25 பிப்ரவரி, 2010

உலகத்தமிழர் பேரவை மாநாட்டில் பிரித்தானிய பிரதமர்,வெளிவிவகார அமைச்சர் கலந்துகொண்டனர்







பிரித்தானிய பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை உலகத்தமிழர் பேரவையின் மாநாடு ஆரம்பமாகியுள்ளது.இந்நிகழ்வில் பிரித்தானிய பிரதமர் கோடன் பிறவுண் மற்றும் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளனர்.நேற்று புதன்கிழமை ஆரம்பமான இந்நிகழ்வு நான்கு நாட்கள் வரை நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வை பிரித்தானிய வெளிநாட்டு வெளிவிவகார செயலாளர் டேவிட் மிலிபாண்ட் அவர்கள் தொடக்கிவைத்து உரையாற்றுகையில்,

"தமிழ் மக்கள் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்று பட்டு, ஓர் அணியில் செயற்பட வேண்டும் எனவும், இன்றைய சூழலில் புலம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்கள் தொடர்ந்தும் தங்களது கோரிக்கைகளை சர்வதேச சமூகத்திடம் எடுத்துரைக்க வேண்டும்" எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை உலகத்தமிழர் பேரவையின் குழுவினர் பிரித்தானியப் பிரதமமந்திரி கோர்டன் பிறவுண் அவர்களுடனும் சந்திப்பை மேற்கொண்டிருந்தனர்.

உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களை ஒன்றிணைத்து தாம் ஓர் அணியில் திரள வேண்டும் என்று தீர்மானித்து ஆகஸ்ட் 2009 இல் பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் உருவாக்கியதே உலகத் தமிழர் பேரவை.

அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், டென்மார்க், நோர்வே, சுவீடன், ஜோ்மனி, நெதர்லாந்து, சுவிஸ், இத்தாலி, மொறிசியஸ், மலேசியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 15 நாடுகளின் தமிழ் அமைப்புக்களின் ( தமிழீழ மக்கள் பேரவை-பிரான்ஸ், ஐரோப்பியத் தமிழர் ஒன்றியம், பிரித்தானிய தமிழர் பேரவை, நோர்வே தமிழர் பேரவை, டென்மார்க் தமிழர் பேரவை, சுவிடன் தமிழர் பேரவை, இத்தாலி தமிழர் பேரவை, தமிழினப் படுகொலைகெதிரான அமைப்பு-மொறியஸ், நியூசிலாந்து தமிழ்ச் சங்கம், அவுஸ்திரேலியன் தமிழர் காங்கிரஸ், கனடா தமிழர் காங்கிரஸ் ( ஙஹஙீஹட்சூகூஹ பஹஙுகூஙீ தக்ஙீகூக்கி கிஞிஙூக்ஷ & ஙஹஙீஹட்சூகூஹஙூ பஹஙுகூஙீ ஊச்சுஞிஙு) அமெரிக்க தமிழர்களின் அரசியல் செயல் அவை, வெலிங்டன் தமிழர் அமைப்பு, சுவிஸ் தமிழர் அமைப்பு, ஜோ்மனி தமிழர் அமைப்பு, பெல்ஜியம் தமிழர் அமைப்பு, நெதர்லாந்து தமிழர் அமைப்பு, அவுஸ்திரேலியா தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு ) பிரதிநிதிகளும் உலகத்தமிழர் பேரவையின் உருவாக்கத்திற்கு அடிக்கற்களாக இருந்து ஓர் அணியாக தமது வேலைத்திட்டங்களை ஒருங்கிணைத்து சமகால அரசியல் சூழலுக்கு அமைய தமிழீழத்தை நோக்கிய பயணத்தில் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

இந்த அமைப்புக்களின் கூட்டு முயற்சிகளின் முதல் வேலைத்திட்டங்களாக இலங்கைக்கெதிரான பொருளாதாரத்தடையை உருவாக்குவதோடு அதன் அடிப்படையில் இலங்கைக்கெதிரான வரிச்சலுகைகளை நிறுத்தக்கோரி அரசியல் மட்டங்களில் அழுத்தங்களைக் கொடுப்பதாகவும் இருக்கிறது.

அத்துடன் தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், உறுப்புக்களை இழந்தோருக்கும் உதவவும், பெற்றோர், உறவினர்களிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவவும், தடுத்து வைக்கப்பட்டிருப்போருக்கு உதவவும் நாட்டில் உள்ள மானிடநேய அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து செயற்திட்டங்களை உருவாக்கும் முயற்சிகளை பல தடைகளையும் மீறி செய்து வருகிறது.

இதன் முக்கிய வேலைத்திட்டமாக

1. )இலங்கையில் சிறைகளிலும், முகாம்களிலும், சட்டரீதியான எந்தவித நடிவடிக்கையும் எடுக்காமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்மக்களை விடுவிக்க வழிவகைகளை தேடுவதற்கும், அதற்கான துரித செயற்பாட்டை மேற்கொள்ளவும் உலக சட்டவாளர்களுடன் இணைந்து பணியாற்றுதல்.

2. ) போர்க்குற்றங்கள், மானிடநேயத்திற்கெதிரான குற்றங்களை இழைத்த இலங்கை அரசை உலக நீதிமன்றம் முன்னால் நிறுத்துதல்.

3. ) அந்நிய நாடுகளின் துணையுடன், தமிழ் மக்களின் வாழ்வுரிமைக்கான வழிவகைகளை தேடுவது போன்ற பல திட்டங்களை ஒரு ஒருங்கிணைந்த வேலைத்திட்டமாக செயல்படுத்தும் முகமாக பெப்ரவரி 24 ஆம் திகதி முதல் லண்டன் நகரில் அரசியல் பிரமுகர்களுடன் பல்லின மக்களின் முன் உலகத் தமிழர் பேரவை தனது அமர்வை நடாத்த ஆரம்பித்துள்ளது.

இலங்கை அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து அழுத்தம் கொடுப்போம்: கோர்டன் பிறவுண்

பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிறவுணை, நேற்று பிரித்தானிய பாராளுமன்ற கட்டிடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட உலகத் தமிழர் பேரவை அமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்து உரையாடியுள்ளனர்.

பாராளுமன்றக் கட்டிடத்தில் இடம்பெற்ற சந்திப்பில், உலகத் தமிழர் பேரவை முன்னெடுக்கவுள்ள மக்களை விடுவித்தல், போர்க்குற்ற விசாரணைக்கான செயற்பாடுகள், மற்றும் மக்களின் மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டதுடன், தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசை பற்றியும் வினயமாக எடுத்துரைக்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்த கோர்டன் பிறவுண், இலங்கை அரசுக்குக்கான தமது அழுத்தம் தொடர்ந்து வருவதாகவும், அண்மையில் அதிபர் தேர்தல் நடைபெற்றபோதுகூட அரசின் சனநாயக விரோதப்போக்கைக் கண்டித்து கடிதம் எழுத்தியிருந்ததாகவும் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் பற்றிய விடயத்தில் இலங்கை அரசு அலட்சியத் தன்மையைக் கடைப்பிடித்தால், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆராயப்படும் எனவும் அவர் கூறினார்.

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்தவிடாது தடுத்து, அவுஸ்திரேலியாவில் நடத்துவதற்கு தான் ஏற்பாடு செய்திருப்பதைச் சுட்டிக்காட்டிய பிரித்தானியப் பிரதமர் கோர்டண் பிறவுன், தமது அரசு முடிந்தளவு மேலும் பல அழுத்தங்களை இலங்கை அரசுக்குக் கொடுக்கும் எனக் கூறினார்.

தமிழ் மக்களின் விருப்பு பற்றி தமிழீழத்தில் கருத்துக் கணிப்பு நடத்துவது பற்றி உலகத் தமிழர் பேரவையின் அங்கத்தவர்கள் சுட்டிக்காட்டியபோது, அதனை தமது அரசு மட்டும் தனித்து செய்துவிட முடியாது எனவும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்தே இதற்கான செயற்பாடுகளில் இறங்க வேண்டும் எனவும் கோர்டன் பிறவுண் கூறினார்.

பிரித்தானியப் பிரதமருடனான உலகத் தமிழர் பேரவையின் சந்திப்பு, பிரித்தானிய வெளிவிகார அமைச்சர் உட்பட பல அமைச்சர்கள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உலகத் தமிழர் மாநாட்டில் கலந்து கொண்டமை போன்ற விடயங்கள், கொழும்பு அரச வட்டாரத்தில் பாரிய எரிச்சலைக் கிளப்பியுள்ளதுடன், அரச மட்டத்திலான கருத்து மோதல்களையும் தோற்றுவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக