23 செப்டம்பர், 2010

தமிழ் மக்களின் அவல வாழ்வுக்கு தமிழ்த் தலைவர்களே காரணம் : ஈரோஸ் தலைவர்

தமிழர் விடுதலைக்கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர்கள் அன்று செய்த தவறின் காரணமாகவே வடக்கு, கிழக்கிலிருந்து 18 லட்சம் தமிழர்கள் புலம்பெயர்ந்ததுடன் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 35 ஆயிரம் இளைஞர் யுவதிகள் மண்ணோடு மண்ணாகப் புதைக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான விதவைகளும் ஊனமுற்றோரும் உருவாகினர்."

இவ்வாறு ஈரோஸ் கட்சித் தலைவரும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான இராஜநாதன் பிரபாகரன்(ஈரோஸ் பிரபா) குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு ஈரோஸ் தலைமையகத்தில் நேற்று (22.09.2010) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இக்கருத்தை முன்வைத்தார். இச்சந்திப்பில் தொடந்து பேசிய அவர்,

"எமது தலைவர்கள் காட்டிய பிழையான வழிகாட்டல்களினால் 30 வருடகால எமது கலை, கலாசாரம், கல்வி உட்பட வாழ்வாதாரமும் பின்னோக்கியுள்ளது.

அத்தகைய பிழைகளை ஒருபோதும் ஈரோஸ் அமைப்பு விடப்போவதில்லை. வெறுமனே அரசுக்கெதிராக கூச்சல் போடுவதால் தமிழ்ப் பேசும் மக்கள் எதனையும் அடைந்து விடமுடியாது. அதனால் தான் எமது கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வருகிறது.அதற்காக நாங்கள் அரசின் கைக்கூலிகள் அல்லர். எமக்கு அரசியல் இரண்டாம் கட்டம்தான்.

தமிழ் பேசும் மக்களின் தேசியம் வெல்லப்பட வேண்டுமென்பதுதான் எமது இலக்கு. கௌரவமான, காத்திரமான அரசியல் அதிகாரம் வேண்டும். அதற்காகவே நாங்கள் தேர்தல்களில் இறங்குகிறோம். எதிர்காலத்திலும் தேர்தல்களைச் சந்திக்க தயாராகவுள்ளோம்.

நாம் ஒருபோதும் தமிழ் மக்கள் என்று மாத்திரம் சிந்திப்பதில்லை வடக்கு கிழக்கில் எந்தத் தீர்வாக இருந்தாலும்,அது தமிழ்ப் பேசும் மக்களுக்கானதாக இருக்கவேண்டும்"என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக