29 செப்டம்பர், 2010

அணுசக்தி ஊடாக மின்சாரம்; இலங்கையில் அணு உலை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆராய விஞ்ஞானிகள் குழு



2020ல் இலங்கையின் அணுசக்தி ஊடாக மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக அணு உலையொன்றை அமைப்பதற்கான சாத்தியக் கூற்றை ஆராய்வதற்காக ஐந்து விஞ்ஞானிகளை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டு ள்ளது.

இந்தக் குழு ஆறு மாதங்களுக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளதோடு அதன் பிரகாரம் அடுத்த கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க கூறினார்.

அண்மையில் வியன்னாவில் நடைபெற்ற உலக அணுசக்தி அதிகார சபையின் வருடாந்த அமர்வு தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,

1950களிலே அணு சக்தியூடாக மின்சாரம் உற்பத்தி செய்வது குறித்து இந்தியா கவனம் செலுத்தியது. பல நாடுகள் அணுசக்தி மூலமே கூடுதலாக மின்சாரம் உற்பத்தியில் செய்கின்றன. இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் மொத்த மின் உற்பத்தி இரண்டு வீதத்தை அணுசக்தி மூலமே மேற்கொள்கின்றன.

அணுசக்தியினூடாக மின் உற்பத்தி செய்வது மிகவும் பெரிய சவாலாகும். அதற்கு முகம் கொடுத்து வெற்றிகொள்ள நாம் தயாராக உள்ளோம். இதற்கு வெளிநாடுகளின் உதவி தேவைப்படும்.

அணுஉலையை எங்கு அமைப்பது? எந்த நாட்டின் உதவியைப் பெறுவது, முதலீட்டார்களின் உதவி போன்ற விடயங்கள் குறித்து இது வரை தீர்மானிக்கப்படவில்லை.

இலங்கையின் பொருளாதாரம் 8.5 வீதத்தை எட்டியுள்ள நிலையில் எமது மின்சக்தி பாவனை கடந்த 8 மாதத்தில் 8 வீதத்தினால் அதிகரித்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் 2018 ஆகும் போது எமது மின்சக்தி தேவை இரண்டு மடங்கால் அதிகரிக்கும்.

அந்த நிலையில் 2020ன் பின் நாடு இருட்டில் புதையும் நிலையே ஏற்படும். அதனால் அணுமின் உற்பத்தி போன்ற மின் உற்பத்திகள் குறித்து இப்பொழுது கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் அணு உலையொன்றை அமைக்க 15 வருடங்கள் பிடிக்கும் 2020-25ற் இலங்கையில் அணு உலையொன்றை அமைக்க இப்பொழுது பூர்வாக பணிகளை முன்னெடுக்க வேண்டும். இதற்கு உதவி வழங்க சர்வதேச அணுசக்தி அதிகார சபை இணக்கம் தெரிவித்துள்ளதோடு வழிகாட்டல்களையும் வழங்கியுள்ளது. அந்த வழிகாட்டல்களை பின்பற்றி நாம் அணு உலை அமைப்பதற்கான பணிகளை முன்னெடுக்க உள்ளோம்.

வியன்னா மாநாட்டின் போது இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, பிரான்ஸ் நாட்டு பிரதிநிதிகளுடனும் பேசினோம்.

அணு உலைக்குத் தேவையான எரிபொருளை ரஷ்யா வழங்குவதோடு அணு உலையில் இருந்து வெளியாகும் கழிவுகளை அந்த நாடு பொறுப்பேற்கும். இது தொடர்பில் ரஷ்யாவுடன் பேச உள்ளோம்.

அணு உலைகளில் யுரேனியத்திற்குப் பதிலாக தோரியத்தை பயன்படுத்தும் புதிய முறையொன்றை இந்தியா கண்டுபிடித்துள்ளது. 30 வீதமான தோரியம் இலங்கை கடற்பரப்பில் காணப்படுகிறது. அது குறித்து நாம் கவனம் செலுத் தியுள்ளோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக