29 நவம்பர், 2010

இலங்கையை வெளிநாட்டவர்களுக்கு தாரைவார்க்கும் வரவு செலவுத் திட்டம் : ஜே.வி.பி

உலகின் விமர்சனத்திற்குள்ளான புதிய லிபரல்வாத, காலனித்துவ நாடாக இலங்கையை வெளிநாட்டவர்களுக்கு "தாரைவார்க்கும்' வரவு செலவுத் திட்டத்தையே அரசாங்கம் முன்வைத்துள்ளது என்று ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சாட்டினார்.

பௌத்த குருமார்கள் முன்னிலையில் உறுதியளித்த சம்பள உயர்வை வழங்காத ஜனாதிபதி ஒரு "பொய்காரர்' என்றும் அவர் தெரிவித்தார். பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ரில்வின் சில்வா இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மக்களுக்கு சலுகைகளை வழங்காத அரச ஊழியர்களுக்கு உறுதியளித்த ரூபா 2500 சம்பள உயர்வை வழங்காத வரவு செலவு திட்டம் என்பதே எமக்கு மேலோட்டமாகத் தெரியும் விடயமாகும். ஆனால் இதனை ஆழமாக ஆராய்ந்தபோது நாட்டின் பொருளாதாரத்தை வெளிநாட்டவர்களுக்கு தாரைவார்க்கும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை செயல்படுத்தும் வரவு செலவுத் திட்டம் என்பதே உண்மையாகும்.

முதலீட்டு நிதியை வெளிநாட்டவர்களுக்கு ஏற்ற விதத்தில் இலகுவாக்கி நிதிச் சட்டங்களையும் அவர்களுக்கு சார்பாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

எனவே உலக நாடுகளிலிருந்து எந்தத் "திருடர்களும்' இங்கு வந்து முதலீடு செய்யும் ஆபத்தான நிலை தோன்றியுள்ளது. அமைச்சுப் பதவிகளுக்காக சிறப்புரிமைகளுக்காகவும் தேசப் பற்றுள்ள தேசிய பொருளாதாரத்தை கட்டிக் காக்கும் அரசாங்கம் என புகழ் பாடிக் கொண்டிருப்போர் ரணில் விக்கிரமசிங்கவை விட புதிய லிபரல்வாதக் கொள்கையை முன்னெடுக்கும் ஜனாதிபதி தொடர்பில் மௌனம் சாதிக்கின்றனர்.

நிதியமைச்சின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவே உலகின் சிறந்த லிபரல்வாதி ஜனாதிபதி என புகழ் பாடியுள்ளார். இன்று விவசாயம் புறம்தள்ளப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக சூதாட்டம் சட்டமாக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஹிக்கடுவை கண்காட்சி, ஐபா என பல்வேறு கலாசார சீரழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. "மதுவுக்கு முற்றுப்புள்ளி' எனக் கூறும் அரசாங்கம் நாடு முழுவதும் மதுபானச் சாலைகளை ஆரம்பிக்கின்றது.சூதாட்ட வலயங்கள் அமைக்கப்படுகின்றன. சுற்றுலாத்துறைக்கான பொருளாதார அபிவிருத்தி என்பது எமது நாட்டுக்கு பொருந்தாத விடயமாகும். இது நாட்டில் கலாசார சீரழிவை ஏற்படுத்தும்.

வெளிநாட்டவர்களை சந்தோஷப்படுத்தி உறவினர்களுக்கு உழைப்பதற்கு வழிவகுக்கும் அனைத்து திட்டங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக