23 செப்டம்பர், 2010

சீரற்ற காலநிலை சில தினங்களுக்கு தொடரும்






தற்போதைய சீரற்ற காலநிலை அடுத்துவரும் சில தினங்களுக்குத் தொடரும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் பிரிதிக்கா ஜயக்கொடி நேற்று தெரிவித்தார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவில் ஆகக் கூடிய மழை வீழ்ச்சி கொழும்பு மாவட்டத்தில் உள்ள மீகொட பிரதேசத்தில் 177.3 மி. மீ. என்றபடி பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது இடி, மின்னலுடன் கூடிய மழைக் காலநிலை நிலவுவதால் அதன் பாதிப்பிலிருந்து தவிர்ந்து கொள்ளுவதில் ஒவ்வொருவரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், தற்போதைய சீரற்ற காலநிலைக்கு தாழமுக்க நிலைமையே காரணம். இந்த நிலைமை அடுத்துவரும் சில தினங்களுக்கு நீடிக்க முடியும்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவில் மீகொடவில் 177.3 மி. மீ., கொழும்பில் 124.3 மி. மீ. ஹங்வெல்லவில் 91.4 மி. மீ. கட்டுநாயக்கவில் 55.6 மி. மீ. என்றபடி அதிக மழை பெய்துள்ளது. என்றாலும் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை பெய்துள்ளது.

தற்போது இடி, மின்னலுடன் மழை பெய்கின்றது. இச்சந்தர்ப்பங்களில் திறந்த வெளிகளில் இருப்பதையும், நடமாடுவதையும், குளங்களிலும், ஆறுகளிலும், நீராடுவதையும், உயரமான மரங்களுக்கு கீழே இருப்பதையும், மினிசாரப் பொருட்களைப் பாவிப்பதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

அதேநேரம் இடி, மின்னலுடன் மழை பெய்யும் போது கடும் காற்று வீச முடியும் என்பதையும் கருத்தில் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக