11 அக்டோபர், 2010

தங்கம் கடத்த முயன்ற இரு யுவதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

சட்டவிரோதமாகப் பெங்களூருக்குத் தங்கம் கடத்த முற்பட்ட யுவதிகள் இருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இவர்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து இவர்கள் நேற்று முன் தினம் சோதனையிடப்பட்டபோதே, கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இவர்களைக் கைது செய்தனர்.

யுவதிகள் இருவரும் தம் உடலில் மறைத்து வைத்திருந்த 475 கிராம் தங்கம் முதலில் கைப்பற்றப்பட்டது. தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்களுக்குச் சுங்க அதிகாரிகள் அபராதம் விதித்தனர். அபராதத் தொகையைச் செலுத்திய பின்னர் இவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டனர்.

விடுவிக்கப்பட்ட பின்னர் இவர்களின் நடை, உடை பாவனையில் மீண்டும் சந்தேகம் ஏற்படவே, சுங்க அதிகாரிகள் இவர்களைத் திரும்பவும் சோதனையிட்டதில் மேலும் தங்கம் கைப்பற்றப்பட்டது.

மொத்தமாக இவர்களிடமிருந்து ஒரு கிலோ 173 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. இதன் பெறுமதி 51 லட்சம் ரூபாவாகும் என மதிப்பிடப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட தங்கம் அரசுடைமையாக்கப்பட்டதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக