9 டிசம்பர், 2010

வெளிநாடுகளிலுள்ள புலி ஆதரவாளர்கள் தமது செயற்பாட்டை விரிவுபடுத்த திட்டம்

தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்வெளிநாடுகளில் உள்ள புலி ஆதரவாளர்கள் இலங்கையினுள் தமது செயற்பாடுகளை விரிவுபடுத்த திட்டமிட்டு வருகின்றனர். சர்வதேச ஒத்துழைப்புடன் உள்நாட்டில் புலிகள் இயக்கத்தை மீள கட்டியெழுப்பும் முயற்சியை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் டி. எம். ஜயரத்ன கூறினார்.

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்தினால் நீடிப்பது தொடர்பான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். தேசிய பாதுகாப்பு அமைச்சின் மீதான குழுநிலை விவாதமும் இடம் பெற்றது.

பிரதமர் மேலும் கூறியதாவது:- தனது முதலாவது பதவிக் காலத்தில் யுத்தத்தை வெற்றி கொண்ட ஜனாதிபதி தற்பொழுது தனது இரண்டாவது பதவிக் காலத்தில் பொருளாதார யுத்தத்தை வெற்றி கொள்ளும் சவாலை ஏற்றுள்ளார்.

5 துறைகளில் நாட்டை அபிவிருத்தி செய்ய மஹிந்த சிந்தனை திட்டத்தினூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யுத்தத்திற்கு முடிவு கட்டியுள்ள நிலையில் பிரதான நாடுகள் இலங்கை குறித்து கூடுதல் கவனம் செலுத்தியுள்ளன. இதனூடாக நமது நாட்டுக்கு நன்மையான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனை பொறுக்காத தேசத்துரோக சக்திகள் உலகின் ஒவ்வொரு பகுதிகளில் உள்ளன. கடந்த மாதத்தில் புலிகளின் சர்வதேச மட்ட செயற்பாடுகள் அதிகரித்திருந்தது. ஜனாதிபதியின் பிரித்தானிய விஜயத்தை தடுக்க புலி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புலிகளின் செயற்பாடு அரிகரித்து வருகிற போதும் சில மேலைத்தேய நாடுகள் இன்னும் தமது போக்கை மாற்றிக் கொள்ளாதுள்ளன. அவை இலங்கை தொடர்பில் குரோதத்துடன் நடந்து கொள்கின்றன. அத்தகைய நாடுகளுடன் பேச அவற்றின் போக்கை மாற்ற வேண்டியுள்ளது.

புலிகள் இயக்கம் ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படாத போதும் வெளிநாடுகளில் முன்னெடுக்கப்பட்டது. 50 ற்கும் மேற்பட்ட நாடுகளில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள முன்னாள் புலி உறுப்பினர்கள் மீண்டும் புலிகளுடன் தொடர்பு ஏற்படுத்து வதில்லை என உறுதியாக கூறியுள்ளனர்.

இலங்கையில் யுத்தக் குற்றச்சாட்டு இடம்பெற்றுள்ளதாக செனல் – 4 தொலைக் காட்சி மீண்டும் குற்றஞ்சாட்டி யுள்ளது. இந்த குற்றச்சாட்டினால் சர்வதேச மட்டத்தில் பாதிப்பு ஏற்படுவதால், இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

வடக்கு, கிழக்கு, கொழும்பு நகரப் பகுதியில் புலிகளும், ஆயுதங்களும் தொடர்ந்து பிடிபடுவது தொடர்ந்து இடம்பெறுகிறது.

வெளிநாடுகளில் உள்ள புலி ஆதரவாளர்கள் மீண்டும் இலங்கையினுள் தமது செயற்பாடுகளை பரப்ப திட்டமிட்டு வருவது அவர்களின் செயற்பாடுகள் மூலம் தெளிவாகிறது. அதனால், சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் உள்நாட்டில் புலிகள் இயக்கத்தை மீள கட்டியெழுப்பு வதைத் தடுக்க உடனடியாக செயற்பட வேண்டியுள்ளது.

வவுனியாவிலுள்ள இடம் பெயர்ந்தோருக் கான முகாம்களில் இருந்து கைதான 4 புலி பயங்கரவாதிகளிடமிருந்து பெற்ற தகவல்களின்படி, கிளிநொச்சியில் அமைக் கப்பட்டிருந்த வதை முகாமில் சுட்டுக் கொலை செய்து எரிக்கப்பட்ட 60 படை யினரின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

தலைமறைவாக உள்ள புலிகள் இயக்க உறுப்பினர்களை மீள இணைத்து செயற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவர்களுக்கு தலைமைத்துவம் வழங்கவும், நிதி உதவி வழங்கி ஆயுத போராட்டங்களில் ஈடுபடுத்தவும் வெளிநாடுகளில் உள்ள புலி ஆதரவாளர்கள் முயல்வது தெரிய வந்துள்ளது. இது தொடர்பிலும் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

வடக்கு, கிழக்கில் வசிக்கும் தமிழ் மக்கள் மிகவும் நல்லவர்கள். நான் பல தடவை அங்கு சென்று வந்துள்ளேன். அவர்களுடன் உரையாடியுள்ளேன். உதவிகளும் வழங்கியிருக்கிறேன். தமது சொந்த இடங்களில் மீள் குடியேற்றியது குறித்து அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக