29 செப்டம்பர், 2010

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கும் நிகழ்வுகள் இன்று வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் நடைபெறுகின்றன.



புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் டியூ குணசேகர இந் நிகழ்வுகளில் கலந்து கொண்டு நஷ்டஈடுகளை வழங்கவுள்ளார்.

இதற்கிணங்க முல்லைத்தீவில் 150 குடும்பங்களுக்கும், வவுனியாவில் 30 குடும்பங்களுக்கும் இன்று நஷ்ட ஈடுகள் வழங்கப்படுகின்றன. இன்று காலை வவுனியாவிலும், பிற்பகல் முல்லைத்தீவிலும் நஷ்டஈடு வழங்கும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

யுத்தத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் சொத்துக்களை இழந்தவர்களுக்கு நஷ்ட ஈட்டுக் காசோலைகள் அமைச்சரினால் இந் நிகழ்வுகளின் போது வழங்கப்படுகின்றன.

இதேவேளை, புனர்வாழ்வளிக்கப்பட்ட 402 புலி உறுப்பினர்கள் இன்று விடுதலை செய்யப்படுகின்றனர். வவுனியாவில் இந் நிகழ்வு இடம் பெறுவதுடன் அமைச்சர் டியூ குணசேகர இந் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்.

அத்துடன் புனர்வாழ்வளிக்கப்பட்டு தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்ட 7000 இற்கும் மேற்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களுக்குத் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்கும் வேலை வாய்ப்புச் சந்தையொன்றும் இன்று வவுனியாவில் நடைபெறவுள் ளது.

புனர்வாழ்வு சிறைச்சாலைகள் அபிவிருத்தி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ் வேலை வாய்ப்புச் சந்தையில் தெற்கிலிருந்து பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு அவர்கள் பெற்றுக் கொண்டுள்ள பயிற்சிகளை அடிப்படையாகக் கொண்டு ஆடைக் கைத்தொழில், இலத்திரனியல் தொழில் நுட்பம் போன்ற துறைகளில் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாளை இந் நிகழ்வில் கலந்து கொள்ளும் வர்த்தக நிறுவனங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளவர்களை திறமை அடிப்படையில் தேர்ந்தெடுப்பரென அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக