17 செப்டம்பர், 2010

சமாதானத்தை நிலைநாட்ட இளைஞர்கள் ஒன்றுபடவேண்டும்: நீல் பூனே

இந்த வருட சமாதான தினத்தை இளைஞர்களுக்காக ஐக்கிய நாடுகள் சபை அர்ப்பணித்துள்ளது. உலகத்தில் சமாதானத்தை நிலைநாட்ட இளைஞர்கள் ஒன்றுபடவேண்டும் என ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதியும் மனிதநேய ஒருங்கிணைப்பாளருமான நீல் பூனே தெரிவித்தார்.

சமாதான தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை தூதுவராலயத்தில் இன்று இடம்பெற்ற வைபவத்தின் போது நீல் பூனே மேற்படி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,"இலங்கை உள்ளடங்கலாக நெருக்கடியில் இருந்து மீண்டெழும் நாடுகளில் இளைய சமுதாயத்திற்கு வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கும் முகமாக சமாதான தினத்தை இளைஞர்களுக்காக ஐ.நா பிரகடனப்படுத்தியுள்ளது. இவ்வருட சமாதான தினத்தின் தொனிப்பொருள் சமாதானம், இளைய சமுதாயம், அபிவிருத்தி என ஐ.நாவின் செயலாளர் பான் கீ மூன் பிரகடனப்படுத்தியுள்ளார். உலகளாவிய சமாதானத்தை கட்டியெழுப்பும் முகமாக இளைஞர்கள் ஒன்றுபட வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இவ்வைபவத்தில் இலங்கையின் வெளிநாட்டுச் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் குனியோ தகாஷி ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக