6 ஜூலை, 2010

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் மீள்குடியேற்றம் யாழ். அரசாங்க அதிபருக்கு அறிவுறுத்தல்

யாழ். குடாநாட்டின் அதிஉயர் பாது காப்பு வலயங்களில் கட்டம் கட்டமாக மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட விருப்பதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் எம். பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை, பாதுகாப்பு அமைச்சின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி மேற்கொள்ளுமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கே. கணேஷணுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருப்பதாகவும் அமைச்சின் செயலாளர் கூறினார்.

யாழ். தெல்லிப்பளை, கோப்பாய் மற்றும் யாழ். குடாநாட்டின் மேற்குப் பிரதேசங்களில் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலேயே மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு அமைச்சினால் அறிவுறுத் தப்பட்டுள்ளது.

அமைச்சின் அதிகாரிகள் அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தபோது, அங்கு அரசாங்க அதிபருடன் நடந்த கலந்துரையாடலின் போதே அதியுயர் பாதுகாப்பு வலயப் பிரதேசங்களில் மக்களை மீள்குடியேற்றுவது குறித்து அரச அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் செயலாளர் திஸாநாயக்க கூறினார்.

இதன்படி யாழ். குடாநாட்டின் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் மீள்குடியேற்றத்தை கட்டம் கட்டமாக ஆரம்பிப்பது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான அனுமதி அரச அதிபருக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் அது தொடர்பான கலந்துரை யாடல்களை தற்போது ஆரம்பித்திருப் பதாகவும் செயலாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உபய மதவளவுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, யாழ். குடாநாட்டின் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பான கலந்துரையாடல் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அது குறித்து விரைவில் சாதகமான பதில் கிடைக்குமென்ற நம்பிக்கையிருப் பதாகவும் கூறினார்.

அரச அதிபர் கே. கணேஷ் இவ்விடயம் தொடர்பில் யாழ். பாதுகாப்புக்கு பொறு ப்பான கொமாண்டர் மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவுடன் கலந்துரையாடி வருகின்றார். அப்பகுதிகளில் தற்போது நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக