8 செப்டம்பர், 2010

ராணுவ ஆட்சிக்கு வழி : பொன்சேகா ஆவேசம்







கொழும்பு : இலங்கை பார்லிமென்டில், அதிபர் ராஜபக்ஷேவை மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கும் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்படும் பட்சத்தில் அதுதான், ஜனநாயகம் என்கிற சவப்பெட்டி மீது அடிக்கப்படும் கடைசி ஆணி என, இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைமை தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மேலும், இது போன்ற சட்டத் திருத்தங்கள் ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.இலங்கையில் விடுதலைப்புலிகளை ஒழித்ததில் முக்கிய பங்கு வகித்தவர் முன்னாள் ராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகா. இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிய ராஜபக்ஷே அரசு, அவரை கைது செய்து சிறையில் அடைத்தது.இந்நிலையில், இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்றுள்ள ராஜபக்ஷேவை, மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கும் அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா, இலங்கை பார்லிமென்டில் தாக்கலாக உள்ளது.இந்த மசோதாவிற்கு சரத் பொன்சேகா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தற்போது இலங்கை எம்.பி.,யாக உள்ள அவர் மேலும் கூறியதாவது:இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் அதுதான், ஜனநாயகத்தின் இருண்ட நாள். இந்த சட்டத் திருத்தம், ஜனநாயகம் என்கிற சவப்பெட்டி மீது அடிக்கப்படும் கடைசி ஆணி. இந்த திருத்த மசோதா விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தன்னலம் கருதி சில எம்.பி.,க்கள் இந்த மசோதாவை ஆதரிக்கின்றனர். இவ்வாறு சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக