25 பிப்ரவரி, 2010

2/3 பெரும்பான்மை பெறுவதன் மூலம் சர்வதேசத்தின் நன்மதிப்பு அதிகரிக்கும்



பொதுத் தேர்தலில் மூன்றிலிரண்டு பெற்று நாட்டில் அரசாங்கம் ஏற்படுத்தும் மாற்றத்தினால் சர்வதேச நாடுகளின் நன்மதிப்பும் ஒத்துழைப்பும் மேலும் அதிகரிக்குமென ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் பொதுத் தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர், மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெற்று பலமான அரசாங்கமொன்றை அமைப்பது உறுதியெனவும் தெரிவித்தார்.

மக்களுக்குத் தேவையான நிர்வாக முறை, அரசியலமைப்பில் மாற்றம், செனட் சபை உருவாக்கம், பலமான அரசு என்பவற்றோடு ஏப்ரல் மாதம் முதல் வேகமாக அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதே அரசாங்கத்தின் நோக்கம். நாட்டின் எதிர்கால பயணத்தைக் கருத்திற் கொண்டு மூன்றிலிரண்டு பெரும்பான் மையைப் பெற்றுக் கொள்ள நாட்டு மக்கள் அரசாங்கத்துக்கு முழுமையான ஆதரவினை வழங்க வேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தேசிய அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலையத்தின் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்று தகவல், ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடை பெற்றது. இம்மாநாட்டில் விளக்கமளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த ஜனாதிபதித் தேர்தலை விட 19 மேலதிக ஆசனங்கள் எமக்குக் கிடைத்தால் நாம் மூன்றிலிரண்டைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இதற்காக நாட்டின் சகல மக்களினதும் பூரண ஆதரவு அரசாங்கத்துக்குக் கிடைக்குமென்ற நம்பிக்கை எமக்குண்டு. மக்களுக்குப் பொருத்தமான பாராளுமன்றம், தேர்தல் முறை, சிறந்த அரசியலமைப்பு என்பவற்றை இதன் மூலம், ஏற்படுத்த முடியும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே எதிர்வரும் ஆறு வருடத்திற்கும் ஜனாதிபதி. பலமான நிலையான பாராளுமன்றம் ஆறு வருடத்திற்கு எம்மிடமிருக்கும். இதன் மூலம் நாம் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் போது சர்வதேசம் எமக்கான உதவி ஒத்துழைப்புகளையும் அதிகரிப்பது உறுதியெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக