17 செப்டம்பர், 2010

பீரிஸ் அடுத்த மாதம் இந்தியா விஜயம்



இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அடுத்த மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன. இந்தியாவில் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள ஆர்.கே. மிஷ்ரா ஞாபகார்த்த நிகழ்வில் உரை நிகழ்த்தும் பொருட்டே வெளிவிவகார அமைச்சர் இந்தியா பயணமாகவுள்ளார்.

இந்த விஜயத்தின்போது அரசியல் தீர்வு விடயம் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் வேலைத்திட்டங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி நடவடிக்கைள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஜீ.எல். பீரிஸ் இந்திய உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் பீரிஸ் சந்தித்து பேசவுள்ளார். இதேவேளை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.

இந்திய வெளியுறவு அமைச்சரின் இலங்கை விஜயத்துக்கான ஏற்பாடுகள் வெளிவிவகார அமைச்சின் ஊடாக விரைவில் இடம்பெறும் என்று அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். இலங்கை மற்றும் இந்திய நாடுகளின் இருதரப்பு விடயங்கள் குறித்து ஆராய்வதற்கான நியமிக்கப்பட்டுள்ள கூட்டு ஆணைக்குழுவின் அமர்வு ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் இலங்கையில் நடைபெறவுள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது இலங்கை விஜயத்தின்போது அந்த ஆணைக்குழுவின் அமர்விலும் கலந்துகொள்வார் என்றும் அமைச்சின் உயர் அதிகாரி குறிப்பிட்டார்.

மேலும் இடம்பெயர்ந்த மக்களின் நிலைமை அவர்களுக்கான வசதிகள் குறித்தும் இந்திய வெளியுறவு அமைச்சர் இலங்கை விஜயத்தின்போது ஆராய்வார் என்றும் தெரியவருகின்றது.

இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக