12 ஆகஸ்ட், 2010

உலகில் 120 கோடி இளைய தலைமுறையினர் ஐ.நா. சர்வதேச இளைஞர் வருடம் இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்திய சர்வதேச இளைஞர் வருடம் இன்று 12ம் திகதி ஆரம்பமாகிறது. இதன் தொனிப்பொருள் ‘சம்பாஷணையும் பரஸ்பர புரிந்துணர்வும்’ என்பதாகும். இளைஞர் வருடம் 2011 ஓகஸ்ட் 11ம் திகதி நிறைவு பெறும்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சர்வதேச இளைஞர் வருடத்தை பிரகடனம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றிய ஐ.நா பொதுச்சபை, இந்த நிகழ்ச்சியைக் குறிக்கும் வகையில் உள்ளூர் மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு உலகளாவிய ரீதியில் அரசுகளையும் சிவில் சமூகங்களையும், தனிநபர்களையும் கோரி நின்றது.

சர்வதேச இளைஞர் ஆண்டானது பல சந்ததிகள், கலாசாரங்கள், மதங்கள், நாகரிகங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் சமாதான கோட்பாடுகளை ஊக்குவித்து மனித உரிமைகளுக்கும் ஒருமைப்பாட்டுக்கும் மதிப்பளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தீவிர வறுமை, பட்டினி போன்றவை முதற்கொண்டு தாய்சேய் மரணம், கல்வி, சுகாதார பராமரிப்பை பெறுவதற்குரிய வசதியீனங்கள் போன்ற சமூகப் பிரச்சினைகளுக்கு 2015ம் ஆண்டளவில் தீர்வுகாண முனையும் ஐ.நா. மில்லேனிய அபிவிருத்தி இலக்குகளை அடைதல் உள்ளடங்கலாக முன்னேற்றத்தை போஷிப்பதற்கு தம்மை அர்ப்பணித்துக் கொள்ளுமாறு இளைஞர் ஆண்டு இளைய தலைமுறையை ஊக்குவிக்கிறது.

15 முதல் 24 வரையிலான வயதெல்லைக்கு உட்பட்டவர்களை ஐக்கிய நாடுகள் சபை இளைய தலைமுறையாக வரையறை செய்கிறது. சமகாலத்தில் உலக சனத்தொகையின் 18 சதவீதமானவர்கள் அல்லது 120 கோடி மக்கள் இளைய தலைமுறையினர்.

இவர்களில் வளர்முக நாடுகளைச் சேர்ந்த 87 சதவீதமானவர்கள் வளங்கள், சுகாதாரப் பராமரிப்பு, கல்வி, பயிற்சி, தொழில் வாய்ப்பு, பொருளாதார வாய்ப்புக்கள் போன்றவற்றைப் பெறுவதற்குரிய வசதியீனங் களால் சவால்களை எதிர்கொள்கிறார்கள்.

சகல நாடுகளையும் சேர்ந்த இளைஞர், யுவதிகள் அபிவிருத்தி, ஆக்கபூர்வமான சமூக மாற்றம், தொழில்நுட்ப ரீதியான புதுமுயற்சிகள் போன்றவற்றிற்குரிய பாரிய மனித வளங்களாகத் திகழ்கிறார்கள் என்பதை ஐக்கிய நாடுகளின் அங்கத்துவ நாடுகள் அங்கீகரிக்கின்றன. இவர்களின் கொள்கைகள், பலம், தொலைநோக்கு போன்றவை தொடர்ச்சியான சமூக அபிவிருத்திக்கு அத்தியாவசியமானவை.

இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் பயனாளிகளாக மாத்திரம் இல்லாமல் மாற்றத்திற்குரிய வினைத்திறன் மிக்க முகவர்களாக இருக்கிறார்கள். அர்ப்பணிப்பு, ஆர்வம், ஆக்கத்திறன் ஆகிய பண்புகளைக்கொண்ட இளைஞர், யுவதிகள் சமூகத்தின் சவால் மிக்க விவகாரங்களை எதிர்கொண்டு அபிவிருத்தியில் பங்களிப்பு நல்குகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக