21 ஏப்ரல், 2010

ஐரோப்பிய விமானச் சேவைகள் நிறுத்தம் : பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பு

ஐஸ்லாந்தின் எரிமலை வெடிப்பால் வான் பரப்பு பாதிக்கப்பட்டது. ஐரோப்பாவில் விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனால் பொருளாதார ரீதியாக உலக நாடுகளில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.

விமான சேவைகள் நிறுத்தப்பட்டது முதல் இன்று வரை 60,000க்கும் அதிகமான விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டிருக்கின்றன.

விமானப் போக்குவரத்துத் தொழிற்துறையே இதனால் ஸ்தம்பிதமடைந்துள்ளது. விமான நிறுவனங்களுக்கு இதனால், ஒரு நாளைக்கு 200 மில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்படுவதாக விமானப் போக்குவரத்துத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, விமானப் போக்குவரத்துத்துறையில் மாத்திரமல்லாமல் வேறுவகையிலும், இந்த விவகாரம் பரந்துபட்ட உலக பொருளாதாரத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

ஏற்றுமதி பாதிப்பு

குறிப்பாக விமானங்களின் மூலம் ஏற்றுமதியாகும் பழவகைகள், பூக்கள் மற்றும் மரக்கறி வகைகளின் ஏற்றுமதியும் இதனால் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் மாத்திரமல்லாமல், உணவுப் பொருட்களின் தயாரிப்பாளர்களும், விவசாயிகளும் கூட இதனால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

காய்கறிகள் அழுகும் நிலை

கென்யாவின் விவசாய ஏற்றுமதி இதனால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதாக கூறப்படுகின்றது. நைரோபி விமான நிலையத்திலும், அந்த நாட்டின் ஏனைய பண்ணைகளிலும் உள்ள குளிரூட்டி வசதி கொண்ட கிடங்குகள் முற்றாக நிரம்பிப் போயுள்ளதாக பிபிசிதெரிவிக்கின்றது.

ஐரோப்பிய சந்தைகளுக்கு அனுப்பப்பட வேண்டிய பெருமளவு பழங்கள், மரக்கறிகள் மற்றும் பூக்கள் அழுகும் நிலையை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மட்டுப்படுத்தப்பட்ட சேவை

இதற்கிடையே பல ஐரோப்பிய விமான நிலையங்கள் இன்னமும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கின்ற போதிலும், ரோம், மட்ரிட் போன்ற சில விமான நிலையங்களில் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் நடத்தப்படுகின்றன.

இடைநடுவில் சிக்கித் தவிக்கும் பயணிகள், வீடு சென்றடைவதற்கு ஏதுவாக ஸ்பெயினில் உள்ள விமான நிலையங்களை மையமாகப் பயன்படுத்தலாம் என்ற பரிந்துரை ஐரோப்பிய போக்குவரத்து அமைச்சர்களால் நடத்தப்படும் அவசர வீடியோ மாநாட்டில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மட்ரிட்டில் உள்ள பிபிசி செய்தியாளர் சாரா றெயின்ஸ்போர்ட் கூறுகையில்,

"வட அமெரிக்கா, லத்தீன் அமெரிக்க மற்றும் ஆசிய பயணிகளுக்கான போக்குவரத்து மையமாக ஸ்பெயினைப் பயன்படுத்த முடியும்" என்று கூறியுள்ளார்.

விமர்சங்கள் தொடர்கின்றன

இதற்கிடையே இந்த விவகாரத்தைக் கையாள ஐரோப்பிய அரசாங்கங்கள் ஆகக்கூடு தலான நாட்களை எடுத்துக்கொள்வதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பல விமான நிறுவனங்கள் இந்த புகை மண்டலத்தின் ஊடாக சோதனை ஓட்டங்களை நடத்திப் பார்த்திருக்கின்றன. அவற்றின் போது எந்த விதமான பாதிப்பும் விமானங்களுக்கு ஏற்படவில்லை என்று அவை கூறுகின்றன.

"அனைத்து விமான சோதனைகளிலும் எந்தவிதமான பிரச்சினைகளும் விமான இயந்திரங்களுக்கு ஏற்படவில்லை. இயந்திரங்களில் எந்தவகையான தூசுகளும் படியவில்லை. விமான முகப்புக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. இந்தத் தகவல்களை அரசியல்வாதிகள் தமது கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்று லுப்தான்சா விமான நிறுவனத்தின் பேச்சாளர் கலவவுஸ் வோல்தர் கூறுகிறார்.

ஆனால், பிரித்தானிய வான்பரப்பில் செய்யப்பட்ட விஞ்ஞான சோதனைகள், விமானங்கள் பறப்பதற்கு ஆபத்தான சூழ்நிலையே இன்னமும் இருக்கக்கூடும் என்று கூறுகின்றன.

இதற்கிடையே வடக்கு ஐரோப்பாவில் இதனால் தடைபட்டுப் போயிருக்கும் தமது பிரஜைகளை ஏற்றிவர இரு போர்க்கப்பல்களை பிரிட்டன் அனுப்பியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக