27 ஜூன், 2010

மதுபோதையில் திரிவதற்குத் தடை : யாழ். பொலிஸ் அத்தியட்சகர் தெரிவிப்பு

யாழ்ப்பாணத்தின் பொது இடங்களில் மதுபோதையில் அலைவது மற்றும் சமூகச் சீரழிவு நடவடிக்கைகளில் ஈடுபடுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவின் பத்மதேவ தெரிவித்தார்.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று நேற்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது. அதன்போது கருத்துத் தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்,

"அண்மைக் காலமாக தென்னிலங்கையில் இருந்து வருபவர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் சிலர் யாழ்ப்பாணத்தின் முக்கிய பொது இடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் மது போதையில் அலைந்து திரிந்து மக்களுக்கு இடையூறு விளைவிப்பது பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

நயினாதீவு, நல்லூர் மற்றும் நாக விகாரை போன்ற புனித இடங்களிலும், மற்றும் பொது இடங்களிலும் மது போதையில் நடமாடுவதும் சமூகச் சீரழிவு நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. மீறி நடப்பவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அத்துடன் சுற்றுலாத் தலங்களுக்கு மதுபானம் கொண்டு வருவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட இடங்களுக்கு அருகில் மதுபான சாலையில் மதுபானம் விற்பனை செய்யப்படவும் கூடாது.

ஆலயங்கள், பொது இடங்களில் பிள்ளைகளைப் பிச்சை எடுக்க வைக்கும் பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடைமுறைகள் அனைத்தும் நாளை திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும்" எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக