12 ஆகஸ்ட், 2010

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் - காங்கிரஸ் சபை உறுப்பினர்கள்

இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்படும் ஆணைக்குழுக்கள் தொடர்பில் நம்பிக்கை கொள்ள முடியாது என குறித்த காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரனுக்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளனர்.

அரசாங்கத்தினால் நியமிக்கப்படும் ஆணைக்குழுக்களின் விசாரணை நடவடிக்கைகள் காலம் தாழ்த்தப்படுவதாகவும், தேவையற்ற வகையில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தலையீடுகளினால் சில அதிகாரிகள் ஆணைக்குழுவிலிருந்து விலகியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபையை ஆதாரம் காட்டி இந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்க காங்கிரஸைச் சேர்ந்த 57 உறுப்பினர்கள் இந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இரண்டு தரப்பினராலும் குற்றச் செயல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமைக்கான ஆதாரங்கள் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும், இலங்கையில் நிரந்தர சமாதானத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் குறித்த காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் ஜனாதிபதி பரக் ஒபாமாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக