2 ஏப்ரல், 2010

புளொட் தலைவர் த.சித்தார்த்தன் உள்ளிட்ட புளொட் வேட்பாளர்களும், சர்வதேச கிளை அமைப்பாளர்களும் செல்வம், காண்டீபன்,தயா, ராஜா செட்டிகுளம் முகாமிற்கு விஜயம்

- நங்கூரம் சின்னத்தில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களான புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்திய அமைப்பாளரான கந்தையா சிவநேசன் (பவன்), முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன், துரைசாமி சுந்தர்ராஜ் (சிவசம்பு), வரோனிகா (இந்திரா) மற்றும் புளொட் அமைப்பின் கனடா, லண்டன், நோர்வே கிளைகளின் அமைப்பாளர்களான செல்வம், காண்டீபன், தயா, ராஜா ஆகியோரும், திரு.தர்மலிங்கம் உள்ளிட்ட புளொட் பிரதிநிதிகளும், ஆதரவாளர்களும் இன்று வவுனியா செட்டிகுளம் சோன் 04 நிவாரணக் கிராமத்திற்கு விஜயம் செய்தனர். இதன்போது அங்குள்ள இடம்பெயர்ந்த மக்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்து கொண்டனர். தாம் குடிநீர், வீட்டு வசதி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் துன்பப்படுவதாகவும், தாம் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டால் இவ்வாறான பிரச்சினைகளிலிருந்து விடுபடலாமென நம்புவதாகவும் அம்மக்கள் தெரிவித்தனர். இதன்போது கருத்துரைத்த புளொட் தலைவர் .சித்தார்த்தன் உள்ளிட்ட புளொட் வேட்பாளர்களும், புளொட் அமைப்பின் வெளிநாட்டு கிளைகளின் அமைப்பாளர்களும், இடம்பெயர்ந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அடிப்படைத் தேவைகள் யாவும் நிவர்த்தி செய்யப்பட வேண்டுமென்பதில் மிகவும் அக்கறையாகவே இருக்கிறோம். முகாம்களில் உள்ளோரின் மீள்குடியேற்றம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து அத்தியாவசியத் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். மீள்குடியமர்ந்துள்ள மக்கள் தமது விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு அத்தியாவசிய உதவிகள் தேவைப்படுகின்றது. எனவே அதற்குத் தேவையான உதவிகளை வழங்கவும், திறக்காமலிக்கும் பல பாடசாலைகளையும் திறந்து கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்கச் செய்யவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. அத்துடன் தடுப்பு முகாம்களில் உள்ள சிறுவர் போராளிகளை விடுவிப்பது தொடர்பிலும் உரிய கவனம் செலுத்தி அவர்களை விடுவிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தோம். கணிசமானளவு சிறுவர் போராளிகள் தற்போது பெற்றோரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர். எனினும் இன்னும் பல சிறுவர் போராளிகள் தடுத்து வைக்கபட்டுள்ளனர். அவர்களையும் விடுவித்து பெற்றோரிடம் சேர்ப்பிக்க மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றோம். இப்பணிகளைத் தொடர்வதற்கு மக்களின் பூரண ஒத்துழைப்பும் ஆதரவும் எமக்குத் தேவைப்படுகிறது. எனவே பொதுத் தேர்தலின்போது நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களுக்கு மக்கள் பூரண ஆதரவை வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக