29 செப்டம்பர், 2010

சட்டவிரோத ஆட்கடத்தலைத் தடுக்கும் இலங்கையின் நடவடிக்கைக்கு கனடா ஆதரவு


விசேட பிரதிநிதி விரைவில் கொழும்பு வருகை

‘ஓஸன் லேடி’, ‘சன் சீ’ ஆகிய கப்பல்கள் மூலம் சட்ட விரோதமாக கனடாவுக்கு கொண்டு செல்லப்பட்ட இலங்கையர் தொடர்பாக இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதற்கு உதவும் நோக்கில் கனேடிய அரசு நியமித்துள்ள விசேட பிரதிநிதி விரைவில் கொழும்புக்கு வரவுள்ளார்.

சட்ட விரோத ஆட்கடத்தலை தடுப்பதற்கு இலங்கையும், கனடாவும் இணைந்து செயற்படுவதென இரு நாடுகளினதும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்களும் இணக்கம் கண்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (25) நியூயோர்க்கில் சந்தித்து பேசியபோதே இவர்கள் இணக்கம் கண்டிருக்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் 65 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக நியூயோர்க் சென்ற வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் அங்கு கனடா, ஸ்பெயின் மற்றும் கொரிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கனேடிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் லோரன்ஸ் கனோன், ஸ்பானிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மிகெல் ஏஞ்சல் மொராட்டினஸ் கியூயோடே மற்றும் கொரிய குடியரசின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சின் கன் யூ ஆகியோரை கடந்த சனிக்கிழமை (25) நியூயோர்க்கில் வைத்து அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் சந்தித்துப் பேசியுள்ளார்.

கனேடிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது பயங்கரவாதத்தை தோற்கடித்த பின்னர் மீந்துள்ள விடுதலை புலிகளின் செயற்பாடுகள் கனடா உள்ளிட்ட வேறு நாடுகளில் இடம் பெறுவதாக அமைச்சர் பீரிஸ் கனேடிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சரிடம் விபரித்தார்.

அதேவேளை கனடாவில் விடுதலைப் புலிகள் மற்றும் முன்னணி அமைப்புகளின் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக கனடா எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி கனேடிய அமைச்சர் இலங்கை அமைச்சர் பீரிஸிடம் விளக்கினார். விடுதலைப் புலிகள் இயக்கம் கனடாவில் ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம் என்பதையும் கனேடிய அமைச்சர் இங்கு வலியுறுத்தினார்.

ஸ்பானிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மிகேன் ஏஞ்சல் மெரராடி கியூயோடேயுடனான பேச்சுவார்த்தையின் போது பயங்கரவாதத்தை வெற்றிகரமாக முறியடிப்பதற்கு இலங்கை மேற்கொண்ட நடவடிக்கைகளை ஸ்பானிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பாராட்டினார். உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு இலங்கையும் ஸ்பெயினும் பங்களிப்பு வழங்குவது பற்றியும் அங்கு கலந்துரையாடப்பட்டது.

கொரிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சருடனான சந்திப்பின் போது கொரிய குடியரசு பல்வேறு துறைகளில் இலங்கைக்கு வழங்கும் ஆதரவு தொடர்பாக அமைச்சர் பீரிஸ் கொரிய அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். இலங்கையின் மனித வளத்தை கொரியாவுக்கு பெற்றுக் கொள்வதை எதிர்காலத்தில் அதிகரித்துக் கொள்ள தீர்மானித்துள்ளதையிட்டும் அமைச்சர் பீரிஸ் பராட்டினார்.

405 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 20 வேலைத் திட்டங்களை கொரிய அரசாங்கம் தற்போது இலங்கையில் செயற்படுத்தி வருகிறது. அத்துடன் கொரிய வேலை வாய்ப்புகளில் இலங்கைக்காக வழங்கப்பட்ட ஒதுக்கீட்டில் 44 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக