29 நவம்பர், 2010

இலங்கை - பாகிஸ்தான் தலைவர்கள் இருதரப்பு பேச்சு நான்கு முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்து

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், பாகிஸ்தான் ஜனாதிபதி ஆஸிப் அலி சர்தாரிக்குமிடையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இரு தரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றதுடன் இரு நாடுகளுக்குமிடை யிலான நான்கு முக்கிய உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டன.

ஒரு மணித்தியாலம் வரை நீடித்த மேற்படி பேச்சுவார்த்தையையடுத்து இரு நாடுகளினதும் பிரதிநிதிகள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தையொன்றும் இடம்பெற்றது.

இரு நாட்டுத் தலைவர்களின் பேச்சுவார்த்தையின் போது பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் தமது கவலையினைத் தெரிவிப்பதாக பாகிஸ்தானிய ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அதேவேளை, இலங்கை மக்களை பயங்கரவாதத்திலிருந்து மீட்டெடுத்தமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ துலைமையிலான அரசாங்கத்துக்குத் தமது பாராட்டுக்களைத் தெரிவித்த அவர்; பிராந்திய ரீதியில் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு இலங்கையின் அனுபவம் மிக முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கிடையில் வர்த்தக நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பில் இரு நாட்டுத் தலைவர்களும் கவனம் செலுத்தியதுடன் இலங்கையின் தேயிலை மற்றும் மாணிக்கக் கற்களை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்வதற்குள்ள வாய்ப்புகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டன.

இலங்கையின் மாணிக்கக் கல் தொழில் துறையில் உபயோகப்படுத்தப்படும் தொழில் நுட்ப நுணுக்கங்களை பாகிஸ்தானுக்குப் பெற்றுக் கொடுக்குமாறு பாகிஸ்தான் ஜனாதிபதி கேட்டுக் கொண்டதையடுத்து இலங்கை ஜனாதிபதி அதனைக் கவனத்திற் கொண்டார்.

இலங்கையின் மருத்துவத்துறை ஈட்டியுள்ள வளர்ச்சி தொடர்பில் பாகிஸ்தான் ஜனாதிபதி தமது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் தாதியருக்கு பயிற்சிகளை வழங்கக் கூடிய தாதியர்களை இலங்கையிலிருந்து தமது நாட்டுக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் அவர் இலங்கை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

அத்துடன் இலங்கையிலிருந்து ஆங்கிலம் மற்றும் கணித ஆசிரியர்களின் ஒத்துழைப்பினை பாகிஸ்தானின் கல்வித் துறைக்கு பெற்றுக்கொள்வது சம்பந்தமாக பாகிஸ்தான் ஜனாதிபதி முன்வைத்த வேண்டுகோள் தொடர்பிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவனம் செலுத்தினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமது இரண்டாவது பதவி ஏற்போடு பாகிஸ்தான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் அமைந்துள்ளதால் இரு நாடுகளுக்குமிடையி லான நல்லுறவுகள் மேலும் வலுப்பட இது சிறந்த வாய்ப்பாகும் எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன் அமைதிச் சூழல் நிறைந்த இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வ தற்காக பாகிஸ்தான் முதலீட்டாளர்களை அனுப்புமாறு கேட்டுக்கொண்ட ஜனாதிபதி; அதற்கான வசதிகளை செய்து கொடுப்பதாகவும் தெரிவித்தார்.

பாகிஸ்தான் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்; இலங்கையில் எதிர்கால தலைமுறையினரை போதைப் பொருளிலிருந்து பாதுகாக்க இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு விசேட பாராட்டுக்களைத் தெரிவித்த பாகிஸ்தான் ஜனாதிபதி; பிராந்திய ரீதியில் போதை உபயோகத்தை ஒழிப்பதற்கு பிராந்திய நாடுகள் இணைந்து செயற்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

இரண்டு நாடுகளுக்குமிடையில் வங்கி நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பிலும் இரு நாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடினர்.

இருதரப்பு பேச்சுவார்த்தைகளையடுத்து இரு நாடுகளுக்குமிடையில் நான்கு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டன.

இதன்படி ராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுகளை வைத்திருப்போருக்காக விசா இன்றி இரு நாடுகளுக்குமிடையில் பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புகள்.

இரு நாடுகளுக்குமிடையில் விவசாயம் சம்பந்தமான ஒத்துழைப்பு விடயங்களில் புரிந்துணர்வு.

சுங்க நடவடிக்கைகளில் தனித்துவமான நிர்வாக ரீதியான ஒத்துழைப்பு.

கலை மற்றும் உருவாக்கத்திறன் தொடர்பான ஒத்துழைப்பினை மேம்படுத்தல் போன்ற நான்கு உடன்படிக்கைகளில் இரு நாட்டுத் தலைவர்களினதும் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன.

மேற்படி உடன்படிக்கைகளில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் விவசாய அமைச்சின் செயலாளர் கே. ஏ. கருணாதிலக்க, சுங்கப் பணிப்பாளர் நாயகம் சுதர்மா கருணாரத்ன, நுண்கலைப் பல்கலைக்கழக உபவேந்தர் ஜயசேன கோட்டகொட ஆகியோரும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் சார்பில் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மக்டூம் ஷா மஹ்மூத் குரேஷி, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் லியாகி பலோச் ஆகியோரும் கைச்சாத்திட்டனர்.

பாகிஸ்தான் தூதுக் குழுவில் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மக்டூம் ஷா மஹ்மூத் குரேஷி, பாதுகாப்பு அமைச்சர் அகமட் முக்தார், நிதியமைச்சர் சைப் முரப் அலி ஷா, உயர்ஸ்தானிகர் கூமா லியாகி பலோச், ஜனாதிபதியின் பிரதம செயலாளர் எம். சல்மான் பாரூக், மேலதிக செயலாளர் பாரூக் அமில், பாதுகாப்பு செயலாளர் சையிட் மொகமட் அட்னன் ஆகியோர் பங்கேற்றனர்.

இலங்கையின் சார்பில் அமைச்சர்கள் ஜீ. எல். பீரிஸ், ஏ. எச். எம். பெளஸி, கலாநிதி சரத் அமுனுகம, பந்துல குணவர்தன, டி. பி. ஏக்கநாயக்க, மஹிந்த யாப்பா அபேவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பிரதம பதவிநிலை அதிகாரி காமினி செனரத் ஆகியோர் பங்கேற் றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக