25 ஜூன், 2010

ஐநா நிபுணர்கள் குழு : ரஷ்யா கண்டனம்



ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கை தொடர்பில் நியமித்துள்ள நிபுணர்கள் குழு குறித்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் யோசனை ஒன்றைச் சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால் சமர்ப்பிக்கவில்லை என ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சின் அறிக்கை ஒன்றில் இதுகுறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் யுத்த குற்றச் சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்தாமல், சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து பான் கீ மூனுக்கு இந்த குழு ஆலோசனையை மாத்திரமே வழங்கும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

எனினும் இந்த குழு ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் அல்லது இலங்கை அதிகாரிகளின் அனுமதி இன்றி நியமிக்கப்பட்டுள்ளது.

எனவே ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அதிகாரி என்ற வகையில் பான் கீ மூன் தமது அதிகாரத்தையும் பொறுப்பையும் மீறியிருப்பதாக ரஷ்ய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இந்த குழுவுக்கு இலங்கையிலும் எதிர்ப்புகள் வெளியாகியுள்ளன. இலங்கையில் உள்நாட்டு விசாரணைக்காக மாண்பு மிக்கோர் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான குழு ஒன்று பான் கீ மூனுக்கு தேவையற்றது என ரஷ்யா தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் யுத்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பு இலங்கை அரசாங்கத்திடமே காணப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு இலங்கைக்கு வராது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணை உள்ளிட்ட விடயங்களை அது மேற்கொள்ளும் சாத்தியமில்லை என ரஷ்யா நம்புவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக