9 ஜூன், 2011

இலங்கைக்கு எதிரான சர்வதேச சக்திகளுக்கு எதிராக ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்





இலங்கைக்கு எதிரான சர்வதேச சக்திகளை ஒடுக்க வழங்கி வரும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இலங்கைக்கு எதிரான சர்வதேச சக்திகளுக்கு எதிராக கட்சி பேதங்களை மறந்து ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமென நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்தினால் நீடிப்பது தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, இலங்கை தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கடந்த மாதத்தில் நாம் பல்வேறு நாடுகளுடன் பேச்சு நடத்தினோம்.

கண்ணிவெடி அகற்றுதல், முன்னாள் புலி உறுப்பினர்களை சமூகமயமாக்கல், அதிஉயர் பாதுகாப்பு வலயங்களை குறைத்தல், தமிழ் பேசும் பொலிஸாரை நியமித்தல், நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகள் என்பன தொடர்பில் நாம் சர்வதேச சமூகத்தை தெளிவு படுத்தினோம்.

எமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த சந்தர்ப்பம் கிடைத்தது. ஜனாதிபதியின் பங்களாதேஷ் விஜயத்தின் போது இலங்கையின் தற்போதைய நிலை குறித்து தெளிவுபடுத்தப்பட்டது. ஓமான் அரசுடனும் பேச்சு நடத்தினோம். குவைத், பஹ்ரைன், எமிரேட் போன்ற நாடுகளுடன் மட்டுமன்றி இந்திய தலைவர்களுடன் பேசினோம்.

அந்த நாடுகளுக்கு எமது நாடு தொடர்பில் நல்ல அபிப்பிராயமே உள்ளது. வெளிநாட்டு உறவின் போது தோஷங்களுக்கு மட்டும் மட்டுப்படாது அந்த நாடுகளுடனான நல்லுறவின் மூலமே பயன்பெற வேண்டும்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கு மிடையிலான உறவு சிறந்த மட்டத்தில் உள்ளது. ரயில் பாதை அபிவிருத்தி, விவசாய முன்னேற்றம் என்பனவற்றுக்கு இந்தியா உதவி வருகிறது.

சீன விஜயத்தின் போது எமக்குக் கிடைத்த ஒத்துழைப்பு ஊக்கமளிக்கக் கூடியதாக உள்ளது. தமது பிரச்சினையை தாமே தீர்ப்பதற்கும் இலங்கை அரசாங்கத்தினாலும் மக்களினாலும் மட்டுமே முடியும் என சீனப் பிரதமர் தெரிவித்தார்.

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் செயற்பாட்டுக்கு உதவ சீனா தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். எமது நாட்டின் பொருளாதார செயற்பாடுகளுக்கு சீனா தொடர்ந்தும் உதவி வருகிறது. எமது நாட்டுக்கு தொடர்ந்து உதவ சீனா இணங்கியுள்ளது.

இந்தோனேசியாவில் நடந்த பொதுநலவாய வெளிநாட்டமைச்சர்களின் மாநாட்டில் பல நாடுகளுடன் பேசினோம்.

சிங்கப்பூர் விஜயத்தின் போது இந்துசமுத்திர பாதுகாப்பு தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு பற்றி பேசினோம். இலங்கை முகம் கொடுக்கும் பாதுகாப்பு பிரச்சினை குறித்து அறிவூட்டினோம். பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் லியம் பொக்ஸ், ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சர், அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் போன்றோரையும் சந்தித்து இலங்கை நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தினோம்.

அவுஸ்திரேலிய செனட் சபை உறுப்பினர் ஸ்ரீபன் ஹசினை இன்று (9) சந்திக்க உள்ளேன்.

சர்வதேச சமூகத்துடன் சிறப்பான முறையில் இலங்கை செயற்படுகிறது. எமது நிலைப்பாட்டை தெளிவாக உலகிற்கு எடுத்துக்கூறி வருகிறோம். இலங்கைக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக செயற்பட சர்வதேச சமூகம் தரும் ஒத்துழைப்பு பாராட்டத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக