6 மே, 2011

தமிழ் மக்களை இனியும் ஏமாற்ற வேண்டாம்: தயாசிறி எம்.பி.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை அழைத்து தேநீர் கொடுத்து அக்கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தி அதில் ஒருபகுதியினரை அரசாங்கம் தம்வசப்படுத்திக் கொள்வதற்கு முயற்சிக்கின்றது என்று ஐ.தே.க. எம்.பி. யான தயாசிறி தெரிவித்தார்.

தமிழ் மக்களை இனியும் ஏமாற்றி காலத்தை தாழ்த்தி கொண்டிருக்காமல் அதிகார பகிர்வு தொடர்பில் பேச்சுக்களை நடத்தி தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் சொன்னார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஐ.நா. வின் நிபுணர் குழுவின் அறிக்கை, தருஸ்மன் அறிக்கை என பலகோணங்களில் விமர்சிக்கும் அரசாங்கம் அதை தற்போது திருட்டுத்தனமாக அமுல்படுத்தி வருகின்றது. அவசரகாலச் சட்டத்திலுள்ள ஒழுங்கு விதிகளை ஆரம்பித்துள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்கின்றது.

எமது நாட்டில் செயற்படுத்த வேண்டியவற்றை ஐ.நா., தருஸ்மன் கூறுகின்ற வரையிலும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. எமது நாட்டின் ஜனநாயகத்தை நாமே செயற்படுத்த வேண்டும். பயங்கரவாதம் இருந்தபோது நாட்டிற்கு அவசரகாலச் சட்டம் தேவைப்பட்டது. இன்று அச்சட்டம் தேவையில்லை. அதனை நீக்கிவிட வேண்டும். அவ்வாறு செய்யும்போது தான் தருஸ்மன் அறிக்கையினை விலத்தி கொள்ள முடியும்.

புலிகள் ஒழிக்கப்பட்டதும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் தீர்வை பெற்று தருவதாக இந்தியாவிடம் கூறினர். தற்போது கூட்டமைப்புடன் பேச்சு நடத்துகின்றனர்.

கூட்டமைப்பினரை அழைத்து பேசி தேநீர் கொடுத்து கூட்டமைப்பிற்குள் பல பிளவுகளை ஏற்படுத்தி ஒரு பகுதியினரை தம்பக்கம் இழுத்துக் கொள்வதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் ஏனைய நாடுகளுடன் தொடர்புகளை வைத்து கொள்வதற்கான வழியாகவே அதனை பயன்படுத்தி வருகின்றது. அது மட்டுமல்லாது, அமெரிக்கா, இந்தியா, ஐ.நா. என்று ஒவ்வொரு நாட்டிலும் மாறுபட்ட கருத்துக்களையே கூறி வருகின்றது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் அதேவேளை, சிங்கள, முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண வேண்டும்.

இதேவேளை, அரசுக்கு எதிராக மின்னஞ்சல் அனுப்புபவர்களை பற்றி தேடுகிறது. தொலைபேசி உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன. அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவதை தடுக்கவே இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிடும் உரிமை இருக்க வேண்டும். அவ்வாறின்றி ஜனநாயகம், மனித உரிமை மீறப்படுமாயின் ஜனாதிபதி ஏற்கனவே காட்டிய வழியில் சென்று இங்கு இழைக்கப்படும் அநீதிகளை எடுத்து கூறி அவற்றை தடுக்கும் பணிகளை நிறைவேற்ற நாம் தயார் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக