12 ஆகஸ்ட், 2010

எதிர்பார்ப்புக்கு மத்தியில் நல்லிணக்க ஆணைக்குழு எதிர்நோக்கும் சவால்கள்!




இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியிலும் அதற்குப் பின்னரும் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு அரசாங்கத்தினால் ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாடுகளின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று அதன் முதல் அமர்வுகள் கொழும்பில் ஆரம்பமாயின.

கற்றுக்கொண்ட பாடங்கள் - நல்லிணக்க ஆணைக்குழு எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆணைக்குழுவுக்கு முன்னாள் சட்டமா அதிபர் சி.ஆர்.டி.சில்வா தலைமை வகிக்கிறார்.

'போர்க்குற்றம்' என்ற வார்த்தை கடந்த காலங்களில் பெரிதும் பேசப்பட்டது. அதிலும் குறிப்பாக ஆதாரபூர்வமானவை எனக் குறிப்பிட்டு வெளிநாட்டு ஊடகங்களால் வெளியிடப்பட்ட காணொளிக் காட்சிகள் பரப்பை ஏற்படுத்தியிருந்தன.

இலங்கை இராணுவ வீரர்களால் தமிழ் இளைஞர்கள் நிர்வாணமாக்கிக் கொலை செய்யப்படுவதாகக் கூறி செனல்-4 என்ற தொலைக்காட்சி நிறுவனம் காணொளிக் காட்சியை ஒளிபரப்பியது.

அது உலகநாடுகளிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் ஓங்கி எதிரொலிக்க ஆரம்பித்தன.

எனினும் அதில், ஒளிக்காட்சிக்கும் ஒலியமைப்புக்கும் இடையில் பல்வேறு வித்தியாசங்கள் உண்டு எனக் குறிப்பிட்ட இலங்கை அரசாங்கம் விசேட குழுவொன்றை நிறுவி ஆதாரங்கள் பலவற்றை முன்வைத்து காணொளி பொய்யானது எனக் கூறியது.

அதன்பின்னரும் கூட உலகநாடுகளின் பிடியிலிருந்து விலகமுடியாமல் இருந்ததுடன் நாளுக்கு நாள் அழுத்தங்கள் அதிகரித்தவண்ணமே இருந்தன.

செனல்-4 தொலைக்காட்சியானது தனது காணொளி உண்மையானது என மீண்டும் அறிவித்தது.

இதனிடையே இறுதிக்கட்ட யுத்தத்தின்போது வெள்ளைக்கொடி ஏந்திவந்த புலி உறுப்பினர்களைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கொலை செய்ய உத்தரவிட்டதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இலங்கையிலிருந்து வெளியாகும் ஆங்கில வார இதழொன்றுக்கு சரத்பொன்சேகா வழங்கிய செவ்வியில் இவ்வாறு கூறியதாக அவர் மீது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

அரசுக்கு வலியுறுத்து

அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் சில, இந்த விடயம் குறித்து தீவிரமாக ஆராயப்பட வேண்டும் என இலங்கை அரசை வலியுறுத்தியிருந்தன.

இவ்வாறானதொரு நிலையில் செனல்-4 தொலைக்காட்சியினால் மற்றுமொரு அதிர்ச்சி மிக்க காணொளி வெளியிடப்பட்டது.

தமிழ் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் காயப்படுத்தி கொலை செய்வதாக அந்தக் காட்சி அமைந்திருந்தது.

எனினும் இலங்கையின் நன்மதிப்புக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செய்யப்படும் திட்டமிட்ட நடவடிக்கை இது என அரசாங்கம் அதற்கும் மறுப்புத் தெரிவித்திருந்தது.

இத்தகைய பின்னணியில், ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் பான்கீ மூனின் நேரடித் தலையீட்டின் கீழ் சர்வதேச விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமைச்சர் விமல் வீரவன்ச உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். கொழும்பிலுள்ள .நா. அலுவலகம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

விசாரணை ஆரம்பம்

நிலைமை இவ்வாறிருக்கும்போது, ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு நேற்று தனது விசாரணைளை ஆரம்பித்துள்ளது.

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற ஆட்கடத்தல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அந்த ஆணைக்குழு விசாரணை அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்ததுடன் விடயம் நிறைவுக்கு வந்துவிட்டது. ஆனால் கடத்தப்பட்டோரின் குடும்பங்களுக்குரிய நிவாரணங்கள் எதுவும் அரசினால் பரிந்துரைக்கப்படவில்லை.

இவ்வாறான செயற்பாடுகளைத் தவிர்த்து முறையான விசாரணைகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட வேண்டும்.

வெறுமனே வார்த்தைகளால் விசாரணை,அறிக்கை என்றில்லாமல் நியாயத்தையும் சமநிலையையும் நோக்கியதான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.

அவப்பெயரைச் சுமப்பதற்கு தனி நபருக்கோ அரசாங்கத்துக்கோ விருப்பமில்லை. நியாயமான முறையில் சகலதும் நடைபெற்றிருப்பின் விசாரணைகளை முறையாக நடத்துவதற்கு அஞ்சத்தேவையில்லையே?

ஆதலால், இந்த ஆணைக்குழு முன்வைக்கும் தீர்மானங்களின் அடிப்படையிலேயே தான் கறுப்புப் புள்ளி அகற்றப்படுமா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும்.

மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாய் இது அமைந்துவிடக் கூடாது என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக