2 ஏப்ரல், 2010

தமிழ் மக்கள் இழந்த அனைத்தையும் விரைவில் மீளப் பெற்றுக் கொடுப்போம்




யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு

வடக்கை வளமாக்கும் திட்டம்

மகாவலி கங்கை வடக்கிற்கு திரும்பும்

ஆசியாவில் உன்னத நாடாக இலங்கையை கட்டியெழுப்ப பங்காளராகுங்கள்


தமிழ் மக்கள் கடந்த 30 வருடகாலங்களில் இழந்த அனைத்தையும் நாம் விரைவாக மீளப்பெற்றுக்கொடுப்போமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டர ங்கில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்குத் தலைமை வகித்து உரையாற் றிய ஜனாதிபதி;

வடக்கை வளமாக்கும் திட்டம் எம்மிடமுண்டு. பயம், சந்தேகம், அடக்குமுறையற்ற நாட்டைக் கட்டியெழுப்ப நாம் இன, மத, குல, பிரதேச பேதமின்றி இணைந்து செயற்படுவோ மெனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்து எனது வெற்றிக்குப் பங்களிப்புச் செய்தவர்களுக்கும், வேறு எந்தக் கட்சிக்கு வாக்களித்தாயினும் வாக்களிக்கும் உரிமையைப் பெற்று ஜனநாய கத்தை நிலை நிறுத்தியமைக் காகவும் அவர்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

விடுதலைப் புலிகளினால் வடக்கு, கிழக்கு மக்களின் வாக்களிக்கும் உரிமை தடுக்கப்பட்டிருந்தது. அந்த ஜனநாயக உரிமையை மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதே எமது முக்கிய நோக்கமாக இருந்தது. அதனைச் செயற்படுத்திய மக்களுக்கு மீண்டுமொரு முறை பாராட்டினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 30 வருடகாலம் வடக்கு மக்களுக்குக் கிட்டாத அபிவிருத்தியினை மீளப் பெற்றுக்கொடுத்து மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதே எமது முக்கிய நோக்கமாகும்.

வடக்கு மக்களின் விவசாயம், ஏனைய தொழில்துறைகளை மேம்படுத்தி அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை நாம் இப்போதே ஆரம்பித்துவிட்டோம் என்பதை நான் குறிப்பிடவிரும்புகின்றேன். தெற்கிலிருந்து வாய்க்கால்கள் மூலம் யாழ்ப்பாணத்திற்கு நீரைப்பெற்றுக்கொள் வதற்கான திட்டமொன்றை நாம் விரைவில் நடைமுறைப்படுத்தத் தீர்மா னித்துள்ளோம். மக்களுக்கு குடி நீரும் விவசாயத்திற்கான நீரும் இதன் மூலம் கிட்டுவது உறுதி.

இரணை மடுக் குளத்தினூடாக இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படவுள்ளதுடன் மகாவலி கங்கை நீரை யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு வருவதற்கான மற்றுமொரு திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. சகல இன, மத, குல மாகாண மக்களையும் நாம் ஒன்றாகவே பார்க்கிறோம். எம்மிடம் எவ்வித வேறுபாடும் ஒருபோதுமில்லை. சகலருக்கும் ஒரே அகப்பையிலேயே அளக்கிறோம் என்பதை தமிழ் மக்கள் மறந்துவிடக்கூடாது.

இந்நாட்டினைப் பீடித்திருந்த 30 வருட பயங்கரவாதம் இன்றில்லை. சகல மக்க ளும் பயம் சந்தேகமின்றி சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ வழிவகுக்கப்பட்டுள் ளது. மக்கள் வழிபாட்டுத் தலங்களுக்கும், பாடசாலை, சந்தை என சகல இடங்க ளுக்கும் அச்சமின்றி போய்வரமுடியும். எம்மிடம் தமிழ், சிங்கள இனம் மற்றும் மாகாண பேதங்கள் இல்லை.

நாம் ஒரு தாய் மக்கள். இன ரீதியான அரசி யல் நோக்கங்கள் இனியும் இருக்கக்கூடாது. நாம் எதிர்காலத்தில் கிராம சபைகள் மற்றும் மக்கள் சபைகள் மூலம் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளோம். இவற்றில் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உங்கள் பிரதிநிதிகளே உள்ளனர். அவர்கள் உங்கள் தேவைகளை நிறைவேற்றுவார்கள்.

வடக்கில் பல வருடகாலம் பின்னடைவு கண்டிருந்த அபிவிருத்தி இப்போது நடைமுறைப்படுத்தப்படுகிறது. கல்வி, விவசாயம், சுகாதாரம், மீன்பிடி, நீர், போக்குவரத்து வசதிகள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளன.

புலிகளும் ஐக்கிய தேசியக் கட்சியினரும் என்ன செய்தனர் என்பது மக்களுக்குத் தெரியும். ஆசியாவின் பிரபல நூலகமான யாழ் நூலகத்தை எரித்தவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியினரே. இது இந்நாட்டின் எதிர்கால சந்ததிக்குச் செய்யப்பட்ட பெருந்துரோகமாகும். இன்னும் பலர் புலிகளின் வலையில் சிக்கி செயற்படுகின்றனர்.

30 வருட துயர வாழ்க்கை இனியும் வேண்டுமா என நான் கேட்க விரும்புகிறேன். நாட்டி னதும் உங்கள் பிள்ளைகளினதும் எதிர்காலம் பற்றி சிந்தித்து புத்தியுடன் தீர்மானம் எடுப்பீர்கள் என நான் நினைக்கின்றேன். எமது முன்னணியில் தமிழ், முஸ்லிம் மக்களும் உள்ளனர். உங்கள் பிரதேசம் இன்னும் வளமாக மாறும். குறுகிய எண் ணம் வேண்டாம். ஆசியாவின் உன்னத நாடாக இலங்கையை மாற்றும் நோக்கில் நீங்களும் பங்காளர்களாகுங்கள். பயம், சந்தேகம், அடக்குமுறையற்ற நாட்டை நாம் இணைந்து கட்டியெழுப்புவோம்.

தவறான பொய்ப்பிரசாரங்களுக்கு துணைபோக வேண்டாம். வெற்றிலைச் சின்னம் உங்களினதும், உங்கள் பிள்ளைகளினதும் நாட்டினதும் வெற்றியாகுமெனவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக