21 ஏப்ரல், 2010

திருமலை, கண்டி மாவட்டங்களிலும் ஐ.ம.சு.முன்னணிக்கு அமோக வெற்றி


திருமலை: ஐ.ம.சு.மு. - 02; ஐ.தே.க. 01; தமிழ் அரசுக்கட்சி - 01
கண்டி: ஐ.ம.சு.மு. - 08; ஐ.தே.க. - 04

மொத்த ஆசனங்கள்
ஐ.ம.சு.மு. - 127; இ.த.அ.கட்சி - 13
ஐ.தே.க. - 51; ஜன.தே.மு. - 05

(நமது நிருபர்)

திருகோணமலை, கண்டி மாவட்டங்களிலும் ஐ. ம. சு. மு. அமோக வெற்றி பெற்றுள்ளது.

மேற்படி இரு தேர்தல் மாவட்டங்களின் முடிவுகள் நேற்றிரவு வெளியிடப்பட்டன.

இதன்படி திருமலை மாவட்டத்தில் ஐ. ம. சு. மு. இரு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. அதே நேரம் கண்டி மாவட்டத்தில் ஐ. ம. சு. மு. 3,39,813 வாக்குகளைப் பெற்று எட்டு ஆசனங்களைப் பெற்றுள்ளது. திருமலை மாவட்டத்தில் ஐ. தே. க. ஒரேயொரு ஆசனத்தைப் பெற்றுள்ளது. தமிழரசுக் கட்சி ஒரு ஆசனத்தை எடுத்துள்ளது.

கண்டி மாவட்டத்தில் ஐ. தே. க. 1,92,798 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களை மாத்திரமே எடுத்துள்ளது.

ஜனநாயக தேசிய முன்னணி ஆசனம் எதனையும் பெறவில்லை.

இதன்படி, கண்டி மாவட்டத்தில் ஐ. ம. சு. மு. 1,47,02 வாக்கு வித்தியாசத்தால் வெற்றிபெற்றிருக்கிறது.

குளறுபடிகள் காரணமாக இரத்துச் செய்யப்பட்டிருந்த நாவலப்பிட்டி, கும்புறுப்பிட்டி மீள் வாக்குப் பதிவு முடிவுகள் நேற்றிரவு வெளியானதைத் தொடர்ந்து, கண்டி, திருமலை மாவட்டங்களின் முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதன்படி, திருமலை மாவட்டத்தில் ஐ. ம. சு. மு. 59,784 வாக்குகளைப் பெற்று இரண்டு ஆசனங்களைப் பெற்றுள்ளது. இது 42.78 வீதமாகும். இங்கு போட்டியிட்ட ஐ. தே. க. 39,691 வாக்குகளையும், தமிழரசுக் கட்சி 33,268 வாக்குகளையும் பெற்று தலா ஒவ்வொரு ஆசனங்களைப் பெற்றுள்ளன. கடந்த 8ம் திகதி நடந்த பொதுத் தேர்தலின் போது திருகோணமலை மாவட்டத்தினதும், கண்டி மாவட்டத்தினதும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

திருமலை மாவட்டத்திலுள்ள கும்புறுப்பிட்டி வாக்குச் சாவடியிலும், கண்டி மாவட்டத்திலுள்ள நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியிலுள்ள 37 வாக்குச் சாவடிகளிலும் வாக்களிப்பு இரத்துச் செய்யப்பட்டிருந்தது.

இவைகளுக்கான மீள் தேர்தல் நேற்று நடத்தப்பட்டது.

தேர்தல் முடிவுகள் நேற்றிரவு 8.15 அளவில் வெளியிடப்பட்டன. திருமலை மாவட்டத்தின் முடிவு முதலில் அறிவிக்கப்பட்டது. இரவு 11.25 அளவில் நாவலப்பிட்டித் தேர்தல் தொகுதிக்கான முடிவு வெளியாகியது.

இதற்கமைய, திருமலை மாவட்டத்தின் முடிவுகள் வெளியாகின. இதன்படி, திருமலை மாவட்டத்தில் ஐ. ம. சு. மு. இரண்டு ஆசனங்களையும் தமிழரசுக் கட்சி ஒரு ஆசனத்தையும் ஐ. தே. க. ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன. (திருமலை மாவட்டத்தில் மொத்தம் நான்கு ஆசனங்களைக் கொண்டதாகும்.

இதேநேரம், கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டித் தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவும் வெளியாகின.

நாவலப்பிட்டியத் தொகுதியில் ஐ. ம. சு. மு. 38,153 வாக்குகளைப் பெற்றுள்ளது. ஐ. தே. க. 11,646 வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இந்தத் தேர்தல் தொகுதியில் 26,507 வாக்கு வித்தியாசத்தில் ஐ. ம. சு. மு. அமோக வெற்றியீட்டியுள்ளது. இந்தச் செய்தி அச்சுக்குப் போகும் வரை கட்சிகளின் தேசியப்பட்டியல் தொடர்பான முடிவுகள் எதுவும் வெளியாகவில்லை.

நேற்று நள்ளிரவு வரை வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளின்படி, ஐ. ம. சு. மு. 127 ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது.

ஐ. தே. கட்சி 51 ஆசனங்களை மாத்திரமே எடுத்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சி 13 ஆசனங்களையும், ஜனநாயகத் தேசிய ஐந்து முன்னணியினால் ஆசனங்களை மாத்திரமே பெற முடிந்துள்ளது.

மோசடி மற்றும் குளறுபடிகள் காரணமாக வாக்களிப்பு ரத்துச் செய்யப்பட்ட நாவலப்பிட்டி, கும்புறுபிட்டி மீள் வாக்கெடுப்பு எதுவிதமான அசம்பாவிதங்களுமின்றி அமைதியாக நிறைவடைந்துள்ளது. காலை ஏழு மணிக்கு ஆரம்பமான வாக்குப் பதிவு மாலை நான்கு மணிவரை மிகச் சுமுகமாக இடம்பெற்றதாகத் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும் பொலிஸாரும் தெரிவித்தனர்.

கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த 37 வாக்குச் சாவடிகளிலும் 55% - 60% வாக்குப் பதிவு இடம்பெற்றதாக கண்டி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி கோட்டாபய ஜயரட்ன தெரிவித்தார்.

தேர்தல் மிக அமைதியாக இடம்பெற்றதாகவும் எதுவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, வாக்குகள் எண்ணும் பணிகள் நிறைவுபெறும் வரை கண்டி மாவட்டச் செயலக வளாகம் அதி உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவத்தாட்சி அதிகாரி நேற்று மாலை நடத்திய செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

நாவலப்பிட்டியில் 37 வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்குப் பதிவு நிறைவடைந்ததும் வாக்குப் பெட்டிகள் கண்டி மாவட்டச் செயலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் கடமையில் அமர்த்தப்பட்டிருந்ததாகத் தேர்தல் கடமைகளுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன தெரிவித்தார்.

12 உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் கண்டி மாவட்டத்தில் 14 அரசியல் கட்சிகளிலும் 17 சுயேச்சைக் குழுக்களிலுமாக 465 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியில் தோட்டத் தொழிலாளர்கள் சுமுகமாக வாக்களித்துள்ளனர். நாவலப்பிட்டியின் சகல இடங்களிலும் காணப்பட்ட போஸ்டர்களையும் பதாதைகளையும் பொலிஸார் கிழித்தெறிந்தனர்.

இங்கு 37 வாக்களிப்பு நிலையங்களிலும் 50,947 பேர் வாக்களிக்கவிருந்தனர். எனினும் 60% மட்டுமே வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.

இதேநேரம், திருகோணமலை கும்புறுபிட்டி வாக்களிப்பு நிலையத்திலும் மீள் வாக்குப் பதிவு சுமுகமாக நடைபெற்றுள்ளது.

இங்கு 977 பேர் வாக்களிக்கவிருந்தனர். முப்படையினரும் பொலிசாருமாக சுமார் இரண்டாயிரம் பேர் கடமையில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

கண்டி, திருகோணமலை மாவட்டங்களின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் ஒவ்வோர் அரசியல் கட்சிக்கும் உரித்தான தேசியப் பட்டியல் ஆசன விபரங்களும் வெளியிடப்படும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக