21 ஜனவரி, 2011

அவசரகாலச் சட்ட பிரேரணை மீது விவாதமின்றி இன்று வாக்கெடுப்பு

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை, விவாதமின்றி இன்று வெள்ளிக்கிழமை வாக்கெடுப்புக்கு விடப்படவிருக்கின்றது. சபாநாயகர் தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இம் முடிவு எட்டப்பட்டது.

பாராளுமன்றத்தில் இன்று முதியோர் உரிமைகளை பாதுகாத்தல் (திருத்த), மத்தியஸ்த சபைகள் (திருத்த) ஆகிய சட்டமூலங்கள் தொடர்பிலான விவாதம் நடத்தப்படும்.

பாராளுமன்றம் இம் மாதத்தில் இன்று மட்டுமே கூடவிருக்கின்றது இந்நிலையில், தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்க சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலில் கடந்த 18 ஆம் திகதி கையொப்பமிட்டுள்ளார்.

அந்த வர்த்தமானி அறிவித்தல் 10 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதனால் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீது இன்று வாக்கெடுப்பை நடத்தி, பிறிதொரு தினத்தில் விவாதத்தை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக