11 மார்ச், 2010

பொன்சேகாவுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க இரு இராணுவ நீதிமன்றங்கள்




மேஜர் ஜெனரல் எச்.எல்.வீரதுங்க தலைமையில் மூவர் கொண்ட குழுமம் நியமனம்

* கடற்படை தலைமையகத்தில் விசாரணை

* 16ம், 17ம் திகதிகளில் முதல் அமர்வுகள்

முன்னாள் இராணுவ தளபதியும், பாதுகாப்பு படைகளின் முன்னாள் பிரதம அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்கவென மூவர் கொண்ட இரண்டு இராணுவ நீதிமன்றங்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் பரிந்துரைக்கு அமைய முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த இரு இராணுவ நீதிமன்றங்களை நியமித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

எதிர்வரும் 16ம், 17ம் திகதிகளில் கடற்படைத் தலைமையகத்தில் இந்த நீதிமன்றங்களின் ஆரம்ப அமர்வுகள் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சரத் பொன்சேகாவுக்கு எதிராக ஏழு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் இந்த ஏழு குற்றச்சாட்டுகளும் இரண்டு வகைகளில் இரு நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இராணுவ சட்டதிட்டங்களுக்கு அமைய நியமிக்கப்பட்டுள்ள நீதிமன்றங்கள் இரண்டிற்கும் மேஜர் ஜெனரல் தரங்களைச் சேர்ந்த மூவர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், கடற்படையின் ரியர் அட்மிரல் தரத்தை சேர்ந்த ஒருவர் நீதிபதி, அட்வகேட் ஜெனரலாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

சரத் பொன்சேகா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைக்காக நியமிக்கப்பட்ட இராணுவ நீதிமன்றங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்றுப் பிற்பகல் நடைபெற்றது. தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் இராணுவப் பேச்சாளர் மேலும் விபரிக்கையில்,

சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய சாட்சியங்களின் தொகுப்பு இராணுவத் தளபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அதனை ஆராய்ந்த அவர் இராணுவ நீதிமன்றத்தை நியமிக்குமாறு முப்படைகளின் தளபதியான ஜனாதிபதியிடம் பரிந்துரைத்தார்.

இதற்கமைய, இரண்டு இராணுவ நீதிமன்றங்களை நியமித்த ஜனாதிபதி மூவர் அடங்கிய குழுமத்தை நியமித்துள்ளார். இதன்படி, இந்த குழுமத்தின் தலைவராக மேஜர் ஜெனரல் எச்.எல் வீரதுங்கவும், உறுப்பினர்களாக மேஜர் ஜெனரல் ஏ.எல்.ஆர். விஜேதுங்க, மேஜர் ஜெனரல் டி.ஆர்.ஏ.பி. ஜயதிலக்க ஆகியோரும், இந்த நீதிமன்றத்தின் நீதிபதி அட்வகேட்டாக கடற்படையைச் சேர்ந்த ரியர் அட்மிரல் டபிள்யூ. டபிள்யூ. ஜே.எஸ். பெர்னாண்டோவும் நியமிக்கப்பட்டுள்ளார் என்றார்.

ஒரே குழுமமே இரண்டு நீதிமன்றங்களிலும் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது. இதன்படி பின்வரும் இரு பிரதான வகைகளில் விசாரிக்கப்படும்

(1) சேவையில் இருந்து கொண்டு அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டமை;

(2) இராணுவத்திற்கான கொள்வனவு மற்றும் இராணுவ நடைமுறையை மீறியமை;

மேற்படி இரண்டு வகையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

சரத் பொன்சேகாவுக்கு எதிராக ஏழு குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் முதலாவது வகையின் கீழ் மூன்று குற்றச்சாட்டுகளும் இரண்டாவது வகையின் கீழ் நான்கு குற்றச்சாட்டுகள் என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 16ம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் நடைபெறவுள்ள முதலாவது நீதிமன்றின் முதலாவது அமர்வின் போது சேவையில் இருந்து கொண்டு அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டார். என்ற வகையில் விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளது.

இராணுவ சட்டத்தின் 124 வது பிரிவின் கீழ் ஒரு குற்றச்சாட்டு, 102/1வது பிரிவின் கீழ் இரண்டு குற்றச்சாட்டுகளுமாக மொத்தம் மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள இரண்டாவது நீதிமன்றின் முதலாவது அமர்வின் இராணுவ சட்டத்திட்டங்களை மீறியும், ஆலோசனைகளை கருத்திற் கொள்ளாமலும் கொள்வனவு செய்த நடவடிக்கையில் ஈடுபடல் என்ற வகையில் விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளன.

இராணுவ சட்டத்தின் 109 (ரி) பிரிவின் கீழ் நான்கு குற்றச்சாட்டுகள் தொடர்பில் இங்கு விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

தற்போது நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழுமத்திற்கே ஆட்சேபனை தெரிவிக்கும் பட்சத்தில் நியமிக்கவென மேலதிகமாக மேலும் நால்வர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சகல நீதிமன்ற அமர்வுகளும் ஒலி, ஒளி பதிவுகள் செய்யப்படும் என்றும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக