29 நவம்பர், 2010

அரசியல் இணக்கப்பாட்டை வளர்ப்பதற்கு அரசாங்கத்துக்கு உதவத் தயார் : அமெரிக்க தூதுவர் பற்றீஷியா

பாதுகாப்பை வலுப்படுத்தவும் பொருளாதார அபிவிருத்தியை மேலும் விருத்தி செய்யவும் அரசியல் இணக்கப்பாட்டை வளர்ப்பதற்கும் இலங்கை அரசாங்கத்துக்கு உதவ அமெரிக்கா தயாராகவுள்ளது என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பற்றீஷியா ஏ. பியூடெனிஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலகம் பூராக ஐக்கிய அமெரிக்காவின் உறவுகளுக்கு ஜீவனூட்ட ஜனாதிபதி ஒபாமாவும் இராஜாங்க செயலாளர் ஹிலரி ரொட்ஹம் கிளின்டனும் முன்னுரிமை கொடுத்துள்ளனர்.

அவர்கள் தற்போதைய அமெரிக்க உறவுகளுக்கு வலுவூட்டவும் அன்றாட சவால்களை முறியடிக்கக் கட்டியெழுப்பப்படும் உறவுகளுக்கு அதாவது காலநிலை மாற்றங்கள், அணு ஆயுத அச்சுறுத்தல்கள், நோய் மற்றும் வறுமை ஒழித்தல் போன்ற சவால்களை புதிய உறவுகளுக்கு வலுவூட்டவும் பாடுபடுகின்றனர். இந்த முயற்சிகளில் நாமும் ஒரு பங்காளி என்பதையிட்டு இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க தூதுவர் என்ற முறையில் நான் பெருமைப்படுகிறேன்.

பாதுகாப்பை வலுவூட்டவும் பொருளாதார அபிவிருத்தியை மேலும் விருத்தி செய்யவும் அரசியல் இணக்கப்பாட்டை வளர்ப்பதற்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இலங்கை வாசிகளுக்கும் உதவ ஐக்கிய அமெரிக்கா மிகவும் பாடுபட்டுள்ளது.

இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக நடவடிக்கைகளை மேலும் விருத்தி செய்ய அமெரிக்க வர்த்தகக் குழுவை வரவழைத்தோம். தமது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பும் முகமாக மோதல் பிரதேச மக்களுக்கு புதுச் செயல்திறன்களை பயிற்றுவிப்பதற்காக எமது அபிவிருத்தி முகவரான யுஎஸ்எயிட் பல உள்ளூர் நிறுவனங்களுடன் தோழமை பூண்டுள்ளது.

இராணுவத்தின் கண்ணிவெடி அகற்றும் பிரிவிற்கு நாம் வழங்கும் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியின் முதல்கட்ட உதவி கடந்த வாரம் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அமெரிக்க 180 மில்லியன் அமெரிக்க டொலரிலான உதவிகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

கடந்த சில நாட்களாக ஊடகத் துறையில் மிகவும் அதிகமாகப் பேசப்படும் விடயமாக அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் கணினியிலிருந்து களவாடப்பட்ட ஆவணங்கள் அமைந்துள்ளது. இந்த ஆவணங்களின் நம்பகத்தன்மையை என்னால் உறுதி செய்ய முடியாது. ஆயினும் இரகசியமாக வைத்திருக்க வேண்டிய தகவல்கள் வெளியாகியமை சம்பந்தமாக ஐக்கிய அமெரிக்காவின் ஆழ்ந்த அனுதாபத்தை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்தச் செயலை நாம் கண்டிக்கின்றோம்.

தூதுவர்கள் தம்மைச் சந்திப்பவர்களிடம் நேர்மையான பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது. ஆகையால் பேச்சுவார்த்தையில் அடங்கியவை இரகசியமாக அமைய வேண்டும். ஏனைய அரசாங்கங்களுடன் சர்வதேச உறவுகள் பற்றி கலந்துரையாடும் போது அது நேர்மையானதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சமாதானம், பாதுகாப்பு மற்றும் சர்வதேச உறுதித் தன்மையைப் பேண முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக