11 மார்ச், 2010

முறைகேடு புகார் வரவில்லை நித்யானந்தா மீது நடவடிக்கை இல்லை; கர்நாடக அரசு அறிவிப்பு




குற்றச்சாட்டு கூறப்பட்ட நித்யானந்தா சாமியாரின் ஆசிரமம் கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள பிடுதி என்ற இடத்தில் இருக்கிறது. எனவே நித்யானந்தா பற்றி கூறப்பட்டுள்ள புகார் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்குகள் கர்நாடக போலீசுக்கு மாற்றப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் அறிவித்தார். வழக்குகள் கர்நாடக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் நித்யானந்தா ஆசிரமம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது என்று சிலர் பிரச்சினையை கிளப்பினார்கள். எனவே ராம்நகர் மாவட்ட கலெக்டர் இதுகுறித்து விசாரணை நடத்தினார்.

முறைப்படி நிலம் அளந்து சரி பார்க்கப்பட்டது. நிலம் தொடர்பான ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டன. அப்போது சாமியாரின் ஆசிரமம் அமைந்துள்ள இடம் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலம் அல்ல. தனியாரிடம் இருந்து வாங்கப்பட்டது என தெரிய வந்தது.
சாமியார் மீது அவரது முன்னாள் சீடர் லெனின் தமிழக போலீசாரிடம் கொடுத்த புகார் மனுவில் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். ஆனால் யாரும் நித்யானந்தா மீது கர்நாடக போலீசாரிடம் எந்த புகாரையும் கொடுக்க வில்லை. எனவே பெங்களூர் போலீசார் சாமியார் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.

இதுகுறித்து கர்நாடக மாநில உள்துறை மந்திரி ஆச்சார்யா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நித்யானந்தா மீது தமிழக போலீசார் பதிவு செய்ததாக கூறப்படும் வழக்கு எதுவும் கர்நாடக போலீசுக்கு மாற்றப்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. அவர் மீது கர்நாடகத்தில் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை.

எனவே நித்யானந்தா மீது நடவடிக்கை எடுக்க காரணம் எதுவும் இல்லை. அவரது ஆசிரமம் அரசு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டதா? என்று ராம்நகர் மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தினார். அதிலும் நித்யானந்தா தவறு செய்யவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக