26 ஏப்ரல், 2010

அவசரகாலச் சட்டத்தை ரத்து செய்ய அரசு பரிசீலனை : அமைச்சர் பீரிஸ்

நாட்டில் அவசரகால சட்டத்தை ரத்து செய்வது பற்றி அரசாங்கம் பரிசீலித்து வருவதாக புதிதாகப் பதவியேற்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் அதற்கான கால வரையறை எதனையும் அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நிலவும் மனித உரிமை தொடர்பில் சர்வதேச அரங்கில் தொடர்ந்து அக்கறை செலுத்தப்பட்டு வருகின்றது. இந்தச் சூழலில், அமுலில் இருந்துவரும் அவசர காலச் சட்டமும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டமும் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

விடுதலைப் புலிகளுடனான யுத்தம் தற்போது முற்றுப் பெற்றுவிட்ட நிலையில், நாட்டில் அவசரகாலச் சட்டம் தேவையில்லை என்ற கருத்தும் மேலோங்கி வருகிறது.

மனித உரிமைகள் தொடர்பில் புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள், வெளியுறவு விவகாரங்களில் இலங்கையின் நிலையை முன்னேற்ற உதவும் என்று கருதப்படுகிறது.

நாட்டின் பாதுகாப்பு சூழல் மேம்பட்டுள்ள ஒரு நிலையில், அரசாங்கம் சில பாதுகாப்பு விதிகள் குறித்து மீள்பார்வை செய்துவருவதாகவும், இதன் அடிப்படையில் அரசாங்கம் விரைவில் அறிவிக்கவுள்ள சில திட்டங்கள் சர்வதேச அரங்கில் வரவேற்பைப் பெறும் என்றும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

புதிய அரசின் வெளிவிவகார கொள்கை

நாட்டின் பொருளாதாரமும் வேலை வாய்ப்பும் மேம்படும் வகையில் புதிய அரசின் வெளிவிவகார கொள்கை அமையும் என்று பீரிஸ் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"நாட்டில் இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், மற்ற நாடுகளுடனான நல்லுறவுகளை மேம்படுத்துவதில் முனைந்து செயல்படுவது என்பதுதான் எமது வெளியுறவு கொள்கையின் அடிநாதமாக இருக்கும்.

பூட்டான் தலைநகர் திம்புவில் நடக்கவுள்ள தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் (சார்க்) மாநாடு நடக்கும்போது ஜனாதிபதி இந்தியப் பிரதமரைச் சந்திக்கும் வாய்ப்புள்ளது. இதனை எமது அரசாங்கம் வரவேற்கிறது. அதன்போது இருதரப்பு விவகாரங்கள் விவாதிக்கப்படும்.

ஆனாலும் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எந்தப் பிரேரணையையும் சார்க் கூட்டத்துக்கு அரசு கொண்டு செல்லவில்லை" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக