்க்க நலன்களே காரணமாக இருந்தது என்றும் சிலர் குற்றம் சாட்டி வந்தனர். வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் அரசியல் தலைமைகள் யாழ் குடாநாட்டையே மையப்படுத்தி இருந்தன என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள அரசுகள் மேற்கொண்ட இனவாத நடவடிக்கைகளில் முக்கியமானவை இரண்டு. ஒன்று சிங்களம் அரசகரும மொழியாக்கல். இரண்டாவது கல்வியில் தரப்படுத்தல்முறை அறிமுகப்படுத்தியது. இரண்டு சட்டங்களாலும் அதிகம் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்;கள் யாழ்குடாநாட்டு மக்களே. பொதுவாக யாழ் குடாநாட்டு மக்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து உயர்கல்விகளை கற்று இலங்கையில் அரசநிர்வாகத் துறைகளில் ஆதிக்கம் செலுத்திவந்தனர். அரசநிர்வாகத்தில் அதிஉயர் பதவி வகித்தவர்கள் பெரும்பாலும் தமிழர்களே. குறிப்பாக யாழ் குடாநாட்டை சேர்ந்தவர்களே. சிங்களம் அரசகரும மொழியாக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களும் இவர்களே.
கல்வியில் தரப்படுத்;தல் அறிமுகப்படுத்தப்பட்டதும் யாழ் குடாநாட்டு மாணவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டனர்.
தமிழ் மக்களுக்கு எதிரான அரசின் முதல் நடவடிக்கை தமிழ் பிரதேசங்களில் சிங்கள மக்களைக் குடியேற்றியது. இந்த நடவடிக்கை தமிழ் மக்களை உடனடியாக பாதிக்காததால் மக்கள் அதில் பெரிதாக அக்கறைகாட்டவில்லை.
சிங்கள அரசுகளின் தமிழ் மக்களுக்கெதிரான இனவாத நடவடிக்கைகளால் தமிழரசுக்கட்சிக்கும், பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் தமிழ் மக்கள் தங்கள் அமோக ஆதரவை வழங்கிவந்தனர். அரசின் நடவடிக்கைகள் குடாநாட்டை அதிகம் பாதித்ததாலும் அரசியல் தலைமை குடாநாட்டை மையப்படுத்தி இருந்ததால் அரசுக்கெதிரான சட்டமறுப்பு போராட்டங்கள் வடபகுதியில் ஆரம்பித்து கிழக்கிலும் தீவிரமடைந்தது.
இந்தப் போராட்டங்களின் விளைவாக மாறிமாறி பதவிக்கு வந்த அரசுகள் தமிழரசுக்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி பல ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டன. ஆனால் அந்த ஒப்பந்தங்கள் எவையும் நடைமுறைக்கு வரவில்லை. ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வராததற்கு முழுப்பொறும் அரசாங்கமே என்ற தமிழ் தலைரவர்களின் குற்றச்சாட்டுக்கு எதிராக பலர் விமர்சனம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தங்கள் தோல்வியடைய அரசுகள் மாத்திரமல்ல தமிழ் தலைவர்களின் விவேகமற்ற செயல்பாடுகளும் ஒரு காரணம் என இவர்களது தவறுகளை சுட்டிக்காட்டி வந்த இடதுசாரிகள்மீது தமிழ் மக்கள் சேறுபூசினர். ஆனாலும் தமிழ் தலைவர்கள்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களில் ஓரளவு நியாயம் இருப்பதாக நாம் கடந்தகால படிப்பினைகளில் இருந்து உணரமுடிகிறது.
தமிழ் தலைவர்கள் இனப்பிரச்சினை தொடர்பாக ஸ்ரீலங்கா சதந்திரக் கட்சிக்; கூட்டரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது தீவிரமான போராட்டங்களை நடத்துவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியுடன் தாராள மனப்பான்மையுடன் விட்டுக்கொடுத்து போவதாகவும் கடந்த காலங்களில் விமர்சிக்கப்பட்டனர். கடந்தகால வரலாற்றை ஆராய்ந்தால் அவர்களுடைய குற்றச்சாட்டில் ஓரளவு உண்மையும் இருப்பதை காணலாம்.
இனப்பிரச்சினை தொடர்பாக நடைபெற்ற போராட்டங்கள் எல்லாம் குறிப்பாக காலிமுகத்திடலில் நடைபெற்ற சத்தியாக்கிரகம், வடக்கு கிழக்கில் அரச நிர்வாகங்களுக்கெதிராக நடைபெற்ற சத்தியாக்கிரகம், சட்டமறுப்பு போராட்டம், ஸ்ரீ எதிர்ப்பு போராட்டம் எல்லாமே சுதந்திரக்கட்சி அரசுக்கெதிராகவே நடைபெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.
1956ல் பதவிக்கு வந்த பண்டாரநாயக்கா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்காலத்தில் அரசுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று பண்டா - செல்வா ஒப்பந்தம் உருவாகிற்று. .இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக ஜே.ஆர் இனவாதப் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அதே நேரம் பண்டாரநாயக்கா அரசில் இருந்த வலதுசாரி சக்திகளும் இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக சூழ்சிகள் செய்து பண்டாரநாயக்காவுக்கு நிர்பந்தம் ஏற்படுத்தும் விதத்தில் ஒப்பந்தத்திற்கு எதிரான பிரச்சாரம் வலுத்திருக்கும் வேளை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு ~~சிங்கள ஸ்ரீ|| இலக்க பஸ்களை அனுப்பினர்.
சிங்கள ஸ்ரீ க்கு எதிரான போராட்டத்தை சி.சுந்தரலிங்கம் ஆராம்பித்தார். சுந்தரலிங்கத்துக்கு தமிழ் மக்களிடையே நல்ல பெயர்வந்துவிடும் என்பதால் தமிழரசுக்கட்சியும் ஸ்ரீ எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டது. அரசுக்கு எதிரான போராட்டத்pல் தமிழரசுக்கட்சி ஈடுபட்டதும் பண்டாரநாயக்காவுக்கு நெருக்கடிகள் தோன்றி ஒப்பந்தத்தை கிழித்தெறியும் நிலை ஏற்பட்டது. இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் ஸ்ரீ பிரச்சினையே இருந்திருக்காது. (இப்போது எந்தவித போராட்டமும் இல்லாமலே ஸ்ரீ இலக்கத்தகட்டில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது)
1960 ல் சுதந்திரக் கட்சி அரசுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையே அரசகரும மொழி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பாடசாலைகளை தேசியமயமாக்கும் மசோதாவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு வெளியானதும் தமிழ் அரசுக் கட்சி உடனே பேச்சுவார்த்தையை முறித்துக்கொண்டு அரசமொழிக் கொள்கையையும் பாடசாலைகள் தேசியமயமாக்குவதையும் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது. பாடசாலை தேசியமயமாக்கப்பட்டதால் தமிழ் மக்களின் கல்வித்தரம் குறைந்துவிட்டது என கூறமுடியாது.
1964ல் சிறிமாவோ தலைமையிலான கூட்டரசாங்கம் கவிழும் நிலையில் இருந்தபோது பண்டா -செல்வா ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதாகக் கூறி தமிழரசுக் கட்சியின் ஆதரவைக் கோரியபோது அதற்கு ஆதரவளித்திருந்தால் இவர்கள் தயவில் இருக்கும் அரசிடம் பண்டா செல்வா ஒப்பந்தத்தை நிறைவேற்றியிருக்கலாம். இவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசை வீழ்த்தினர்.
கூட்டரசாங்கம் கவிழ்ந்து 65ம் ஆண்டு தேர்தலில் ஆட்சியமைத்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இணைந்துகொண்ட தமிழரசுக் கட்சி மாவட்ட சபையை அடிப்படையாக கொண்ட தீர்வுக்கு டட்லியுடன் ஒப்பந்தம். செய்துகொண்டது. ஒரு காலகட்டத்தில் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தமுடியாது என்று டட்லி அறிவித்த பின்னரும் தமிழரசுக் கட்சி கடைசிவரை அரசாங்கத்தை ஆதரித்தது.
தமிழரசுக்கட்சி, தமிழ் காங்கிரஸ் ஆகியன இணைந்து தமிழர் விடுதலைக்கூட்டணி உருவான பின்னர் நடைபெற்ற கட்சியின் முதலாவது மகாநாட்டில் தனிநாட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1977ல் தனிநாட்டு கோரிக்கைக்கு மக்கள் ஆணைகேட்டு பாராளுமன்றம் சென்ற தமிழர் விடுதலைக் கூட்டணி தனிநாட்டு கோரிக்கையை கைவிட்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மாவட்ட அபிவிருத்திச்சபை திட்டத்தை ஏற்றுக்கொண்டு மாவட்ட அபிவிருத்திச்சபை தேர்தலிலும் பங்குபற்றினர்.
1983ம் ஆண்டு இனக்கலவரத்துடன் ஆயுதப் போராட்டம் தீவிரமடைந்தது. புலிகள் ஆயுதபலத்தால் போராட்டத்தில் ஈடுபட்ட ஏனைய இயக்கங்களை அழித்தனர். இன்று தமிழ்; தேசியக் கூட்டமைப்;பில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் துரோகிகளாக குற்றம் சாட்டப்பட்டு புலிகளால் கொல்லப்பட்டதும் பின்னர் கட்சியில் உள்ளவர்கள் சிலர் புலிகளை ஏகபிரதிநிதிகளாக ஏற்று பாராளுமன்ற பதவியை தக்கவைத்துக்கொண்டதும் இன்றைய தலைமுறையினர் அறிந்ததே. ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த பின்னரும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு கிடைத்த பல சந்தர்ப்பங்களையும் தமிழ்; தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் தவறவிட்டனர். புலிகளை ஏகபிரதிநிதிகளாக இவர்கள் ஏற்று செயற்படத் தொடங்கிய பின்னர் அரசுடனான பேச்சுவார்த்தையை முற்றாக புறக்கணித்துவந்தனர். இப்போது புலிகள் இல்லாதநிலையில் மீண்டும் ஏகபிரதிநிதிகளாக தங்களை அனுப்புங்கள் இனப்பிரச்சினைக்கு தீர்வை வாங்கித் தருகிறோம் என்கின்றனர். 60 ஆண்டுகளுக்கு மேலாக ஏமாற்றியது போதாதா.
தமிழ் மக்களின் நெஞ்சிலேயே குத்திய சிங்கள அரசுகளைவிட தமிழ் மக்களின் முதுகிலே குத்துகிற தமிழ் தேசியக் கூட்டமைப்பே ஆபத்தானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக