19 அக்டோபர், 2010

முருங்கன் சிறுவர் இல்லத்தை மூட மன்னார் நீதிமன்றம் உத்தரவு

மன்னார் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிக்குக் கிடைத்த சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாட்டினைத் தொடர்ந்து, முருங்கன் பகுதியில் அமைந்துள்ள என் இரட்சகர் சிறுவர் இல்லத்தை உடனடியாக மூடுமாறு மன்னார் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் நேற்று உத்தரவிட்டார்.

நீதிமன்றத்திற்குக் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இது குறித்து மன்னார் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் நேற்று மன்னார் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிகளுக்கு விடுத்த உத்தரவையடுத்து, சிறுவர் இல்லம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக தெரிய வருவதாவது :

மன்னார் முருங்கன் பகுதியில் அமைந்துள்ள என் இரட்சகர் சிறுவர் இல்லத்தில் 18 வயதுக்குட்பட்ட பல சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இதனை மத போதகர் ஒருவர் நடத்தி வருகின்றார்.

சிறுவர் இல்ல சிறுமிகள் சிலரை மன்னார் பெரியகமம் பகுதியில் உள்ள தனது வீட்டில் வேலை செய்வதற்காக இவர் அழைத்துச் சென்றுள்ளார்.

இதன்போதே அச்சிறுமிகள் மீது துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டுள்ள 15 வயதான சிறுமி ஒருவர், மன்னார் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிகளினூடாக மன்னார் மாவட்ட நீதி மன்றத்திற்கு தெரியப்படுத்தினார். இதே விதமாக மேலும் ஒரு சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமையும் தெரியவந்துள்ளது.

விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் மாவட்ட நீதிபதி, சம்பந்தப்பட்ட இரு சிறுமிகளையும் வைத்திய பரிசோதனைக்குட்படுத்துமாறும், இல்லத்தின் சிறுவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி அதனை மூடுமாறும் உத்தரவிட்டார்.

இதற்கமைவாக சிறுவர் இல்லம் நேற்று முடப்பட்டது.

சந்தேக நபரான மத போதகர் தலைமறைவாகியுள்ளார். மன்னார் பொலிஸார் அவரைத் தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக