26 ஏப்ரல், 2010

புதிய தேர்தல் முறை குறித்து மலையக நா.உறுப்பினர்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும்: சதாசிவம்

அரசாங்கம் தேர்தல் முறையில் மாற்றத்தினைக் கொண்டு வருவதற்கு தயாராகி வருவதால் புதிய தேர்தல் முறையால் மலையகத்தமிழ் மக்களுக்கு எவ்விதமான பாதகமும் ஏற்படாதவகையில் மலையகத்தமிழ் மக்கள் சார்பான பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவேண்டும் என்று இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் தெரிவித்தார்.

தலவாக்கலை வினோ மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது,

"தற்போதுள்ள தேர்தல் முறையை மாற்றி தொகுதி ரீதியான தேர்தல் முறை ஒன்றினை ஏற்படுத்துவதில் அரசாங்கம் முனைப்புடன் செயற்பட போகின்றது.இவ்வாறான சந்தர்ப்பத்தில் இந்தத்தொகுதி ரீதியான தேர்தல் முறையில் மலையகத் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தைத் தக்கவைத்தும் கொள்ளும் வகையில் அந்தப்புதிய தேர்தல் சீர்த்திருத்தம் ஏற்படுத்த வேண்டுமென மலையகத்தமிழ் மக்கள் சார்பான நாடாளுமன்ற பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் மலையகத்தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக உரிய வகையில் சிந்தித்துச் செயற்படாத காரணத்தினால் கண்டி ,பதுளை போன்ற மாவட்டங்களில் எமது சமூகம் சார்ந்த நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆனால் இலங்கையில் வாழுகின்ற ஏனைய சமூகத்தினர் உரியவகையில் சிந்தித்து தமது நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றிக்கொண்டுள்ளனர்.இதனால் இந்தச்சமூகத்தினரின் பேரம் பேசும் சக்தி தொடர்ந்து உள்ளது.

ஆனால் மலையகத்தமிழ் மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் எதிர்பார்க்கப்பட்டதைப்போல கிடைக்காத காரணத்தினால் இன்று பெரும்பான்மைக் கட்சிகள் எமக்கான முக்கியத்துவத்தினைக் குறைக்கத் தொடங்கியுள்ளன.

இந்த நிலைமை எதிர்வரும் தேர்தல் சீர்த்திருத்த முறையின் மூலமாக மேலும் தொடரக்கூடிய நிலைமை ஏற்பட போவதால் இதனைத் தற்போதே உணர்ந்து கொண்டு புதிய தேர்தல் முறையால் மலையகத்தமிழ் மக்களுக்குப்பாதகம் ஏற்படாத வகையில் நாடாளுமன்றத்தில் ஒற்றுமையாக குரல் கொடுப்பதற்கு எமது பிரதிநிதிகள் முன்வர வேண்டும்." எனத் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக