24 ஆகஸ்ட், 2009

தாயகக்குரல் 8

யாழ்ப்பாணம் மாநகரசபைக்கும், வவுனியா நகரசபைக்கும் தேர்தல் நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் தேர்தல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேற்படி இரண்டு உள்ளுராட்சி சபைகளுக்குமான தேர்தல் வேட்புமனுக்கள் நாளைய தினம் 18ம் திகதி முதல் 25ம் திகதிவரையும் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
கடைசியாக வவுனியா நகரசபைக்கான தேர்தல் 1994ம் ஆண்டும் யாழ்ப்பாணம் மாநகரசபைக்கான தேர்தல் 1998ம் ஆண்டும் நடைபெற்றன. 1994ல் வவுனியா நகரசபைத் தேர்தலில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி வெற்றி பெற்று நகரசபை நிர்வாகத்தை பொறுப்பேற்றது. 1998ல் யாழ்ப்பாணம் மாநகரசபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி வெற்றி பெற்றது.
யாழ்ப்பாணம் மாநகரசபையின் முதல்வராக பொறுப்பேற்ற திருமதி சரோஜினி யோகேஸ்வரன் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை அடுத்து முதல்வரான சிவபாலனும் புலிகளாலேயே கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி இரண்டு சபைகளுக்குமான ஆயுட்காலம் முடிந்த பின்னர் நீண்ட காலமாக தேர்தல் நடைபெறவில்லை. இரண்டு முறை தேர்தல் நடத்துவதற்கான அறிவித்தலுடன் வேட்பு மனுக்களும் பெறப்பட்டு பின்னர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டன. இந்தக் காலங்களில் உள்ளுராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட போதெல்லாம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேர்தல் நடைபெறுவதற்கு சாதகமான சூழ்நிலை இல்லை என்றே தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறிவந்தது.
யுத்தம் முடிந்து புலிகள் அழிக்கப்பட்டு தமிழ் மக்கள் அகதிகளாக நிவாரணக் கிராமங்களில் உள்ள இந்தச் சூழ்நிலையில் எவ்வித நிபந்தனையும் இன்றி யாழ்ப்பாணம் மாநகரசபை, வவுனியா நகரசபை ஆகியவற்றுக்கு நடைபெறும் தேர்தல்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றப்போவதாக தெரிவித்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான வினோநோகராதலிங்கம் தமிழ் தேசியக் கூட்மைப்பு போட்டியிடாவிட்டால் ரெலோ தனித்தோ அல்லது வேறு கட்சிகளுடன் சேர்ந்தோ போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளார். ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களிலும் அரசியல்ரீதியான செயற்பாடுகளிலும் நாம் தொடர்ந்து தமிழ் இனத்துக்கு விமோசனங்களைப் பெற்றுக்கொடுக்காது ஏமாற்றி வந்திருக்கிறோம். தவறுகளை உணர்ந்து திருந்தாவிட்டால் எமது இனம் எம்மை குப்பைக் கூடைக்குள் வீசிவிடும் என்று வினோநோகராதலிங்கம் எம்.பி. தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இன்னொரு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சிவநாதன் கிஷோர் அரசுடன் இணைந்து செயல்படுவார் என தெரிகிறது.
தமிழ் கட்சிகளை இணைத்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் முயற்சியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஈடுபட்டு வருகிறது. இந்த தேர்தலில் மட்டும் தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட வீ. ஆனந்தசங்கரிக்கு தேர்தல் ஆணையாளர் அனுமதியளித்துள்ளதால் .வி.கூட்டணியும் போட்டியிடவுள்ளது. ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியில் உள்ள ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, பத்மநாபா .பி.ஆர்.எல்.எவ் ஆகியன இணைந்து போட்டியிடவுள்ளன. .பி.டி.பி. தனித்து போட்டியிடுமா அல்லது ..சு.முன்னணியுடன் இணைந்து போட்டியிடுமா என்பது இதுவரை உறுதியாக தெரியவில்லை.
இன்று தமிழ் மக்கள் முன்னால் உள்ள இரண்டு பிரதான பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணப்படவேண்டும். ஒன்று இடம் பெயர்ந்து அகதிகளாக உள்ள மக்களின் மீள்குடியேற்றம். இரண்டாவது இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு காணப்படவேண்டும்.
தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் தாமே என உரிமை கோருபவர்கள் இதுவரை புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப செயற்பட்டு அரசியல் தீர்வு காண்பதற்கு கிடைத்த பல சந்தர்ப்பங்களை தவறவிட்டனர். இப்போது புலிகள் இல்லாததால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுயமாக செயற்படக்கூடியதாக உள்ளது.
ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து யதார்த்தமான முடிவுகளை எடுக்க தயாராக இல்லை என்பது அண்மையில் சில உறுப்பினர்கள் தெரிவிக்கும் கருத்துகளில் இருந்து தெரிகிறது. அரசியல் தீர்வு காணக் கிடைத்த சந்தர்ப்பங்களை தவறவிட்டதுபற்றி இன்று புலிகளும் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.
ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை அரசாங்கம் முன்வைத்தால் ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர். வடக்கு கிழக்கு இணைந்த அரசியல் தீர்வு ஒன்றைக் கொண்டுவந்தால் ஆதரவு தரலாம் என்கிறார் இன்னொருவர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கும் தீர்வுதான் என்ன என்பதையாவது ஒருமுகமாக விளக்கமாக அரசுக்கு தெரிவிக்காவிட்டாலும் மக்களுக்காவது தெரிவிக்கலாமே.
இனப்பிரச்சினைக்கான தீர்வை இலங்கை அரசிடமே பெறவேண்டும். இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளாது இந்தியாவுடனோ சர்வதேச இராஜதந்திரிகளுடனோ பேசுவதால் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடமுடியாது. சர்வதேசம் இலங்கை அரசை ஓரளவுக்குத்தான் நிர்ப்பந்திக்க முடியும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரும்பும் தீர்வை அரசு வைக்காவிட்டால் இவர்கள் என் செய்யப்போகிறார்கள் என்பதும் மக்கள் முன் உள்ள இன்றைய கேள்வியாகும். இதற்கு உள்ளுராட்சித் தேர்தலின்போதாவது இவர்களிடம் இருந்து விடை கிடைக்குமா பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக