25 பிப்ரவரி, 2010

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி சந்தேக நபரை அடையாளம் காண்பித்துள்ளார்

இலங்கையின் - கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் புலிபாய்ந்தகல் பிரதேசத்சில் 8 வயது பாடசாலை மாணவியொருவர் இராணுவத்தினரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்டப்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான அடையாள அணி வகுப்பு வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதிமன்றத்தில்
நடைபெற்ற போது சந்தேக நபர்களிலொருவரை பாதிக்கப்பட்ட மாணவி அடையாளம் காட்டியுள்ளார்.

கடந்த 12 ம் திகதி குறிப்பிட்ட மாணவி பாடசாலையிலிருந்து வீடு திரும்பும் போது வழியில் நீராடிக் கொண்டிருந்த இராணுவத்தினரால் வழிமறித்து கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக திகிலிவெட்டை இராணுவ முகாமில் கடமையிலிருந்த இராணுவ சிப்பாய்கள் 6 பேர் சந்தேகத்தின் பேரில் பொலிசாரால் கைதாகி நீதிமன்ற விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்தனர்.

அடையாள அணிவகுப்பு நடைபெற்ற போது அன்றைய தினம் குறித்த முகாமில் கடமையிலிருந்த 49 இராணுவ சிப்பாய்களும் நிறுத்தப்பட்டிருந்ததாக பாதிக்கப்பட்ட மாணவி சார்பில் ஆஜரான சட்டத்தரணி பேரின்பம் பிரேம்நாத் கூறுகின்றார்

4 சுற்றுக்களில் நடைபெற்ற இந்த அடையாள அணிவகுப்பில் இறுதிச் சுற்றிலேயே சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டதாகவும் கூறும் அவர்
குறிப்பிட்ட சந்தேக நபர்கள் 6 பேரும் தொடர்ந்தும் எதிர்வரும் 3 ம் திகதி வரை நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக