6 மே, 2011

ஒசாமா சுடப்பட்ட வீட்டுத் தோட்டத்தில் கஞ்சா செடிகள் கண்டுபிடிப்பு


அமெரிக்கப் படையால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடன் தொடர்பான பல தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகிய வண்ணமே உள்ளன.

இந்நிலையில் ஒசாமா சுட்டுக் கொல்லப்பட்ட பாகிஸ்தானின் அபோடாபாட்டிலுள்ள வீட்டுத் தோட்டத்தில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்ததாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தக் கஞ்சாச் செடிகளின் பெறுமதி சுமார் 1 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.

கோவா மற்றும் கிழங்குப் பயிர்களுடனேயே கஞ்சாவும் பயிரிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒசாமா சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக நம்பப்படுவதனால் கஞ்சாவை அவர் வலி நிவாரணியாக பயன்படுத்தியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இதேவேளை இச் செய்தி வெளியாகியதைத் தொடர்ந்து பல சுவாரஸ்யமான தகவல்களும் வெளியாகியுள்ளன.

அபோடாபாட்டிலுள்ள குறித்த வீட்டில் ஒசாமாவுடன் தங்கியிருந்ததாகக் கூறப்படும் அர்ஷாட் கான் மற்றும் தாரிக் கான் ஆகியோர் அப்பிரதேசத்தில் வாழ்ந்த மற்றையவர்களை விட வசதியானவர்களாக இருந்துள்ளனர்.

அவர்களின் பணியாளர்களுக்கு உயர் ஊதியத்தினை வழங்கியுள்ளனர்.

மேலும் அவ்வீட்டின் அருகில் விளையாடும் குழந்தைகளின் பந்துகள் அவர்களின் வீட்டுத் தோட்டத்திற்குள் விழுந்த சந்தர்ப்பங்களில் புதுப்பந்தினை வாங்குவதற்கு பணம் வழங்குவது அவர்களது வழக்கமெனவும் அப்பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்காகவே பல குழந்தைகள் அவ்வீட்டுத் தோட்டத்தினுள் பந்தை வேண்டுமென்றே வீசுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இத்தகைய காரணங்களே அவர்கள் கஞ்சா வியாபாரம் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளன.

தற்போது அதிகமானோர் இவ்வீட்டினைப் பார்வையிட வரத் தொடங்கியுள்ளதுடன் அவ்வீடும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வீடானது காஷ்மீரில் இயங்கி வரும் ஹிஷ்புல் முஜாயிடீன் அமைப்பிற்குச் சொந்தமான தென இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக