2 ஏப்ரல், 2010

புளொட் தலைவர் திரு.த.சித்தார்த்தன் உள்ளிட்ட பிரதிநிதிகள் செட்டிகுளம்,






நிவாரணக் கிராம மக்கள் மற்றும், வவுனியா மக்களுடன் சந்திப்பு- வன்னி மாவட்டத்தில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களான புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் கந்தையா சிவநேசன் (பவன்) மற்றும் புளொட் முக்கியஸ்தர்களும், ஆதரவாளர்களும் நேற்றுமுற்பகல் செட்டிகுளம், கதிர்காமர் நிவாரணக் கிராம மக்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது முகாம் மக்கள் தமது நிலைமைகள் மற்றும் அத்தியாவசியத் தேவைகள் என்பன தொடர்பில் எடுத்துக் கூறினர். இந்நிலையில் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குறிப்பிட்ட புளொட் தலைவரும் புளொட் அமைப்பாளரும், முகாம்களில் உள்ளோரின் மீள்குடியேற்றம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து அத்தியாவசியத் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென்றும், இதற்கான உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர். மேலும் கட்சியின் கடந்தகால வேலைத்திட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தியதுடன், இப்பணிகளைத் தொடர்வதற்கு மக்களின் பூரண ஒத்துழைப்பும் ஆதரவும் வேண்டுமென்றும் எனவே பொதுத் தேர்தலின்போது நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களுக்கு மக்கள் பூரண ஆதரவை வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஆச்சிபுரம், எல்லப்பர் மருதங்குளம், கல்வீரன்குளம் ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்த புளொட் தலைவர் த.சித்தார்த்தன் மற்றும் புளொட் முக்கியஸ்தரும் வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் ஆதரவாளர்கள் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர். இக்கிராமங்களைச் சேர்ந்த மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மூன்று கூட்டங்களிலும் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் மற்றும் வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவர் ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் உரையாற்றினர். இதன்போது தமது கட்சியின் கடந்தகால வேலைத்திட்டங்கள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் எடுத்துக் கூறியதுடன், தமது பணிகளை மேலும் தொடர்வதற்கு மக்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மிக அவசியமென்றும் குறிப்பிட்டனர். மேலும் பொதுத் தேர்தலின்போது நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களுக்கு மக்கள் பூரண ஆதரவை வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக